Skip to main content

திமுக அணியில் மதிமுக இழுபறி ஏன்???

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலுள்ள மதிமுகவிற்கு இன்று தொகுதிப்பங்கீடு இறுதிசெய்து ஒப்பந்தம் கையெழுத்தாகுமென பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
 

dmk mdmk


இந்த நிலையில் இன்று காலை விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, முறையான அறிவிப்பை திமுக தலைமையும், அவ்விரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக வெளியிட்டனர். அதேபோல் மதிமுகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டு இன்று மதியம் அறிவிப்பதாக இருந்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் வந்தார். அலுவலகத்திற்கு சென்ற வைகோ சிறிது நேரத்திலேயே வெளியேவந்து, இன்று மதியம்தான் பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லி திமுகவிடமிருந்து அழைப்பு வந்தது. எங்கள் கட்சியின் பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் வெளியூரிலுள்ளதால் நாளை அவர்கள் வருவார்கள். அதன்பிறகு பேச்சுவார்த்தை நடைபெற்று, நாளை மாலை அறிவிக்கப்படும் என்றார். 
 

இந்தப் பின்னணியில்... கூட்டணி அறிவிப்பு இன்று அறிவிக்கப்படாததற்கு காரணம் தொகுதிகள்தான் என மதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் கூறுகிறார்கள். திமுக அணியில் மதிமுகவிற்கு இரண்டு தொகுதிகள் என இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, உண்மைதான். ஆனால் மதிமுக கேட்ட தொகுதிகள் திருச்சி மற்றும் ஈரோடு. திமுக தரப்பில், திமுகவின் மூத்த நிர்வாகியான முன்னாள் அமைச்சர் கே.என். நேரு திருச்சியில் திமுகதான் போட்டியிட வேண்டுமென உறுதியாக கூறியிருக்கிறார். அதேபோல் ஈரோடு தொகுதி காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸின் முன்னாள் மாநில தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு தொகுதியில் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமையிடம் அனுமதிபெற்று அதை திமுக தலைமையிடமும் கூறியிருக்கிறார்.


ஆக மதிமுக எதிர்பார்த்த திருச்சி மற்றும் ஈரோடு இந்த இரண்டு தொகுதிகளையும் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட முடியாத சூழல் திமுகவிற்கு உள்ளது. ஆகவே மீதி இரண்டு தொகுதிகளை ஒதுக்குகிறோம் என திமுக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதனால் சற்று மனம் தளர்ந்த வைகோ நாளை எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேசிவிட்டு நேரில் வந்து தொகுதிகளை முடிவு செய்வோம் எனக்கூறிவிட்டு வந்துள்ளார். மதிமுகவிற்கு இரண்டு தொகுதிகள் என்பதில் பிரச்சனை இல்லை, அது எந்த தொகுதிகள் என்பதுதான் சிக்கலாக உள்ளது. நாளை மாலை எந்தத் தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும் என்கிறார்கள் மதிமுகவினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.