Skip to main content

அ.தி.மு.க ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள்தான் விவசாயிகள் கொண்டாடும் திருநாள்! - மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

dmk

 

“தமிழக விவசாயிகளுக்குத் துரோகம் செய்த அ.தி.மு.க ஆட்சி விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும். இந்த ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள்தான் விவசாயிகள் தங்கள் இல்லங்களில் கொண்டாடும் திருநாள்!” என கூறியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

இன்று (29-10-2020) காலை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் - (மறைந்த) தலைமைச் செயற்குழு உறுப்பினரும் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளருமான மு.காந்தி அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார்.

 

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ஒரத்தநாடு மு.காந்தி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து இருந்தாலும், அவர் ஆற்றிய பணிகள் இப்போதும் - ஏன், எப்போதும் நம் கண் முன் வந்து நிழலாடிக் கொண்டிருக்கும்.

 

ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியச் செயலாளராக மட்டுமின்றி - தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க.வின் போர் வீரராகத் திகழ்ந்தவர் அவர். இந்த இயக்கத்தில் உழைத்த ஒருவர் - பல முக்கியப் பதவிகளுக்கு வர முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் காந்தி அவர்கள்.

 

1996-ல் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். 1998-ல் ஒன்றியக் கழக துணைச் செயலாளர். 2001-ல் புதூர் ஊராட்சி மன்றத் தலைவர். 2006-ல் ஒரத்தநாடு ஒன்றியப் பெருந்தலைவர். ஒருங்கிணைந்த ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர். 2014-ல் இருந்து தனது மறைவு வரை- அவர் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியச் செயலாளர்.

 

இந்த இயக்கம் - திராவிடப் பேரியக்கம் அப்படிப்பட்டது. தன் வளர்ச்சிக்குப் பாடுபட்ட கள வீரர்களைக் கை தூக்கி விட்டு அழகு பார்த்த இயக்கம். இன்றைக்கும் கட்சிக்காக தியாகம் செய்தவர்களை முன்னிறுத்தும் இயக்கம். அதனால்தான் கட்சியின் இன்பத்திலும்- துன்பத்திலும் வளர்ந்த மூத்த கழகத்தினருக்கு “பொற்கிழி” வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

 

அதேபோல், திடீரென்று மறைவெய்தும் கழகக் காளையர்களுக்கு அஞ்சலி செலுத்தி - இந்தக் கரோனா காலத்திலும் காணொலி வாயிலாகப் படத்திறப்பு விழா நடத்தி வருகிறோம். அந்த வகையில் ஒவ்வொரு தொண்டனையும் மதிக்கும் இயக்கம் இந்த இயக்கம் என்பதை நீங்களும் அறிவீர்கள். நானும் அறிவேன்.

 

அப்படித்தான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் இந்தப் பேரியக்கத்தை வளர்த்திருக்கிறார்கள்.

 

இன்றைக்கு நடைபெறும் அ.தி.மு.க ஆட்சி  தமிழகத்தின் சாபக்கேடாக இருக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை - மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கும்பிடு போட்டு ஆதரவு தெரிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி. விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைய வைக்கும் நெல்லுக்கு அ.தி.மு.க அரசு கொடுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையே போதாது. அந்தக் குறைந்த பட்ச விலைக்கும் மூன்று வேளாண் சட்டங்களில் உத்தரவாதம் இல்லை.

 

பஞ்சாப் மாநிலத்தில் குறைந்த பட்ச ஆதார விலைக்குக் கீழ் நெல் வாங்க தடை போட்டுச் சட்டம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்படி ஒப்பந்தம் போடும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை என்று கூறுகிறது அந்தச் சட்டம். பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கு உள்ள தைரியம் திரு. பழனிசாமிக்கு இல்லை. அப்படியொரு சட்டத்தை தமிழகச் சட்டமன்றத்திலும் கொண்டு வாருங்கள் என்று தி.மு.க வலியுறுத்தியது.

 

நானே முதலமைச்சர் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தேன். ஆனால் இன்றுவரை அதற்கு பழனிசாமி தயாராக இல்லை. கொஞ்சம் கூட மனச்சாட்சியே இன்றி வேளாண் சட்டங்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டு இன்றைக்கு மாட்டு வண்டி ஓட்டி – விவசாயிகளை ஏமாற்றுகிறார்.

 

குறைந்தபட்ச ஆதார விலை மட்டுமல்ல - விவசாயிகளின் நெல்லைக் கூட கொள்முதல் செய்யப் பழனிசாமிக்கு மனமில்லை. போதிய நேரடிக் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தவில்லை. ஈரப்பதம் அதிகம் இருந்தாலும் கொள்முதல் செய்யுங்கள் என்று நான் விடுத்த வேண்டுகோளை இதுவரை ஏற்கவில்லை.

