Skip to main content

நீங்கள் என்ன செய்கிறீங்கன்னு தெரியும்... திருத்திக்கொள்ள வேண்டும்... இல்லையென்றால்... மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 
 

அப்போது அவர், திராவிட முன்னேற்றக் கழகம் இன்று கம்பீரமாக நிமிர்த்து நிற்கிறது. தமிழக  அரசியலில்  மட்டுமல்ல; அகில இந்திய  அளவிலும் ஓங்கி உயர்ந்து நிற்கிறது.
 

ஏற்கனவே  89  சட்டமன்ற உறுப்பினர்களை நாம் பெற்றிருந்தோம். இப்போது 100 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறோம். யாரால்? இது, தனிப்பட்ட என்னுடைய சாதனை அல்ல.  இந்தச் சாதனை அனைத்தும் உங்களைத்தான் சேரும். உங்களை உருவாக்கியிருக்கும் நம் தொண்டர்களைச் சேரும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
 

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த முறை நமக்கு ஒரு இடம் கூட இல்லை. ஆனால் இன்று, 24 பேர் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றால், இது தனிப்பட்ட எனக்குக் கிடைத்த வெற்றி அல்ல. தி.மு.கழகத் தொண்டர்களால், உங்களது ஓயாத உழைப்பால் கிடைத்த வெற்றி.
 

இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. உட்கார்ந்திருக்கிறது என்றால், அது உங்களது சாதனை. இயக்கத் தொண்டர்களின் உழைப்பு.
 

 நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை - உள்ளிட்ட 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றிபெற்றோம். தொண்டர்களின் உழைப்புதான் அதற்குக் காரணம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
 

இங்கே பேசிய நம் பொதுக்குழு உறுப்பினர்கள் குத்தாலம் கல்யாணம் தொடங்கி , அனைவரும் நேரத்தின் அருமை கருதி உரையாற்றியிருக்கிறார்கள்.  பல்வேறு  கருத்துக்களை - கோபித்துக்கொள்வார்களோ என்று தயங்காமல், வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார்கள். சிலர் பிரச்சினைகளை எடுத்துச்சொன்னார்கள். இவை எல்லாம் ஏற்கனவே நாம் அறிந்தவைதான். சில புதிய செய்திகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.
 

நான் செயல்தலைவராகப் பொறுப்பேற்றபிறகு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தினோம். அந்தக் காலகட்டத்தில், அண்ணா அறிவாலயத்தில் ஒவ்வொரு மாவட்டமாக அழைத்து, ஆய்வு நடத்தினோம். மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் என அனைவரையும் தனித்தனியாக அழைத்துப்பேசி ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுத்தோம். முழுமையாக எடுக்கவில்லை என்றாலும், ஓரளவுக்கு நடவடிக்கைகள் எடுத்தோம். அதன் பலனாக, நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி கிடைத்தது.

 

mks


 

நீங்கள் இங்கே கூறிய கருத்துகளையெல்லாம் என் மன ஏட்டில் குறித்துவைத்துக் கொண்டேன். அவையெல்லாம் காலச்சூழலுக்கேற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும், அதன்மீது தலைமைக்கழக நிர்வாகிகளுடன் கலந்துபேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
 

ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியபோது நான் சொன்னேன், ‘நான் ஒரு சர்வாதிகாரியாக மாறப்போகிறேன்’ என்று. அது வெறும் பேச்சுக்காக அல்ல. கழகத்தின் வளர்ச்சிக்காக, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு நிலைநாட்டப் படவேண்டும் என்பதற்காக, நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொன்னேன்.
 

நீங்கள் கூறிய சில உண்மையான விமர்சனங்களை, சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இல்லையென்றால் திருத்தப்படுவார்கள் என்ற உறுதியை பொதுக்குழு மூலமாக எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன்.
 

அதேபோலத்தான், தலைமைக் கழக நிர்வாகிகளாக இருந்தாலும், மாவட்டச் செயலாளர்களாக இருந்தாலும், மற்ற நிர்வாகிகளாக இருந்தாலும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
 

யாரும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்து விடக்கூடாது.
 

பல லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். தங்களுக்குக்  கீழ் பணியாற்றுபவர்களை, தங்களுக்குக் கீழ்தான் என்று நினைத்துவிடக்கூடாது . அனைவருக்கும் பதவிகள் வழங்க முடியாது. சில ஆயிரம் பேர்தான் பொதுக்குழு உறுப்பினர்களாக முடியும். சில நூறு பேர்தான் செயற்குழு உறுப்பினர்களாக முடியும். நூறுக்கும் குறைவானவர்கள்தான் மாவட்டச் செயலாளர்களாக முடியும்.   சில 10 பேர்கள் தான் தலைமைக் கழக நிர்வாகிகளாக முடியும். அதற்காக, இவர்கள் மட்டுமே கழகமா? இந்தப் பதவியைத் தாண்டி லட்சக்கணக்கான தொண்டர்களால்தான் கழகம் உறுதியாக நிற்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
 

 அவர்களால்தான் நீங்கள் இந்த அரங்குக்குள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறீர்கள், அவர்களால்தான் நானும் இந்த மேடையில்  நின்று கொண்டிருக்கிறேன். இந்த எண்ணத்தை யாரும் எந்தச் சூழ்நிலையிலும் மறக்காமல் இருந்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு எந்தக் கொம்பனாலும் எந்தக் காலத்திலும் முடியாது.
 

