Skip to main content

“மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்த பிறகு, அதைச் செயல்படுத்தும் ஜெராக்ஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..” - செந்தில் பாலாஜி!

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

DMK MLA Senthilbalaji speech at karuru regarding edappadi palanisamy


கரூரில், அம்மாவட்ட தி.மு.க சார்பில், 16ஆம் தேதி முதல் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்னும் தேர்தல் பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் மாநில விவசாய அணிச் செயலாளர் சின்னசாமி தலைமையில், அரவக்குறிச்சி, கரூர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து 17ஆம் தேதி கிருஷ்ணராயபுரம் தொகுதி உப்பிடமங்கலம் பகுதியில் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட அரசு விழாவில், மக்கள் பிரதிநிதிகளான தி.மு.க எம்.எல்.ஏ.வான எனக்கும், குளித்தலை தொகுதி எம்.எல்.ஏ ராமர், கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோருக்கு அழைப்பு கொடுக்கவில்லை.
 

நீட் தேர்வு பற்றி பொய்யான தகவலையும், கருத்துகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சித்தரித்து வருகிறார். நீட் தேர்வுக்கு அனுமதி வழங்கியது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான். அதை மறைக்க, தி.மு.க ஆட்சியில்தான் இத்திட்டத்திற்கு முன் மொழியப்பட்டது எனக் கூறும் முதல்வர், இவரது ஆட்சியில் எதற்கு அனுமதி அளித்தார். நீட் தேர்வைப் பொறுத்தவரை எடப்பாடி அரசு மாணவர்களை ஏமாற்றி வருகிறது.


எடப்பாடி பழனிசாமி ஒரு ஜெராக்ஸ் முதல்வர்தான். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் பாதிப்பு தொடர்பான அறிக்கை விடுத்த பிறகு, அதைச் செயல்படுத்தும் ஜெராக்ஸ் முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். உதாரணமாக, நீட் தேர்வு ஒதுக்கீட்டில் இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை தி.மு.க ஏற்கும் என ஸ்டாலின் கூறிய பிறகுதான் அன்று மாலையே, மாணவர்களின் செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


கரோனா பாதுகாப்பு நடவடிக்கை எனக் கூறி மக்களுக்கு 1,000 ரூபாய் கொடுத்துவிட்டு மின் கட்டணத்தில் பல ஆயிரம் ரூபாயை கொள்ளை அடிக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது. போக்குவரத்துத் துறையில், கனரக வாகனங்கள் எஃப்.சி எடுப்பதற்கு, ஒளிரும் ஸ்டிக்கர், ஜி.பி.எஸ் கருவி,  வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதில் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளது என்று எந்தக் கட்சியும் சாராத லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

 

cnc

 

இதை அறிந்தும், அந்தத் துறை சார்ந்த அமைச்சர் மீது இதுவரை எடப்பாடி பழனிசாமி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடுக்கவும் முடியாது. ஏனென்றால், இந்த ஊழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் பெரும் பங்குள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. வேளாண் சட்டத்தை ஆதரிப்பதாகப் பேசக்கூடிய முதல்வர் எடப்பாடி, ஒரு விவசாயி அல்ல. அவர் விவசாயிகளின் துரோகி. கரூர் புதிய பேருந்து நிலையம் திருமாநிலையூர் பகுதியில் அமைக்க வேண்டும் எனக் கூறிய உச்சநீதிமன்றம், 22 மாதங்களில்  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி அரசு ஏன் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தவில்லை.


நீதிமன்றம் உத்தரவிட்ட இடத்தில் பேருந்து நிலையம் அமைக்காத அ.தி.மு.க அரசு, வேறு புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதில் உள்ள காரணம் என்ன? புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தின் அருகே அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள், அவர்களின் உறவினர்கள் பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இப்போது பரிமாற்றம் நடந்துள்ளது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் பெரும் பங்கு உள்ளது.” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.