Skip to main content

என்ன இந்த நேரத்தில்... உங்ககிட்ட பேசணும்னு சொன்னாரு... போலீஸ் பிடியில் திமுக முக்கிய புள்ளி!

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

திருவண்ணாமலை தி.மு.க. வடக்கு மா.செ.வாக இருப்பவர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம். ரியல் எஸ்டேட், பைனான்ஸ் என சிலப்பல தொழில்கள் செய்யும் இவரது மகன் பாபுவுக்கு 2016-ல் ஆரணி தொகுதியில் எம்.எல்.ஏ. சீட் வாங்கிக் கொடுத்தார். தேர்தல் செலவுக்காக கரூரைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனத்தில் நில ஆவணங்களைக் கொடுத்து கடனாக ரூ.5 கோடி வாங்கியுள்ளார்.
 

dmk



தேர்தலில் மகன் தோற்றுப்போனார். பொருளாதார நெருக்கடியும் தொற்றிக்கொள்ள, கடன் கொடுத்தவர்களுக்கு சிவானந்தம் போக்குக்காட்டி வந்தார். சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை எஸ்.பி. சிபிசக்கரவத்தியிடம், கடன் கொடுத்தவர்கள் தரப்பு மோசடிப் புகார் கொடுத்தது. இதையடுத்து, பிப்ரவரி 06 ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்கள் ஆரணியில் உள்ள சிவானந்தத்தின் வீட்டுக்கதவைத் தட்டினர்.


தூக்கத்தில் இருந்து எழுந்துவந்த சிவானந்தம், தனக்கு பழக்கமான அந்த இன்ஸ்பெக்டரிடம், "என்ன இந்த நேரத்தில் என்று கேட்க, டி.எஸ்.பி. கார்ல இருக்காரு. உங்ககிட்ட பேசணும்னு சொன்னாரு' என்று கூட்டிச் சென்றார். அங்கு அவரை காருக்குள் ஏறச்சொல்லி திருவண்ணாமலை நோக்கிப் பறந்தனர். தெற்கு மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு பேசியதால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துள்ளார் சிவானந்தம். இரண்டே மாதத்தில் பணத்தைத் திருப்பித் தருவதாக எழுதிக் கொடுத்தபிறகே, அவர் அனுப்பி வைக்கப் பட்டார்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க.வினர், "அந்த கரூர் பைனான்ஸில் தி.மு.க., அ.தி.மு.க. முக்கியப் பிரமுகர்களின் கறுப்புப்பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுதான் வட்டிக்கு தரப்படுகிறது. சிவானந்தம் விசாரணைக்குக் கூட்டிச்செல்லப்பட்டதன் பின்னணியில், வலுவான தி.மு.க. முக்கிய மா.செ. இருக்கிறார்'' என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.