Skip to main content

திமுகவில் காங்கிரஸுக்கு எத்தனை சீட் ? கே.எஸ்.அழகிரி தலைமையில் தீவிர ஆலோசனை !

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

                                                       

tamil nadu congress committee


         
தமிழக காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை சத்தியமூர்த்திபவனில் நடத்தினார் கே.எஸ்.அழகிரி. இதில், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு உள்ளிட்ட காங்கிரசின் முன்னாள் தலைவர்கள், 72 மாவட்ட தலைவர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.  

 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காக உழைப்பது, கூட்டணியில் எத்தனை இடங்கள், என்னென்ன தொகுதிகள் பெறுவது உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

 

tamil nadu congress committee



ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய பலரும், ’’ திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் சீட்டுகளைப் பெற வேண்டும். காங்கிரசுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து அவைகளை திமுகவிடம் பேசி வாங்க வேண்டும் ‘’ என்பதை வலியுறுத்தினர்.

 


தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், ‘’ தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. இரட்டை இலக்கத்தில் சீட்டுகளை வாங்க வேண்டும் என்கிறார்கள். நல்லதுதான். ஆனா, பத்திரிகைகளில் 5 சீட்டு, 7 சீட்டுன்னு எழுதுகிறார்கள். நமக்கு எண்ணிக்கை முக்கியமில்லை. இளம் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக அறிவித்திருக்கும் சூழலில் நமக்கு எண்ணிக்கை முக்கியமில்லை. அதேசமயம், கூட்டணி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்கள் சில விசயங்களைப் பேசி உறுதிசெய்ய வேண்டும். அதாவது, நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கிறது. அது குறித்தும் திமுகவிடம் பேச வேண்டும். மாநகராட்சிகளில் எத்தனை மேயர் பதவி ? எத்தனை துணை மேயர் பதவி ? நகராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் எத்தனை இடங்கள் ? என உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நிலைகளிலும் காங்கிரசுக்கான சீட் பகிர்வுகளைப் பேசி முடியுங்கள் ‘’ என கேட்டுக்கொண்டார். 
 

tamil nadu congress committee


முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும் போது, ‘’ மத்தியிலுள்ள மோடி அரசுக்கு எதிராகவும், மாநிலத்திலுள்ள எடப்பாடி அரசுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்த வேண்டும். பிரச்சாரத்தின் போது இவர்களின் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளின் பட்டியல் முழுமையாக வந்து சேரவில்லை. அதில் கவனம் செலுத்துங்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் 40 இடங்களிலும் ஜெயிக்கும். ராகுல்காந்தி பிரதமராக நாம் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும் ‘’ என்றார் அழுத்தமாக. 
 

tamil nadu congress committee


காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டி பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய கட்சியின் புதிய தலைவர் கே.எஸ். அழகிரி பேசும் போது, ‘’ பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் நாம் ஆட்சியில் இல்லையென்றாலும் காங்கிரஸ் இப்போதும் உயிரோட்டமாகத்தான் இருக்கிறது. உயிரோட்டமாக இருந்தும் நம்மால் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை என பல முறை யோசித்திருக்கிறேன். ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு காரணம், நம்மிடையே உள்ள கோஷ்டி மனப்பான்மைதான். கோஷ்டிப் பிரச்சனைகளை ஒழித்து நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் காங்கிரஸின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும். அதனால், கோஷ்டி மனப்பான்மையை புறம் தள்ளி ஒரே குடும்பமாக நாம் இயங்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டுமெனில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 இடங்களையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி கைப்பற்ற வேண்டும். கடுமையாக உழைத்தால் இதனை நம்மால் சாதிக்க முடியும். ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் சக்தி திட்டத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள். மோடி அரசை வீழ்த்தி ராகுல்காந்தி பிரதமராவார் ‘’ என்றார். நம்பிக்கையான அவரது பேச்சு, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. 
 

tamil nadu congress committee


ஆலோசனைக் கூட்டத்தில்,  அரசியல் மற்றும் தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து 8 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மேலும், காங்கிரசையும் ராகுல்காந்தியையும் தொடர்ந்து விமர்சிக்கும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து அது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.