Skip to main content

வீரபாண்டி ராஜா மனசு உடைஞ்சு போய்விடக்கூடாது... அதிரடி ஆக்ஷன் எடுத்த ஸ்டாலின்!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

ஒரே கவனம், 2021 சட்டமன்றத் தேர்தல்தான் என்பதை மனதில் வைத்து செயல்படும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சிக்குள் அதிரடி நீக்கம்,—சேர்ப்பு வேலைகளில் இறங்கிவிட்டார். ஊரக உள்ளாட்சியின் மறைமுகத் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து சொந்தக் கட்சி வேட்பாளர்களை குப்புறத் தள்ளிய கட்சிப் பொறுப்பாளர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யும் வேலையை சேலம் மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளார் ஸ்டாலின்.

சேலம் மாவட்டம் ஏற்காடு தி.மு.க. ஒ.செ. ஏ.டி.பாலுவை கடந்த ஜன. 21-ஆம் தேதி கட்சியிலிருந்து கட்டம் கட்டியபோதே, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜாவும் சீக்கிரமே கட்டம் கட்டப்படலாம் என்ற பேச்சு மாவட்ட உ.பி.க்கள் மத்தியில் ஓடியது. ஆனாலும் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தின் மீதுள்ள மரியாதையாலும் வீரபாண்டியாருக்கு சேலம் மாவட்டத்தில் இன்னமும் உள்ள செல்வாக்காலும் பொறுமை காத்தார் ஸ்டாலின். அதேநேரம் வீரபாண்டிராஜாவின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க மாஜி எம்.பி. கந்தசாமியை நியமித்தார்.

 

dmk



கந்தசாமியின் தீவிர விசாரணையில் அயோத்தியா பட்டணம், ஏற்காடு, சேலம் ஒன்றியங்களில் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கும்படி கவுன்சிலர்களிடம் ராஜாவே சொன்னதாக ஆதாரத்துடன் புகார் வாசித்தார்கள் உ.பி.க்கள். அனைத்தையும் அறிக்கையாக அறிவாலயத்தில் தாக்கல் செய்தார் கந்தசாமி. இதன் அடிப்படையில் கடந்த ஜன. 27-ஆம் தேதி சேலம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், குறிப்பாக அயோத்தியா பட்டணம் ஒன்றியக் கவுன்சிலர்கள், ஒன்றிய பொறுப்பாளரிடம் ஆர்.எஸ்.பாரதியும் டி.கே.எஸ்.இளங்கோவனும் நேரடி விசாரணை நடத்தினர்.

இதையடுத்தே கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து வீரபாண்டி ராஜாவை நீக்கிவிட்டு, மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கத்தை கிழக்கு மா.பொ.வாகவும், தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த டி.எம்.செல்வகணபதியை மேற்கு மாவட்டப் பொறுப்பாளராகவும் நியமித்து பேராசிரியர் பெயரில் அறிவிப்பு வெளியானது. வீரபாண்டி ராஜா மனசு உடைஞ்சு போய்விடக்கூடாது என்பதற்காக தேர்தல் பணிக்குழுச் செயலாளராக்கப்பட்டுள்ளார்.

 

dmk



ஸ்டாலினின் இந்த அதிரடி ஆக்ஷன் குறித்து அயோத்தியா பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் நம்மிடம் பேசும்போது, ""உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்து ராஜாவிடம் கொடுத்தோம். ஆனால் அவருக்கு வேண்டப்பட்ட ஆட்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்ததால் 6 சுயேட்சைகள் வெற்றி பெறும் அளவுக்குப் போனது. 10 கவுன்சிலர்கள் ஆதரவுடன் போட்டியிட்ட எங்க வேட்பாளர் தோத்துப் போய்ட்டார், ஆனா 9 பேர் ஆதரவுடன் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயித்து விட்டார்னா எப்படி? இப்போது தலைமை எடுத்திருக்கும் முடி வால் இனிமேல் சேலம் கிழக்கு மாவட்டத்தில் கோஷ்டிகள் தலையெடுக்காது'' என்கிறார்.

வீரபாண்டி ராஜா ஆதரவாளர்களோ, ""இந்த மாவட்டத்தில் நடக்கும் உள்ளடியையும் அதில் தலைமையின் பார்வையையும் ராஜா அறிவார். செயற்குழுவிலும் இதுபற்றி ஓப்பனாக பேசினார். உண்மைக்கு கொடுக்கப்பட்ட விலை இது'' என்கிறார்கள்.


சேலம் மாநகர சீனியர் உ.பி.ஒருவரிடம் நாம் பேசிய போது, "1973-லிருந்து 2013-ல் இறக்கும் வரை 40 ஆண்டுகள் இந்த மாவட்டத்தின் ஒரே மா.செ.வாக கோலோச்சியவர் வீரபாண்டியார். அவர் இருக்கும்போதே மாவட்ட தி.மு.க.வுக்குள் வளர ஆரம்பித்த அவரது மகன் செழியன், திடீரென மரணமடைந்தார். வீரபாண்டியார் இருந்தபோதே இந்த மாவட்டத்தில் நாங்கள் தேர்தலில் பலமான சரிவைச் சந்தித்திருக்கோம். எங்க கட்சி ஆட்சிக்கு வரும்போதுதான் வீரபாண்டியார் ஜெயிப்பார். ஆனாலும் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது பிரச்சினைன்னா முன்னாடி வந்து நிற்பார். ஆனால் ராஜா அந்தளவுக்கு இல்லை.

இப்ப நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மேற்கு மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்தில் ஒரு இடத்தில் கூட தி.மு.க. ஜெயிக்கவில்லை. காரணம் மா.செ. எஸ்.ஆர்.சிவலிங்கத்தின் மந்தமான செயல்பாடுகள்தான். இருந்தாலும் அவரை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிச்சிருக்காங்க. இது பாரபட்சமான அணுகுமுறையா பார்க்கப்பட்டாலும் அவர், ஆளும்கட்சியிடம் விலை போகமாட்டார் துணிச்சலாக எதிர்த்து நிற்பார் என்பதால்தான். இனிமேலும் மா.செ.க்கள் உஷாராகவில்லையென்றால் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும்'' என்றார்.

நீக்கம் குறித்து விளக்கம் கேட்க வீரபாண்டிராஜாவை நாம் தொடர்பு கொண்டவுடன் செல்போனை அட்டெண்ட் செய்தவர், பதில் எதுவும் சொல்லாமல் கட் பண்ணிவிட்டார்.

நம்மிடம் பேசிய எஸ்.ஆர்.சிவலிங்கமோ, "கிழக்கு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றியை தலைமையிடம் சமர்ப்பிப்பேன்'' என்கிறார்.


சேலம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்தி செல்வனை நீக்கிவிட்டு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரை பொறுப்பாளராக நியமித்துள் ளார் ஸ்டாலின். காந்திசெல்வன், இரண்டாவது முறையாக மா.செ. பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளரான டி.எம். செல்வகணபதிக்கு பழைய அ.தி.மு.க.வினரின் சித்து வேலைகள் அத்துப்படி. அத்துடன் முதல்வர் எடப்பாடி யின் மாவட்டத்தில் தி.மு.க. திறமையாக அரசியல் செய்ய செல்வகணபதியை தலைமை நம்புகிறது. நம்பிக்கை பலிக்குமா? வீரபாண்டியார் கோட்டையில் நடந்த மாற்றத்திற்கு காரணம் துரோகமா என்பது போகப் போகத் தெரியும்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்