Skip to main content

பட்ஜெட்டை உற்றுப் பார்த்தால் அப்படித்தான்... பாஜகவை கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன்... அதிருப்தியில் பாஜக!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

இதற்கு முன் இரண்டு முறை எம்.பி.யாக இருந்தபோது அமைச்சராகவும் ஆளுங் கூட்டணி எம்.பி.யாகவும் இருந்தவர் தயாநிதி மாறன். இப்போது மூன்றாவது பெரிய கட்சியின் உறுப்பினர். நிதியமைச்சரையும், மோடி தலைமையிலான மத்திய அரசையும் போட்டுத் தாக்கிய அவருடைய நாடாளுமன்ற உரை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

"எங்கள் தலைவர் கலைஞர் அவர்களின் வார்த்தைகளில் இந்த பட்ஜெட்டை விவரிக்க வேண்டும் என்றால், ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளே இருக்குமாம் ஈரும், பேனும்'. அதாவது, அழகான பெண் ஒருவர் நீளமான கூந்தலில் பூச்சூடி வருவார். அவரை சற்று உற்றுப் பார்த்தால்தான் கூந்தலில் மொய்க்கும் பேன்கள் கண்ணுக்குத் தெரியும்.

 

dmk



பேன்களை ஆங்கிலத்தில் ‘"லைஸ்'’ என்று சொல்வார்கள். பொய்களையும் ஆங்கிலத்தில் ‘"லைஸ்'’ என்றே சொல்வார்கள். இந்த பட்ஜெட்டை உற்றுப் பார்த்தால் அப்படித்தான் "லைஸ்'’ உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வரி செலுத்துவதற்கு நடுத்தர வருவாய் பெறும் மக்கள் ஆடிட் டரை பார்க்க செல்ல வேண்டாம், ஒரு கிளிக் செய்தால் போதும், எளிதாக வரி செலுத்திவிடலாம்' என கூறினார். ஆனால், எந்தப் பிரிவின் கீழ் நாங்கள் வரி செலுத்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளவே ஆடிட்டருக்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலைதான் உள்ளது.

புதிய வரிமுறையை எளிதாக விவரிக்க வேண்டும் என்றால், இப்போது 50 ரூபாய்க்கு விற்கும் மசால் தோசையின் விலை புதிய வரி விதிப்புக்கு ரூ.45 ஆகிறது. ஆனால் இந்த விலை நிபந்தனைக்கு உட்பட்டது என்கிறார் நிதியமைச்சர். அதாவது, உங்களுக்கு சாம்பார் வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.15, சட்னி வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.15 செலுத்த வேண்டும். ஆக, ரூ.50-க்கு கிடைத்த மசால்தோசையின் தற்போதைய விலை ரூ.80. இப்படித்தான் புதிய பட்ஜெட் உள்ளது.

இன்னொரு அபாயகரமான உண்மையை கூற விரும்புகிறேன். ஒருவர் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்றால், அவரது பாதுகாப்புக்கு பி.எப். பங்களிப்பு எடுக்கப்படுகிறது. இதற்கு வரி விலக்கு இருந்தது. ஆனால் புதிய முறையில் இந்த விலக்கு இல்லை.

எல்லோரும் எல்.ஐ.சி.யில் முதலீடு செய்யத்தான் தற்போது விரும்புகின்றனர். ஏனென்றால் அரசு உத்தரவாதம் இருக்கிறது. அதற்கு வருமானவரி விலக்கும் உள்ளது. ஆனால், தற்போது எல்.ஐ.சி. முதலீட்டுக்கு ஒன்றும் கிடைக்காது என அரசு கூறுகிறது.

இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால், கிடைக்கும் ஒரே தொலைத்தொடர்பு சேவை பி.எஸ்.என்.எல். ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ஏர் இந்தியா உள்ளது என நமது அமைச்சர்கள் பேசிய விளம்பர ஒலிநாடாக்கள் உள்ளன. சமீபத்தில் கூட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனா சென்று இந்திய மாணவர்களை, ஏர் இந்தியா விமானங்கள் மீட்டு வந்தன. ஆனால் அரசு தற்போது அவற்றை எல்லாம் விற்கிறது. இனி ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் தனியார் விமானங் கள் செல்லுமா அல்லது ஜியோ தொலைத்தொடர்பு சேவை அளிக்குமா? எல்.ஐ.சி., ஏர் இந்தியாவை மட்டும் நிதியமைச் சர் விற்கவில்லை. பி.எஸ். என்.எல்., பி.பி.சி.எல். உட்பட பல நிறுவனங் களை அரசு விற்கிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலைகளையும் அரசு விற்கிறது. அதிக வசூல் செய்யும் மையங்களாக நெடுஞ் சாலைகள் மாற்றப்படுகின்றன. நாடாளுமன்றக் கட்டிடத்தையும் விற்றுவிடுங்களேன்.

வரிசெலுத்துவதில் பாகு பாடு இருக்காது என நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு ரூ.1 கோடி வரி நிவாரணம் கிடைக்கிறது. அதே சமயம் முகம் இல்லாத உங்கள் வரி அலுவலகம், நடிகர் விஜய்க்கு குறி வைக்கிறது. சமஸ்கிருதத்துக்கு கோடிக் கணக்கில் பணம் செலவழிக்கப் படுகிறது. ஆனால் செம்மொழி தமிழுக்கு எதுவும் செலவழிக்கப் படவில்லை'' என்ற அவருடைய அதிரடி உரை மக்களவையை உலுக்கவே செய்தது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.