Advertisment

“திமுக அரசு பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்திருக்கிறது..” ஓ.பி.எஸ். & இ.பி.எஸ். கண்டனம்..! 

publive-image

அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவர் மீது அறப்போர் இயக்கத்தின் சார்பிலும், திமுகவின் அமைப்புச் செயலாளரும் ஊழல் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு சொந்தமான இடங்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் லட்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், நேற்று முன்தினம் (10.08.2021)‌ சென்னையில் உள்ள அதிமுகவின் நாளிதழான நமதுஅம்மா அலுலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்குக் கண்டனம் தெரிவித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில் அவர்கள், "ஜனநாயகத்தின்‌ நான்காம்‌ தூண்‌ பத்திரிகை என்பார்கள்‌. அந்தப் பத்திரிகை சுதந்திரத்தைக்‌ காப்போம்‌ என்று கூறிக்கொள்ளும்‌ முதல்வர் ஸ்டாலின்‌ தலைமையிலான திமுக அரசு, பத்திரிகை சுதந்திரத்தை மட்டுமல்ல, பத்திரிகை நடத்துவோரின்‌ உரிமையையும்‌ காலில் போட்டு மிதித்திருக்கிறது.

Advertisment

காவல்‌துறையைத் தன்‌ பொறுப்பில்‌ வைத்திருக்கும்‌ ஸ்டாலின்‌ நேற்று (நேற்று முன்தினம் - 10.08.2021)‌, சோதனை என்ற பெயரில்‌ சென்னை, ஆழ்வார்பேட்டை அசோக்‌ சாலையில்‌ இயங்கிவரும்‌ அதிமுக நாளேடான நமது அம்மாநாளிதழ்‌ அலுவலகத்தில்‌ பணியாளர்கள்‌ யாரும்‌ இல்லாத நேரத்தில்‌, காவல்‌துறையை ஏவி, சட்டத்தை மீறிப் பூட்டை உடைத்து, அத்துமீறி உள்ளே நுழைந்து, சோதனை என்ற பெயரில்‌ அராஜகத்தையும்‌, அடாவடியையும்‌ அரங்கேற்றியுள்ளனர்‌.

சோதனைக்கு வந்த காவலர்கள்‌ சட்டத்திற்கு விரோதமாக, பணிக்கு வந்த பத்திரிகை ஆசிரியர்களையும்‌, அலுவலர்களையும்‌ இரவுவரை நமது அம்மா நாளிதழ்‌ அலுவலகத்திற்குள்ளேயே அனுமதிக்காமல்‌ தடுத்துள்ளனர்‌.

பொதுவாக, ஏதேனும்‌ ஓரிடத்தில்‌ காவலர்கள்‌ சோதனைக்குச்‌ செல்லும்போது, சம்பந்தப்பட்ட உரிமையாளர்‌ முன்னிலையிலோ அல்லது அந்த இடத்தில்‌ உள்ள பொறுப்பாளர்கள்‌ முன்னிலையிலோதான்‌ சோதனை நடத்தப்பட வேண்டும்‌ என்பது சட்டம்‌. ஆனால்‌, காவலர்கள்‌ சட்டத்திற்குப்‌ புறம்பாக, விவரம்‌ அறிந்து வந்த நமது அம்மா நாளிதழ்‌ ஆசிரியர்‌ மற்றும்‌ பத்திரிகை அலுவலகத்தில்‌ பணிபுரியும்‌ பொறுப்பான அலுவலர்கள்‌ யாரையும்‌ அனுமதிக்காமல்‌, சட்டத்திற்குப்‌ புறம்பாக சோதனை மேற்கொண்டுள்ளனர்‌. சோதனை என்ற பெயரில்‌ அனைத்துப்‌ பூட்டுகளையும்‌ போலிச் சாவி போட்டும்‌, உடைத்தும்‌ சோதனை நடத்தியுள்ளனர்‌. இது, சட்டப்படி தண்டிக்கப்படக்‌ கூடிய குற்றமாகும்‌.

வேலியே பயிரை மேய்வதுபோல், காவல்துறையினர் எந்தவித முன் அனுமதியும் இன்றி சட்டத்தை மீறி, ஒரு பத்திரிகை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்துள்ளது மாபெரும் கிரிமினல் குற்றமாகும். இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறோம்.

பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்‌ வகையில்‌, சட்டத்திற்குப்‌ புறம்பாக நமது அம்மாநாளிதழ்‌ மீது நடைபெற்ற இந்தத்‌ தாக்குதலுக்கு, காவல்‌துறையைத் தன்‌ பொறுப்பில்‌ வைத்திருக்கும்‌ ஸ்டாலின்‌ பொறுப்பேற்க வேண்டும்‌. தவறு செய்த காவல்‌துறையைச்‌ சேர்ந்தவர்கள்‌ மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று அதிமுக‌ சார்பாகக் கேட்டுக்‌கொள்கிறோம்‌. வரும்‌ காலங்களில்‌ பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்‌ ஏற்படும்‌ இதுபோன்ற செயல்களில்‌ இந்த அரசு ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்‌கொள்வதோடு, இச்சம்பவத்தைக் கடுமையாகக்‌ கண்டிக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

admk ops_eps
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe