Skip to main content

“அன்பழகன் விரைந்து நலம் அடைவார்; அரும்பணி ஆற்றுவார்!” -உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

ja


தி.மு.க.-வின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வந்தார். இதனையடுத்து, ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாளையொட்டி செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளுக்காக மாவட்ட நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 2ஆம் தேதியன்று மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜெ.அன்பழகனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 


ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அப்போது அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை மருத்துவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து வித உதவிகளையும் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில் “அன்பழகன் விரைந்து நலம் அடைவார்; அரும்பணி ஆற்றுவார்!” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் மற்றும் செயலாக்கத்தின் வாயிலாக, உங்களில் ஒருவனான நான் விடுத்த அன்பு வேண்டுகோளினை ஏற்று, தமிழக மக்களின் பசிப்பிணியாற்றியும் - அவர்களின் தேவைகளை நிறைவேற்றியும், அரசியல் - கட்சி, சாதி - மதப் பாகுபாடின்றி அனைவருக்கும் உதவியும், எதிர்க்கட்சி எனும் நிலையில் மக்களின் மனங்களில் ஆட்சி செய்து வரும் மாபெரும் இயக்கம் தி.மு.கழகம்!

நாற்பது நாட்கள் நம்முடைய கழகத்தின் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், இயக்கத்தின் -ரத்தநாளங்களாக விளங்கும் உடன்பிறப்புகள் என அனைவரும் களமிறங்கிப் பணியாற்றியதன் காரணமாக, 28 லட்சம் உணவுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு, மக்களின் பசித்துயர் போக்கப்பட்டுள்ளது. 76 லட்சம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், 51 லட்சம் முகக்கவசங்கள் – கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 18 லட்சம் உதவி அழைப்புகளை அலைபேசி வாயிலாகப் பெற்று, நமக்கு உதவிடும் எண்ணத்துடன் பதிவுசெய்த 36,100 நல்லோர்கள் - 230 தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட மகத்தான இந்தப் பெரும்பணிக்குப் பிறகு; ஆட்சியாளர்கள் மட்டுமே தீர்வு காணக்கூடிய கோரிக்கைகள் அடங்கிய 7 லட்சம் மனுக்கள் அரசாங்கத்திடம் அளிக்கப்பட்டுள்ளன.

காணொலி வாயிலாக நான் வைத்த கோரிக்கையைத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள், பல நாட்கள் 24 மணிநேரமும் கடுமையாக உழைத்து நிறைவேற்றியபோது அவர்களை ஒவ்வொரு நாளும் தொடர்புகொண்டு, “உங்கள் உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள். கரோனா நோய்த் தொற்று பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என்று வலியுறுத்துவது என் வழக்கமாக அமைந்திருந்தது. அதில் நான் அதிகம் வலியுறுத்தியது, சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் அவர்களிடம்தான்.

“ஒன்றிணைவோம் வா” செயல்பாடுகளுக்காகச் சென்னையின் பல பகுதிகளுக்கு நான் நேரில் சென்று உதவிகள் வழங்கிய நிலையில், தனது மாவட்டத்திற்குட்பட்ட நிகழ்வுகளில் என்னைச் சிரமப்படுத்தக்கூடாது என்ற கவனத்துடன், தன்னையே முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் ஜெ.அன்பழகன். “நீங்க பாதுகாப்பா இருங்க.. நான் பார்த்துக் கொள்கிறேன். விவரங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்வது வாஞ்சை மிகுந்த அவருடைய வாடிக்கை. ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அவர் என்பதால், அதிக அலைச்சல் கூடாது என்பதை நான் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தேன். அவரோ, பாரம்பரியமான கழக ரத்தம் உடலில் பாய்ந்தோடுகின்ற உடன்பிறப்பு.
 

 

 

mks


நமது உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் நம்பிக்கைக்குரிய செயல்வீரராக விளங்கி, மிசா சிறைக்கொடுமைகளை எதிர்கொண்ட பழக்கடை ஜெயராமன் அவர்களின் புதல்வர். தந்தை எட்டடி என்றால், தனயன் பதினாறடி என்ன, அதற்கு மேலும் பாயக்கூடியவர். தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு உள்ளிட்ட அவரது மாவட்டத்தின் பகுதிகளில் நடைபெறும் எந்த விழாவாக இருந்தாலும் அதில் அவர் காட்டுகின்ற அக்கறையும், அதனைச் செயல்படுத்துகிற பாங்கும் பிரமிக்க வைக்கும். ஒய்.எம்.சி.ஏ. திடலில் அறிவாலயத்தையே அச்சு பிசகாமல் அப்படியே கொண்டு வந்து நிறுத்தியதுபோல விழா மேடை அமைப்பார். கோபாலபுரம் இல்லத் தலைவரின் வரவேற்பறையை பிறந்தநாள் மேடையின் பின்புறம் கொண்டு வந்து வைத்தது போல உருவாக்கிக் காட்டுவார். செயிண்ட் ஜார்ஜ் கோட்டையா, டெல்லி செங்கோட்டையா, நாடாளுமன்றக் கட்டடமா எதுவாக இருந்தாலும் அதை அப்படியே அழகு மிளிர உருவாக்கியதுபோல மேடை அமைத்து தலைவர் கலைஞர் அவர்களின் பாராட்டுதல்களைப் பலமுறை பெற்றவர் ஜெ.அன்பழகன்.
 

