Skip to main content

தேமுதிக வேணுமா? அட்வைஸ் செய்த அதிமுக... யோசிக்கும் பாஜக...

Published on 07/03/2019 | Edited on 07/03/2019


 

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும், புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உடன்பாடு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பாஜகவின் அழுத்தம் காரணமாக தேமுதிகவுக்காக கூட்டணியை இறுதி செய்யாமல் வைத்திருந்தனர்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டதும், அன்றைய தினமே இந்த கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று பாஜகவின் பியூஸ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோரை சந்தித்து கூறினர். 
 

அப்போது அவர்கள் இரண்டு இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கூறியதால் இழுபறி ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து பேசி வந்த பாஜகவிடம் பாமகவுக்கு குறையாமல் தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தது. 

 

vijayakanth - bjp


பிப்.6 மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணியை இறுதி செய்து கூட்டணித் தலைவர்களை மேடையேற்ற வேண்டும். ஆகையால் தேமுதிகவிடம் நேரடியாக பேசி சுமூகமான உடன்பாட்டை ஏற்படுத்தும்படி அதிமுகவுக்கு பாஜக கூறியது. இதையடுத்து அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளோம் என்றதும் இழுபறி ஏற்பட்டது.
 

பாஜகவின் அழுத்தம் காரணமாக துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த திங்கள்கிழமை விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பாமகவுக்கு குறையாமல் தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று கூறியதால் அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கடும் எரிச்சல் அடைந்தனர். 
 

இதன் காரணமாகத்தான் வண்டலூர் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேமுதிக கொடிகள் அகற்றப்பட்டன. விஜயகாந்த் படமும் அகற்றப்பட்டது. பிப்.6ஆம் தேதி வெளியான நாளிதழ்களில் பொதுக்கூட்டத்திற்கான விளம்பரங்களிலும் விஜயகாந்த் படமும் இடம்பெறவில்லை.
 

பிப்.6ஆம் தேதி மோடி பொதுக்கூட்டத்திற்கு வந்த பியூஸ்கோயலிடம், தேமுதிக கூட்டணியில் இடம்பெறுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ஆச்சரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்றார். 

அதனைத் தொடர்ந்து தனியார் ஓட்டல் ஒன்றில் விஜயகாந்த் மைத்துடன் சுதீஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பியூஸ் கோயல். இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக வருகிறது என்று செயதிகள் பரவியதால் மீண்டும் விஜயகாந்த் படம் மேடையில் வைக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இருந்தனர். ஆனால் இதில் தேமுதிக ஏற்கனவே கூறிய கருத்தை மீண்டும் வைத்தது. 

 

ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த பியூஸ் கோயல், பேச்சுவார்த்தையை பாதியில் முடித்துவிட்டு பொதுக்கூட்டத்திற்கு கிளம்பிவிட்டார். இதனால் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கிலி ஏற்படுத்த திமுகவின் பொருளாளர் துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து பேசியுள்ளனர். இந்த செய்தி பாஜக தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதும், கடும் அதிர்ச்சியடைந்தனர். அதிமுகவினரோ உடனடியாக விஜயகாந்த் படத்தை மேடையில் இருந்து நீக்கிவிட்டனர்.

 

தேமுதிக நிர்வாகிகள் தன்னை சந்தித்து பேசியதை துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதேபோல் சுதீஷும் இதனை திமுகவிடம் பேசினோம் என்று தெரிவித்தார். 

 

''தேமுதிகவுக்காக அதிமுகவிடம் நாம் மல்லுக்கட்டி பேசி வருகிறோம். ஆனால் நம்மை முட்டாளாக்கிவிடலாம் என்று திமுகவிடம் பேசுகின்றனர்'' என்று தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி பாஜக தலைவர்களிடம் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். மேலும் மேடையில் பியூஸ் கோயலிடம் பேசிய அதிமுக தலைவர்கள், ''கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் உள்பட தேமுதிக வேட்பாளர்கள் அனைவரும் தோற்றுவிட்டனர். நம்மிடம் பேசிக்கொண்டே திமுக பக்கமும் பேசியிருக்கிறார்கள். ஆனால் திமுக அங்கு கதவை சாத்திவிட்டது. இப்படிப்பட்ட நேரத்தில் தேமுதிக நமக்கு தேவையா? வெற்றிப்பெறுவதற்கான வியூகங்களை நாம் வகுப்போம்'' என்று அட்வைஸ் செய்துள்ளனர். ''திமுகவிடம் சீட் இல்லை என்று சொல்லியும் 45 நிமிடங்கள் சீட் தேவை என்று தேமுதிக நிர்வாகிகள் வலியுறுத்தியதாக துரைமுருகனே பேட்டியில் கூறியிருக்கிறார்'' என பாஜக மேலிடத் தலைவர்களுக்கு எடுத்துக் கூறி தேமுதிகவுக்காக நாம் பேச வேண்டுமா? ஒதுங்கிக்கொள்ளலாமா? என்று யோசிக்குமாறு கூறியுள்ளார் பியூஸ்கோயல். பாஜக மேலிடமும் இதனை யோசிக்க தொடங்கியுள்ளதாம்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.