Skip to main content

கூட்டணி வேட்பாளரை தோற்கடித்த திமுக எம்.எல்.ஏ..?

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

DMK MLA defeats alliance candidate
பெரியநாயகம்

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் பல இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. 

 

மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி 394 இடங்களிலும், 17 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது. 

 

DMK MLA defeats alliance candidate
புஷ்பா

 

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி 52வது வார்டில் திமுக கூட்டணிக் கட்சியான விசிக சார்பில் புஷ்பா(65) என்பவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுகவில் சீட் கிடைக்காமல் வெளியேறி சுயேச்சையாகப் போட்டியிட்டார் எல்.பெரியநாயகம். இன்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சுயேச்சையாக நின்ற பெரியநாயகம் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

 

திமுகவிலிருந்து வெளியேறி சுயேச்சையாக நின்று வெற்றி பெற்று, திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றது, திமுக எம்.எல்.ஏ. மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி விசிகவினர் பேசிக்கொள்கின்றனர்.  

 

DMK MLA defeats alliance candidate

 

‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதும், ”திமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் முறையாகப் பணி செய்து வெற்றியை பெற்றுதர வேண்டும்” என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுகவினருக்குத் அறிவிறுத்தினார். ஆனால், தாம்பரம் மாநகராட்சி 52வது வார்டு கூட்டணிக் கட்சியான விசிகவிற்கு ஒதுக்கப்பட்டதும், அந்த வார்டில் திமுகவில் சீட் எதிர்பார்த்திருந்த பெரியநாயகம் திமுகவிலிருந்து விலகி சுயேச்சையாக நின்றார். இவர், தான் வாக்குகோரும் நோட்டீஸ்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் நம் பகுதி மக்களுக்காக என்றென்றும் உழைத்திட ஆதரவு தர வேண்டும் என்று பதிவிட்டு வாக்கு சேகரித்தார். 

 

இதுகுறித்து திமுக தலைமைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் நேரடியாக வந்து எஸ்.ஆர்.ராஜா உள்பட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இப்போதுள்ள அரசியல் சூழலில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளைப் பாருங்கள். போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு கட்சி எதிர்காலத்தில் நல்ல வழிகளைக் காட்டும் என அறிவுறுத்திச் சென்றார். 

 

”சுயேச்சையாகப் போட்டியிட்ட பெரியநாயகமும் திமுகவிலிருந்து தேர்தலுக்கு முன்பு விலக்கப்பட்டார். இருந்தும் அவர் இன்று வெற்றி பெற்றுள்ளார். பெரியநாயகம் வெற்றி பெற மறைமுகமாக எஸ்.ஆர். ராஜா உதவியுள்ளதாகவே நினைக்கத் தோன்றுகிறது. பிரச்சாரத்தின் போது பெரிய நாயகத்திற்கான அனைத்து செலவுகளையும் எஸ்.ஆர். ராஜா ஏற்றுக்கொண்டதாகவும் அப்போதே பேச்சுகள் எழுந்தன. இன்று வெற்றி பெற்றதும் எஸ்.ஆர். ராஜாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றது அதனை உறுதி செய்துள்ளார் என்பதுபோலவே எண்ணத்தோன்றுகிறது” என்கின்றனர் அப்பகுதி விசிகவினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.