Skip to main content

‘தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க... வாபஸ் வாங்குங்க...’ - ஓ.பி.எஸ். குறித்து சீறியப் பெண்... அட்வைஸ் செய்த ஸ்டாலின்...

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

ddd

 

தேனி மாவட்டத்தில் உள்ள அரண்மனைப்புதூர் ஊராட்சியில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். ஸ்டாலின் பேசுகையில், "உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சிதான் அராஜகம் செய்வார்கள். ஓட்டு எண்ணும் இடத்திலும் அக்கிரமம் செய்வார்கள். அதனை மீறி 70% இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்கு காரணம் மக்கள்தான். ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகளில், ஆட்சியில் இருப்பதுபோல நாங்கள்தான் மக்களுக்காக பணியாற்றியிருக்கிறோம். 

 

கரோனா தொற்று நோயால் பலரையும் இழந்திருக்கிறோம். 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இறந்துபோனார்கள். அப்படிப்பட்ட கொடிய நோய் பற்றிய ஆராய்ச்சி நடந்துவருகிறது. தடுப்பூசி போடவே பயப்படுகிறார்கள்; சந்தேகப்படுகிறார்கள். இப்படியான நிலையில், உயிரையே பணயம் வைத்து, ‘ஒன்றிணைவோம் வா’ இயக்கம் மூலம் மக்களுக்காக களத்தில் நின்றார்கள். மருந்து மாத்திரை, மளிகை, உணவு என மக்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்டது தி.மு.க.. ஆட்சியில் இருப்பதுபோல செயல்பட்டோம்.

 

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் யாருனு தெரியுமா? ஓ.பி.எஸ் தானே? பாத்திருக்கீங்களா? பன்னீர்செல்வம்னா, ரொம்ப பணிவா இருப்பாரா? பதவி வரும்போது பணிவு வரனும். பதவி வரும்போது எப்படி மாறினார் என்பது உங்களுக்குத் தெரியும். சமீபத்தில் வீடியோ எடுத்து வெளியிட்டார். அவ்வளவு அமைதியா, உத்தமபுத்திரர் மாதிரி ஒரு காட்சி. மக்களை ஏமாற்றுகிறார்.

 

அரசியலில் லக்கில் வந்தவர். மூன்று முறை முதல்வர் பதவி கிடைத்தது. மூன்று முறை முதல்வராக இருந்து, நாட்டுக்காக என்ன செய்தார்? நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்குனு சொன்னார். என்ன மர்மம்னு அவரும் சொல்லல, ஆளும் கட்சியினரும் சொல்லல. 

 

27ம் தேதி சசிகலா வெளியே வந்த பிறகு, ஓ.பி.எஸ் இந்தப் பதவியில் இருப்பாரா என்று கூட தெரியாது. அது அவர்கள் பிரச்சனை. எடப்பாடி என்று சொன்னால், அந்த ஊருக்கு அவமானம். பழனிசாமி என்று சொல்லுங்க. ஜெயலலிதா நினைவிடத்தில் 40 நிமிடம் தியானம் செய்தார். நீதி விசாரணை கேட்டது நாங்கள் இல்லை. இறப்பில் மர்மம் இருக்குணு சொன்னது நான் இல்ல. 

 

ஆறுமுகசாமி விசாரணை கமிசன் அமைத்து மூன்று வருடத்தை தாண்டியாச்சு. என்ன ஆச்சுணு தெரியல. விசாரணைக்கு ஆஜராக்கச் சொல்லி, எட்டுமுறை கூப்பிட்டும் இவர் போகவில்லை. பாக்கெட்டுல, டேபிள்ல ஜெயலலிதா படத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள். யார் விட்டாலும் ஸ்டாலின் விடமாட்டான்" என்றார்.

 

கூட்டத்தில் நாகலாபுரம் ராஜாத்தி பேசும்போது, “தர்ம யுத்தம் செய்துவிட்டு, ஜெயலலிதா சமாதிக்குப் போய் தியானம் செய்து, சாவு பற்றி விசாரணை பண்ணுவோம்னு சொன்னார். விசாரணையும் இல்லை. விசாரிக்கப் போகவும் இல்லை” என்று கூறினார்.

 

இதுபோல் பூதிப்புரம் லெட்சுமி பேசும்போது, “முதல்ல ரோடு போட்டாங்க. கமிசன் வாங்கினதுனால ரோடு பேந்துபோச்சு. ரோட்டுக்கு பச்சர் போடுறாங்க. ஓ.பி.எஸ் எங்க ஊருக்கு வந்தா கொலையே பண்ணுவேன்” என்று கூறினார். 

 

ddd

 

அப்போது ஸ்டாலின் குறுக்கிட்டு, ''எவ்வளவு ஆத்திரம் இருக்குணு வெளிப்பட்டது. தப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க. ஜனநாயத்தில் முறை இல்லை. நீங்கள் சொன்ன வார்த்தையைத் திரும்ப வாங்கிக்கிறேன் என்று சொல்லுங்க'' என்றார்.

 

''நாங்க ரொம்ப வெறுப்புல இருக்கோம். கோபத்துல இருக்கோம். உங்களுக்காக மன்னிப்பு கேட்கிறேன். அவரிடம் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்'' என்றார் பூதிப்புரம் லெட்சுமி.

 

ஸ்டாலின்: சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்கிக்கிறேன் சொல்லுங்க.

 

பூதிப்புரம் லெட்சுமி: வார்த்தையை வாபஸ் வாங்கிக்கிறேன். 

 

பிரேமலதா ஆதிபட்டி: நான் ஒரு செவிலியர். யாருக்கும் கல்விக் கடன் தள்ளுபடி ஆகல. எனக்கும் தள்ளுபடி ஆகல என்றனர். 

 

அதன்பின்னர் பேசிய ஸ்டாலின், “போடியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டுவரவில்லை. சங்கராபுரம் பகுதியில் சிப்காட்டிற்கு பூமி பூஜை மட்டுமே போடப்பட்டுள்ளது. குமுளி போக்குவரத்து பணிமனை இல்லை. அரண்மனை புதூர், கொடுவிலார்பட்டி, நாகலாபுரம் போன்ற பகுதியில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. குரங்கனி டாப்ஸ்டேசன் போன்ற பகுதிகளில் விளையும் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கு சாலை வசதி இல்லை. திமுக ஆட்சி காலத்தில் விலைவாசிகள் குறைவாக இருந்தது. அதிமுக ஆட்சியில் சிலிண்டர், பருப்பு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது” என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.