எதையும் மறைக்காமல் இயல்பாகப் பேசக்கூடியவர். உடன்பிறப்புக்குரிய உரிமை அந்தக் குரலில் இருக்கும். அதில் உள்ள செய்தியோ இயக்கத்தின் நலன் கருதியதாக இருக்கும். அதனால்தான் அவரிடம், இயக்கத்தின் நலன் காப்பதுபோல, நீங்கள் இயங்குவதற்கேற்ற வகையில் உடல்நலனைக் காத்திட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறேன். களத்தில் இறங்கிய போர்வீரனைப் போல, இலக்கைத் தவிர வேறெதையும் சிந்திக்காமல் செயல்பட்டார். தற்போது, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிரக் கண்காணிப்பில் செயற்கை சுவாசக் கருவிகளுடன் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.

அவருடைய உடல்நலன் குறித்து டாக்டர் இளங்குமரன் அவர்களும், கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் எம்.பி., அவர்களும் உடனுக்குடன் தெரிவித்து வருகின்றனர். 80 விழுக்காட்டிற்கு மேல் செயற்கை சுவாசம் தேவைப்பட்ட நிலையில், தொடர்ச்சியான மருத்துவச் சிகிச்சையினால் வெள்ளி காலையில் 45 விழுக்காடு அளவிற்குச் செயற்கை சுவாசம் என்கிற மெலிதான முன்னேற்ற நிலை ஏற்பட்டு, தொடர்ந்து சீரான நிலையில் இருப்பதை டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவர்களின் அயராத உழைப்பும் அக்கறையும் சிகிச்சை முறையும் நிச்சயமாக ஜெ.அன்பழகனை முழுமையாக நலன் பெறச் செய்து, கரோனாவிலிருந்து மீண்டெழுந்து வந்து நம்முடன் முன்புபோல பழகிப் பேசி பணிகளைக் கவனிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்புவரை அதே உணர்வு வெளிப்படுவதை சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் காண்கிறேன்.
 

mks ja


இதுதான் இந்த இயக்கத்தின் வலிமை; கழகத்தின் உயிர்ப்பு; ஒரே குடும்பம் என்கிற உணர்வு!

அந்தக் குடும்பத்தின் தலைமை உடன்பிறப்பு என்ற பொறுப்பில் உங்களில் ஒருவனான நான் பணியமர்த்தப்பட்டிருக்கிறேன். அந்த உரிமையுடன் உங்களுக்கு நான் வைக்கின்ற வேண்டுகோள் - அன்புக்கட்டளை ஒன்றே ஒன்றுதான். இந்த இயக்கத்தில் இருக்கின்ற ஒவ்வொரு உடன்பிறப்பின் உயிரும் முக்கியமானது. அதற்கு உடல்நலனைப் பாதுகாத்திட வேண்டும். நோய்த் தொற்று காலத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை - பரிசோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.

வயதில் மூத்த உடன்பிறப்புகள், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், நீரிழிவு –இரத்த அழுத்தம் - சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் வீட்டிலேயே இருக்க வேண்டியது கட்டாயம். அதனை ஒருபோதும் மீறிடவேண்டாம்.

மக்களுக்கு எந்நாளும் துணையாக இருக்கும் தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தினைத் தாங்கி நிற்கும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைப் பாதுகாத்திட வேண்டும்.
 

http://onelink.to/nknapp


இருப்பது ஓர் உயிர்; அது இயக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது. அதன் மூலமாக பொதுமக்கள் நலன்களையும் உரிமைகளையும் காத்திடும் ஜனநாயகக் களத்தில் நாம் தொடர்ந்து இயங்கும் அதே நேரத்தில், உங்கள் ஒவ்வொருவரையும் நம்பியிருக்கும் உங்கள் குடும்பத்தினரின் நலனையும் மனதில் கொள்ளுங்கள். உடல் நலன் பேணுங்கள். விலை மதிப்பில்லா உன்னத உயிரைக் காத்திடுங்கள். துளியளவும் அலட்சியம் காட்டிட வேண்டாம் என அன்புக் கட்டளையிடுகிறேன்.

மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காத போராளியான சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்கள் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்! என உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.