இதில், கூட்டணி தர்மத்தை முன்னிறுத்தி வெளிப்படை யாகவே கேட்டார் பிரேமலதா. ஆனால், வாசனோ ரகசியமாக காய்களை நகர்த்தியபடி இருந்தார். 3 சீட்டுகளுக்கு 30 அ.தி.மு.க. வினரும் கூட்டணி கட்சிகளும் மல்லுக்கட்டுவதால் முடிவெடுக்க முடியாமல் திணறி வந்த எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், திங்கள்கிழமை காலையில் அ.தி.மு.க. சார்பில் இருவரைத் தேர்வு செய்ததுடன், மூன்றாவது சீட்டை ஜி.கே.வாசனுக்கும் ஒதுக்கி அறிவித்தனர். கூட்டணிக் கட்சிக்கு வாய்ப்பளித்திருப்பதை ஜீரணிக்க முடியாத அ.தி.மு.க. மா.செ.க்கள் பலரும் எடப்பாடியிடம் கேள்வி எழுப்ப, ‘டெல்லியின் அழுத்தங்களுக்கு பணிய வேண்டியதிருக்கிறது. அதனை புரிந்துகொள்ளுங்கள்'' என சமாளித்திருக்கிறார்.
ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா ஒதுக்கப்பட்டது குறித்து விசாரித்தபோது, "ஜி.கே.வாசனுக்கு குரு ஸ்தானத்தில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மோடிக்கும் வாசனுக்கும் நண்பராக இருக்கும் தொழிலதிபர் அதானியும் ஜி.கே. வாசனுக்கு எம்.பி.சீட் வாங்கித் தருமாறு மோடியிடம் சிபாரிசு செய்தனர். சமீபத்தில் டெல்லிக்கு சென்றிருந்த தமிழக அமைச்சர்கள் தங்கமணியும், ஜெயக்குமாரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர். அப்போது, வாசனுக்கு சீட் குறித்து வலியுறுத்தியுள்ளார் அமித்ஷா. எடப்பாடியிடமும் தனிப்பட்ட முறையில் நல்லதொரு நட்பை உருவாக்கி வைத்திருக்கிறார் வாசன்'' என்கிறார்கள் அ.தி.மு.க.- த.மா.கா.வினர்.
த.மா.கா.வுக்கு சீட் ஒதுக்கப்பட்டதில் அப்-செட்டாகியிருக்கிறார் பிரேமலதா. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறலாமா என்று விவாதித்தும் வருகிறார்.
இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய மோடி திட்டமிட்டிருப்பதால், வாசனை எம்.பி.யாக்க சிபாரிசு செய்திருக்கும் முகர்ஜியும் அதானியும் வாசனை அமைச்சராக்கவும் முயற்சி எடுத்து வருகின்றனர். அதேசமயம், பா.ஜ.க.வில் த.மா.கா.வை இணைக்கவும் வாசனிடம் டெல்லி வலியுறுத்தியிருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது.