Skip to main content

“மதுவிலக்கு, மதுக்கடைகள் குறைப்பு குறித்து திமுக வாக்குறுதி கொடுக்கவில்லை” - அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

nn

 

மதுவிலக்கை கொண்டு வருவதாகவோ மதுக்கடைகளை குறைப்பதாகவோ திமுக வாக்குறுதி கொடுக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

இடைத்தேர்தல் பிரச்சாரப் பணியிலிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி 15 ஆம் தேதி வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு ஈரோடு வஊசி பூங்கா பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஏதோ திமுக ஆட்சியில் தான் மதுக்கடைகள் கொண்டுவரப்பட்டதாக சிலர் சித்தரிக்கின்றனர். அது முற்றிலும் தவறு. எங்களது ஆட்சி வந்த பிறகு பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த ஏராளமான மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுக்கடை செயல்படும் நேரத்தை குறைக்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. அருகில் உள்ள பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நேரத்தை குறைக்கவில்லை. கொரோனா காலத்தில் கூட பாண்டிச்சேரியில் மதுக்கடைகள் வழக்கம்போல செயல்பட்டன. டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு பாட்டிலுக்கு ரூபாய் 10, 20 என அதிக விலை வைத்து விற்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்கள் அரசுக்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

nn

 

மூன்று மாதங்களுக்கு முன்பே விசைத்தறியாளர்களுக்கு யூனிட் 750 இலிருந்து 1000 யூனிட், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 இலிருந்து 300 யூனிட் இலவச மின்சாரம் உயர்த்தி வழங்க தீர்மானிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்திலும் இதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி அச்சலுகையை வழங்க தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் வலியுறுத்தி உள்ளோம். இந்த இடைத்தேர்தலுக்கு பிறகு வாக்குறுதி நிறைவேற்றப்படும். சுமார் 30 சதவீதத்திற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கோடி பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது, மின்வாரியத்துக்கு வழங்கும் மானியத்தை முதல்வர் ரூபாய் 9000 கோடியில் இருந்து 13000 கோடியாக உயர்த்தியுள்ளார்.

 

2.67 கோடி மின் நுகர்வோரில் 2.60 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28 கடைசி நாளாகும். அதற்குப் பிறகு நீட்டிக்கப்படாது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் 110 இடங்களில் திமுக தேர்தல் பணிமனைகளை அமைத்துள்ளோம். மக்கள் தாங்களாகவே பணிமனைகளுக்கு வருகின்றனர். இதில் எந்த விதிமீறலும் இல்லை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து; 10 லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
fire breaks out in furniture shop at midnight in Erode

ஈரோடு பெரியவலசு, கொங்கு நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் அதே பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையில் மரச் சாமான்கள் அதிக அளவில் இருந்தன.

இந்த நிலையில் பொன்னுச்சாமி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்று உள்ளார்.  நள்ளிரவு 2 மணி அளவில்  இவரது கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் . சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர்  தீயை அணைக்க போராடினர். மர சாமான்கள் மற்றும் எந்திரங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில்  கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மரப் பொருள்கள் மற்றும் மெஷின்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல வேலையாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து பர்னிச்சர் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் இருந்தன.