Skip to main content

ஆளுநருக்கு எதிராக திமுக போஸ்டர் யுத்தம்! தலைமை உத்தரவுக்கு காத்திருக்கும் பாஜக

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

DMK condemn poster for the governor! BJP Awaiting Leader's Order

 

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து ஏழாம் பொருத்தமாக உள்ள நிலையில், அவருக்கு எதிராக தி.மு.க.வின் சார்பு அமைப்புகள் போஸ்டர் யுத்தத்தைத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பா.ஜ.க., இங்குள்ள தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட திராவிட இயக்கங்களை அடியோடு முடித்துக் கட்டும் வேலையில் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க.வின் திராவிட மாடல் முழக்கத்தை பா.ஜ.க.வின் சங்பரிவாரங்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. 

 

DMK condemn poster for the governor! BJP Awaiting Leader's Order

 

ஆளுங்கட்சிக்கு எந்த வகையிலாவது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரே அஜண்டாவுடன் பா.ஜ.க. மேலிடம், முன்னாள் காவல்துறை உளவுப்பிரிவு அதிகாரியான ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக இறக்கி விட்டிருக்கிறது எனப் பரவலாகப் பேச்சு இருந்து வருகிறது. 

 

ஆர்.என்.ரவியும் ஆளுநர் என்பதை மறந்து, பா.ஜ.க கொ.ப.செ. போல பொதுவெளியில் பேசி வருகிறார். ''ரிஷிகளாலும் வேதங்களாலும்தான் பாரதம் உருவாக்கப்பட்டது. சனாதன கொள்கைகள்தான் சிறந்தது'' என்றெல்லாம் ஆளுநர் ஆதாரமற்ற கருத்துகளைப் பேசி வருகிறார். இதற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. 

 

DMK condemn poster for the governor! BJP Awaiting Leader's Order

 

இந்நிலையில்தான், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்படவே காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல்நலம் கருதி செந்தில் பாலாஜி வகித்து வந்த மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியிடமும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.

 

இது ஒருபுறம் இருக்க, சில நாள்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக தன்னிச்சையாக அறிவித்தார். தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பால் அன்று இரவே செந்தில் பாலாஜி நீக்கம் குறித்த உத்தரவை நிறுத்தி வைத்தார் ஆர்.என்.ரவி. எனினும், ஆளுநரின் திடீர் தாக்குதலை எதிர்பாராத ஆளும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள், அமைச்சர் ஒருவரை தன்னிச்சையாக நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று எதிர்வினையாற்றின.

 

ஊழல் புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் அமைச்சராகத் தொடரக் கூடாது என்று ஆளுநர் தரப்பு தெரிவித்தது. இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய தி.மு.க., மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டது. அவர்களை முதலில் அமைச்சரவையில் இருந்து வெளியே அனுப்ப பா.ஜ.க.வை வலியுறுத்தும்படி ஆளுநருக்கு ஆளும் தரப்பு சுடச்சுட பதிலடி கொடுத்தது. 

 

DMK condemn poster for the governor! BJP Awaiting Leader's Order

 

இந்த பரபரப்புக்கு இடையே, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி, ஓட்டுநர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட சார்பு அமைப்புகள் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சேலம் மாநகரம் முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஆளுநர் மற்றும் பாஜகவுக்கு எதிரான தி.மு.க.வின் போஸ்டர் யுத்தம் என்று சொல்லும் அளவுக்கு இது மக்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.

 

சேலம் மாநகரில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், மத்திய அரசியல் அங்கம் வகிக்கும் கிரிமினல் குற்றப் பின்னணி உள்ள அமைச்சர்களின் படங்கள், அவர்களின் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. 

 

DMK condemn poster for the governor! BJP Awaiting Leader's Order

 

அதன்படி, மத்திய அமைச்சர்களான ஸ்ரீநிசித் பிரமானிக் (11 வழக்குகள்), ஜான் பார்லா (9 வழக்குகள்), முரளிதரன் (7 வழக்குகள்), கிரிராஜ் சிங் (6 வழக்குகள்), பங்கஜ் சவுத்ரி (5 வழக்குகள்), சத்தியபால் சிங் பாகேஜ் (5 வழக்குகள்), அஸ்வினிகுமார் சவுபே (3 வழக்குகள்), அஜய்குமார் மிஸ்ரா (1 வழக்கு) ஆகியோரின் படங்கள் போஸ்டர்களில் அச்சிடப்பட்டுள்ளன.

 

மேலும், ''ராஜ்பவன் ஆர்.என்.ரவி, எங்கள் அமைச்சரை நீக்க நீ யார்? டெல்லிக்குச் செல். இவர்களை மந்திரி பதவியில் இருந்து உடனடியாக நீக்கச் சொல். கொலை, கொள்ளை குற்ற வழக்குகளைச் சுமந்து கொண்டிருக்கும் இவர்களை பதவி நீக்கம் செய்யச் சொல்லி டெல்லிக்கு கடிதம் எழுதிவிட்டாயா?'' என்றும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். 

 

DMK condemn poster for the governor! BJP Awaiting Leader's Order

 

இந்த போஸ்டர்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாஜக பிரமுகர் ஒருவர் கூறுகையில், ''தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே இதுபோன்ற அரசியல் ரீதியான தாக்குதல்கள் இருப்பது சகஜம்தான். தி.மு.க.வினர் ஆளுநரை ஒருமையில் கண்டித்து போஸ்டர் ஒட்டினால் அதற்கான எதிர்வினைகளை ராஜ் பவன் மூலமாக சந்திக்க வேண்டியதிருக்கும்.

 

பா.ஜ.க. அமைச்சர்களை விமர்சித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். தி.மு.க.வில் புகாருக்குள்ளான முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அவர்களின் படங்களுடன் நாங்களும் இதேபோல் பதிலடி கொடுப்போம். கட்சி மேலிடம் அனுமதி கேட்டிருக்கிறோம்'' என்றார். 

 

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.