
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உயிரிழந்த தாயின் வங்கி கணக்கில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் போலீசார் முன்னிலையில் சாலையில் பகிரங்கமாக மோதி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களம்பூர் ரயில்வே ஜங்ஷன் தெருவைச் சேர்ந்தவர் மரகதம்-கோவிந்தசாமி தம்பதி.இவர்களுக்கு மகன் குப்பு, மண்ணம்மாள், அலமேலு என இரண்டு மகள்கள் உள்ளனர். மூன்று பேரும் திருமணம் செய்து தனித்தனியாக வசித்து வரும் நிலையில் தந்தை கோவிந்தசாமி ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு தாய் மரகதமும் இறந்துவிட்டார்.
உயிரிழந்த மரகதத்தின் உடலை உறவினரான பச்சையப்பன் என்பவர் அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மரகதத்தின் மூத்த மகன் குப்பு இறந்து விட்டார். தாய் மரகதம் வங்கிக் கணக்கில் இரண்டு லட்சம் ரூபாய் இருந்துள்ளது. தாயின் வங்கி கணக்கில் உள்ள அந்த தொகையை இருவரும் பிரித்து கொள்ளலாம் என மரகதத்தின் மகள்கள் மண்ணம்மாள் மற்றும் அலமேலு ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
தாயினுடைய உடலை அடக்கம் செய்த பச்சையப்பனுக்கு அந்த தொகையிலிருந்து குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும் என மண்ணம்மாள் தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் மண்ணம்மாளின் இரண்டு மகள்களும் உறவினர்களும், அலமேலுவின் உறவினர்களும் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தைக்காக வந்தனர். அப்பொழுதுஇரு தரப்பிற்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு சாலையில் பகிரங்கமாக தாக்கிக் கொண்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தின் முன்பே இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.