 எத்தனை பெரிய மாளிகையையும் கட்டலாம். அடித்தளம் சரியாக அமையவேண்டும்.  அத்தகைய அடித்தளம் தான் தொண்டர்கள்.  அவர்களை அரவணைத்துச் செல்லுங்கள்.  அவர்களது ஆலோசனைகளைக் கேளுங்கள்.  அவர்களிடம் களநிலவரங்களை அறிந்து கொள்ளுங்கள். அவர்களோடு சில நிமிட நேரம் செலவிடுங்கள்.  அவர்கள் மூலமாகத் தான் உண்மையான செய்திகளை முழுமையாக அறிய முடியும்.
 

 நகரச் செயலாளர்களுக்கு அந்த நகரம் அத்துப்படியாக இருக்க வேண்டும். ஒன்றியச் செயலாளர்களுக்கு அந்த ஒன்றியம் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும்.  மாவட்டச் செயலாளர்களுக்கு அந்த மாவட்டமே மனப்பாடமாக இருக்கவேண்டும்.


 

 

சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் மட்டும் கட்சிப் பணி ஆற்றாமல், அனைத்து நேரங்களிலும் கட்சிப் பணி ஆற்றிட வேண்டும்.
 

இந்த மாதம் இந்தப் பகுதி, இந்த வாரம் இந்தப் பகுதி என்று திட்டமிட்டு பணியாற்றினால், நம்மை வீழ்த்த  யாராலும்  நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான், ஊராட்சிக் கழகங்களை கிளைக் கழகங்களாக மாற்றும் வகையில்  கழகத்தில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
 

 மொத்தம் 12,500 ஊராட்சிகளுக்கு ஊராட்சி செயலாளர்களை வைத்திருந்தோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தினோம். நம் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அது ஒரு காரணம்.  அங்கு சென்ற பிறகு நிறைய உண்மைகள் தெரியவந்தன. ஊராட்சி என்பது மிகப்பெரிய ஊர்கள் கொண்டது. இதனை ஒரு செயலாளர் இருந்து கவனிக்க முடியாது. அதனால் கிளைகளாகப் பிரித்திருக்கிறோம்.
 

இதுவரை 12,500  ஊராட்சி செயலாளர்கள் இருந்தார்கள். இனிமேல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிளைக் கழகங்கள் உருவாகப்போகின்றன. அதனால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிளைக்கழகச் செயலாளர்கள் வரப்போகிறார்கள். அதன்மூலம் மக்களோடு மக்களாக ஒன்றாக இணைந்து நெருக்கமாகப்  பணியாற்றிட முடியும்.
 

30, 40 வருடங்களுக்கு முன்பு எப்படிப் பணியாற்றினோமோ, அதுமாதிரி பணியாற்றிட முடியும்.
 

 எப்படி நாடாளுமன்றத். தேர்தலில் நமது வெற்றியைப் பற்றி நான் பெருமை பொங்கச் சொன்னேனோ, அதேபோல் நமக்கு இருக்கும் வருத்தத்தையும் சொல்லியாக வேண்டும்.
 

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் நாம் தோல்வி அடைந்துள்ளோம். ஆளும் கட்சி அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையைப் பயன்படுத்தி பணப் பட்டுவாடா செய்ததால் தோற்றோம் என்பது உண்மைதான். ஆனால் அதுமட்டும் காரணமில்லை. நமது பணியில் ஏதோ குறைபாடு இருக்கிறது. அதுவும் தோல்விக்கு ஒரு காரணம். ஆகவே கழகத்தின் அடிக்கட்டுமானத்தை பலப்படுத்த வேண்டும்.
 

மாநாடு போடுகிறோம். பொதுக்கூட்டம் நடத்துகிறோம். ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறோம். சட்டமன்றத்தில் வாதாடுகிறோம். நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கிறோம்.  இவைகளெல்லாம் மக்களுக்காக. கட்சிக்காகச் செய்யவேண்டியது என்பது, அமைப்பை பலப்படுத்துவது, கிளைகளை உருவாக்குவது,  உறுப்பினர்களை அதிகப்படுத்துவது, மக்களோடு மக்களாக நிர்வாகிகள் இரண்டறக் கலந்து பழகுவது.
 

