Skip to main content

தி.மு.க. நிர்வாகிளைக் கூட்டத்துக்கு அழைக்கும் வேலு -144 தடை உத்தரவை மீறி செயற்குழு கூட்டம்

Published on 24/05/2020 | Edited on 25/05/2020

 

ev velu


கரோனா பரவலை முன்னிட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கான 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இருந்தும் பொருளாதார நடவடிக்கைக்காக கடைகள், தொழில் நிறுவனங்கள், ஆட்டோக்கள், சலூன்கள் மற்றும் சில அத்தியாவசியப் பணிகள், நிறுவனங்களுக்கு இயங்க தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் பொதுக்கூட்டம் மற்றும் அறைக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு பொதுமக்கள் உட்பட யாரும் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 


இந்நிலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிவிப்பில், மே 25ஆம் தேதி காலை 11 மணிக்கு தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட ஊரட்சிக்குழு சேர்மன், ஒன்றியக் குழு தலைவர்கள் ஆகியோர் தவறாமல் வந்து கலந்துக்கொள்ள வேண்டும், தலைவர் - மா.செகள் இடையே நடைபெற்ற வீடியோ கான்பரஸ் மூலம் நடைபெற்ற கூட்டம் பற்றி விவாதித்தல், ஜீன் 3 கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம், கழக ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்க என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம் ஒன்றியங்கள், செங்கம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் பேரூராட்சிகளில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் வருவார்கள். இப்படித் தெற்கு மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் 100க்கும் அதிகமான நிர்வாகிகள் தி.மு.க. அலுவலகத்திற்கு வந்து கூட்டம் நடத்தவுள்ளனர். 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்தக் கூட்டத்தை எப்படி வேலு நடத்துகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
 


144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகளை நடத்தகூடாது என்கிறபடியால் தான் தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வுக்கு மாநிலம் முழுவதிலும்மிருந்து நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்துக்கு வரவைக்க முடியாது என்பதால் தான், தி.மு.க. தலைவரின் தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் விதியில் திருத்தம் செய்து காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 25ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டமும் வீடியோ கான்பரஸ் முறையில் நடத்தினார். அப்படியிருக்க எப்போதும் அரசின் விதிகளைக் கடைப்பிடிக்க நினைக்கும் வேலு, நாடு முழுவதும் 144 தடை உத்தரவில் அமலில் உள்ள நிலையில் அவசர செயற்குழு கூட்டம் எதற்காக நடத்துகிறார், ஏன் அனைவரையும் நேரில் வரவைக்கிறார் என்கிற கேள்வி எழுந்தள்ளது.


கட்சி கூட்டங்கள், கட்சி அலுவலகத்துக்குள் நடத்த அனுமதியுண்டா என அரசு தரப்பில் நாம் விசாரித்தபோது, கட்சி நிகழ்ச்சிகள் உள்ளரங்க கூட்ட நிகழ்வாக இருந்தாலும் அனுமதியில்லை, கூட்டம் நடத்துவது சட்டப்படி தவறு என்கிறார்கள்.  
 

கூட்டம் நடத்த சிறப்பு அனுமதி ஏதாவது மாவட்ட தி.மு.க. சார்பில் வாங்கப்பட்டுள்ளதா என தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு அனுமதி தேவையில்லை, சமூக இடைவெளியுடன் தான் கூட்டம் நடக்கவுள்ளது என்றார்கள்.
 

http://onelink.to/nknapp


இதுபற்றி பிரபலமான வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டபோது, 144 சட்டப்படி, 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக்கூடாது. அது உள்ளரங்கமாக இருந்தாலும், வெளி நிகழ்ச்சியாக இருந்தாலும் அதுதான் சட்டம். திருமணத்துக்கு 50 பேர், இறப்புக்கு 20 பேர் என அரசு அனுமதி வழங்கியுள்ளது. மற்ற எதற்கும் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. அதனால் தான் ரம்ஜான் சிறப்புத் தொழுகைக்குக் கூட அரசு அனுமதி வழங்கவில்லை. இது கரோனாவுக்கான மருத்துவ ரீதியிலான 144 தடை என்பதால் அரசு நிர்வாகத்துக்குத் தகவல் சொல்லிவிட்டு சமூக இடைவெளியுடன் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படியே உதவிகள் வழங்கப்படுகின்றன. மற்றப்படி 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் இப்படிக் கட்சிக் கூட்டம் நடத்துவது சட்டப்படி தவறானது. கூட்டம் நடத்தும் போது, யாராவது புகார் கூறினால் வழக்குப் பதிவு செய்யலாம், அதனால் தான் தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டு பின்னர் அது சர்ச்சையாகி வீடியோ கான்பரன்ஸில் நடைபெற்றது என்றார்.


தி.மு.க. நிர்வாகிகள் ஏதாவது சர்ச்சையில் சிக்குவார்களா என மத்தியில் ஆளும் பாஜகவும் – மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க.வும் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கின்றன. இந்நிலையில் இந்தக் கூட்டம் சர்ச்சையில் சிக்காமல் இருந்தால் சரி என்கிறார்கள் தி.மு.க. அனுதாபிகள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.