வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் (கதிர் ஆனந்த்)- 4,85,340 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் (ஏ.சி.சண்முகம்)- 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்(தீபலட்சுமி)- 26,995 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளரை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.மேலும் கடந்த தேர்தலை விட திமுக 2,80,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. இதனால் வேலூரில் திமுக தனது வாக்கு வங்கியை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தன்னை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் நல்ல அணுகுமுறையில் கதிர் ஆனந்த் இருப்பதாக சொல்லபடுகிறது.
மேலும் தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனால் கதிர் ஆனந்துக்கு திமுகவில் சில முக்கிய பொறுப்புகளை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. திமுகவில் உதயநிதி இளைஞரணி பொறுப்பேற்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் கதிர் ஆனந்துக்கு திமுக இளைஞரணியில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இளைஞரணியில் கதிர் ஆனந்துக்கு வேலூர் மாவட்ட பொறுப்புக் கிடைக்கும் எனவும் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. இந்த அறிவிப்பு திமுக இளைஞரணி கூட்டத்தில் அறிவிக்கலாம் என்று கூறிவருகின்றனர்.