அடிமட்ட நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்கள் அரவணைத்துச் செல்வது; தலைமை கழகத்தோடு மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது; இத்தகைய கட்டமைப்பில்தான் கழகம் நிற்கிறது. அப்படி நிற்கும் கழகம்தான் வெற்றி பெறும்!
 

பொதுக்குழுவில் இரண்டு முக்கியமான சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்.
 

திருநங்கைகளை கழகத்தில் இணைக்க ஒரு சட்டத் திருத்தம்; "திருநங்கைகள்" என்ற பெயருக்கு அரசு அங்கீகாரம் கொடுத்தவர், தலைவர் கலைஞர் அவர்கள்.
 

அதேபோல், வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழர்களுக்கான அமைப்பு; அவரவர் வாழும் நாடுகளில் அமைத்துக்கொள்ளவும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
 

தி.மு.க.,வை நோக்கி மக்கள் வரவேண்டுமென்றால், மக்களை நோக்கி தி.மு.க. நிர்வாகிகள் வேகமாகச் செல்ல வேண்டும்.


 

 

பேசியவர்கள் பலர் தி.மு.க ஆட்சிக்கு வரும் என்றீர்கள். தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும்; அதில் சந்தேகமில்லை. நாம் தான் வெற்றி பெறுவோம். ஆனால் அந்த வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்! உண்மையாக உழைக்க வேண்டும்! ஓயாமல் உழைக்க வேண்டும்!
 

நமது வெற்றியைத் தடுப்பதற்கு மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் சதித்திட்டங்களைத் தீட்டிவருகிறது.
 

பத்திரிகைகளில், சமூகவலைதளங்களில், தி.மு.க.வைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். நம்மைத்தான் ஆளுங்கட்சி என எண்ணிக்கொண்டு, கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
 

நம்முடைய ரத்தம், வியர்வை, உழைப்பு, ராஜதந்திரம், ஒற்றுமை ஆகிய அனைத்தையும் பயன்படுத்தி, நாம் வெற்றி பெற வேண்டும்.
 

நம் பொருளாளர் சொன்னதைப்போல், கோஷ்டிகள் இருப்பது இயல்புதான். ஆனால் அந்தக் கோஷ்டிகளில், கழக வளர்ச்சிக்காக யார் நன்றாகச் செயல்படுவது என்ற  ஆரோக்கியமான போட்டி இருக்கவேண்டுமே தவிர, பகைமை கொண்டு கழக வளர்ச்சிக்குத் தீங்கு விளைவித்துவிடக் கூடாது.
 

ஒற்றுமையும், உழைப்பும் இருந்துவிட்டால், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது.
 

நம்முடைய அரசியல் திறமைகளை மாற்றுக் கட்சியினரிடம் பயன்படுத்தி அவர்களை வெல்ல நினைக்க வேண்டுமே தவிர, சொந்தக் கட்சிகாரரரிடமே காட்டி, காலத்தை வீணடித்துவிடக்கூடாது.
 

நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், அடுத்து நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும்; ஆளும் கட்சி இப்போது செலவு செய்வதைவிடவும் அதிகமான பணத்தை வாரி இறைக்கத்தான்  செய்வார்கள். அந்தப் பணபலத்தை வெல்லும் வல்லமை உங்களது ஒற்றுமைக்கும், உழைப்புக்கும் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்!

 

mks


 

தோல்விகளில் இருந்து மீண்டு வந்தோம் என்றால்; தலைவர் கலைஞர் அவர்களின் உயிருக்கும் உயிரான உடன்பிறப்புகளின், தொண்டர்களின் உழைப்புதான், அதற்குக் காரணம்.
 

ஒன்பது ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை. ஆனாலும் நாம்தான் ஆட்சியில் இருக்கிறோம் என்பதைப் போலவே தி.மு.க.வை நினைக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு கழகத்தை உச்சியில் வைத்திருப்பதற்கு தொண்டர்கள்தான் காரணம்.
 

தமிழ்நாட்டு மக்களுக்கு நமது கழக அரசு செய்ததைப் போன்ற மகத்தான சாதனைகளை யாரும் செய்ததில்லை.
 

1991- 96 வரையிலான ஜெயலலிதா ஆட்சி - அதைவிட மோசமான ஆட்சி இப்போது நடைபெறும் ஆட்சி. ஒரு கொள்ளைக் கும்பலிடம் தமிழ்நாட்டு அரசாங்கம் சிக்கிவிட்டது. தமிழகம் பல கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
 

இந்த கொள்ளைக்கும்பலை  அம்பலப்படுத்துங்கள். ஆதாரங்களுடன் பேசுங்கள்.
 

ஒன்பது ஆண்டு காலத்தில் எந்தச் சிறு நன்மையும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவில்லை என்பதைச் சொல்லுங்கள்.
 

இந்த ஆட்சி எல்லா வகையிலும் சீர்கெட்டுப்போயிருக்கிறது; தோற்றுவிட்டது. இதனை பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு உரையாற்றினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்