இந்த நிலையில் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் அதிமுக கொடுக்காததன் பின்னணி தகவல் வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் கூட்டமொன்றில் பேசிய போது அதிமுக தலைவர்களை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசியதாக சொல்லப்படுகிறது. அதோடு கொடுப்பதை வாங்கும் கட்சியல்ல தேமுதிக என்றும், திருப்பிக் கொடுக்கும் கட்சிதான் தேமுதிக என்றும் தேமுதிக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
மேலும் தேமுதிக கட்சிக்கு 2% மட்டுமே வாக்குகள் இருப்பதாக கூறும் அதிமுகவினர் எங்கள் வீட்டு வாசலில் கூட்டணிக்காக காத்திருந்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். விஜய பிரபாகரனின் இந்த பேச்சு அதிமுக தலைமையை அதிருப்தி அடைய செய்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைக்கும் போது ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று பேசினோம் என்று தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா கூறினார். இதற்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் அப்படி ஏதும் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிப்பதில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.