 

1,000 மூட்டை நெல்லுக்கு மேல் கொள்முதல் செய்யமுடியாது என்று கைவிரிக்கிறார். அதைக் கொள்முதல் செய்யக் கூட கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மூட்டைக்கு இவ்வளவு கொடுத்தால்தான் நெல்லை கொள்முதல் செய்வோம் என்று சொல்லி விவசாயிகளைக் கதிகலங்க வைக்கிறார்கள். இதனால் உயர்நீதிமன்றமே, “விவசாயிகளிடம் நெல் கொள்முதலுக்கு லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம்” என்று கண்டனம் செய்தது. அப்போதும் கூட இந்த எடப்பாடி அரசு திருந்தவில்லை.

 

cnc

 

விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகித் தவிக்கிறார்கள். கரோனா பேரிடரும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது. விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றமே உத்தரவிட்டது.

 

அந்த உத்தரவை எதிர்த்து – உச்சநீதிமன்றத்திற்குச் சென்று - விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றவர் இதே பழனிசாமி. விவசாயிகளுக்கு மன்னிக்க முடியாத துரோகங்களை அடுக்கடுக்காகச் செய்து விட்டு இன்று மாட்டு வண்டியில்  ஏறி - நின்று போலி விவசாயி வேடம் போட்டு நடித்து மக்களை ஏமாற்றுகிறார்.

 

விவசாயிகள் மேல் உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் செயல்படுத்த முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள் பார்ப்போம்.

 

நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலைக்கான உத்தரவாதம் அளிக்காத வேளாண் சட்டங்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று சொல்லுங்கள்.

 

அதைச் செய்துவிட்டு, இப்படி மாட்டு வண்டியில் ஏறி விவசாயி என்று சொல்லுங்கள். அதை விடுத்து - ஆட்சிக்காலம் முழுவதும் விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டு, காவிரி டெல்டாவில் தூர் வாருவதிலும் கோடிக்கணக்கில் ஊழல் செய்து விட்டு நானும் விவசாயி நானும் விவசாயி என்று தயவு செய்து போலி வேடம் போடாதீர்கள். உழைக்கும் வர்க்கமான இந்த நாட்டின் முதுகெலும்புகளாக இருக்கும் விவசாயிகளைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.

 

நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக நடத்திய ஆலோசனையில் முதலமைச்சர் பழனிசாமி ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார். அரசு நடவடிக்கை எடுத்ததால் கரோனா குறைந்து விட்டது என்கிறார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனாவிற்குப் பலியாகியிருப்பது பழனிசாமியின் மோசமான நிர்வாகத்தால் என்பதை மறந்து விட்டு இப்படிப் பொய் சொல்கிறார். கரோனா வந்தது உண்மை- அது தானாகவே குறைவது உண்மை. தானாகக் குறைவதைத் தடியெடுத்து விரட்டுவது போல் பொய் சொல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

 

கரோனாவால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். கூலித் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டார்கள். சிறு வியாபாரிகள் திண்டாடினார்கள். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்றுவரை இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. பெரிய தொழிற்சாலைகளே இன்றைக்கு சகஜ நிலைமைக்கு இன்னும் வர இயலவில்லை. வேலை இழந்தவர்களுக்கு இன்னும் மீண்டும் வேலை கிடைக்கவில்லை. கரோனா காலத்திலும் சொத்து வரி செலுத்துவதற்கு அபராதம் போட்டவர் பழனிசாமி. கரோனா காலத்திலும் மின் கட்டணத்தை ஈவு இரக்கமில்லாமல் வசூலித்து - அதைக் குறைக்க முடியாது என்று நீதிமன்றத்தில் வாதிட்டவர் பழனிசாமி.

 

கரோனாவால் மக்களுக்கு நஷ்டம். ஆனால், பழனிசாமிக்கு லாபம்; மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லாபம்; உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு லாபம்.

 

முகக்கவசம் கொள்முதலில் ஊழல். பிளீச்சிங் பவுடர் வாங்குவதில் ஊழல். அதிவிரைவு கரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்குவதில் ஊழல். விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்று நடத்தும் கரோனா விளம்பரங்களில் ஊழல். கரோனாவிற்காக பணியாளர் நியமனம் என்று- அதிலும் ஊழல்.

 

nkn

 

இப்படி, முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கரோனா ஊழலில் கொள்ளை லாபம். மக்கள் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இல்லை என்று பழனிசாமியால் மறுக்க முடியுமா?

 

நாளைக்கே கரோனா கொள்முதல் குறித்த அனைத்து விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக வெளியிடும் துணிச்சல் பழனிசாமிக்கு உள்ளதா? அதனால்தான் சொல்கிறேன், எடப்பாடி ஆட்சி தமிழகத்திற்குத் துரோகம் செய்த ஆட்சி. தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி.

 

இந்த ஆட்சி – விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும். இந்த ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள்தான் விவசாயிகள் தங்கள் இல்லங்களில் கொண்டாடும் திருநாள்.

 

அந்த நன்னாளை உருவாக்கிட திராவிட முன்னேற்றக் கழகம் போர்ப் பரணி பாடும். அந்தப் போரில் தமிழக மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, இருட்டில் தவிக்கும் தமிழகத்தின் விடியலுக்கான கழகத்தின் ஆட்சியை - பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியை - முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியை அமைப்போம். நன்றி. வணக்கம். இவ்வாறு உரையாற்றினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.