Skip to main content

பொதுமக்கள் ஒத்துழைத்தால் விரைவில் இயல்பு நிலை திரும்பும்! திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
edappadi palanisamy

 

 

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு பணி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். அவரை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வரவேற்றார். அதைத் தொடர்ந்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் மருதராஜ் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.

 

அதன்பின் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசும்போது, கரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பால்தான் முடியும். அரசு அறிவித்த விதிகளை முறையாக கடைபிடித்தால் விரைவில் கரோனாவிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.

 

நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். கரோனா பாதிக்கப்பட்டவர்களை அரசு முறையாக பார்த்துக்கொள்கிறது. தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையிலும் தமிழகத்தில்தான் குறைவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே போல் இன்றைக்கு இறப்பு சதவீதம் குறைவுதான். பொதுமக்கள் அரசின் வழிமுறைகளின் படி முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடித்து செயல்பட்டால் நோய் தொற்றை தடுக்க முடியும்.

 

வெளியில் செல்லும்போது பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும். இந்த அரசுக்கு ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. மக்களை காப்பாற்றுவதுதான் அரசின் கடமை. நோய் தொற்று சிகிச்சை அளிக்க கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்களுக்கு தேவையான உபகரணங்கள் உரிய நேரத்தில் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. நோய்த்தொற்று ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இதன் காரணமாகத்தான் தமிழகத்தில்  இறப்பு சதவீதம் குறைந்துள்ளது.

 

டாக்டர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த நோய் தென்பட்டுவிட்டால் பலரை இழக்கும் சூழ்நிலை கூட ஏற்படும். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் இருந்து கடைகளுக்கு, மார்க்கெட்டுக்கு செல்லும்போது அங்கு சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம். வெளியே சென்று விட்டு வீடு திரும்பும்போது கைகளை நன்கு கழுவ வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். நாம் இருக்கும் தெருவையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் கரோனாவிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

 

அதுபோல் தமிழகத்தில் கரோனா பரிசோதனை படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிமுறைகள்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுகிறேன். பொதுமக்கள் விதிகளை கடைபிடித்து செயல்பட்டால் கரோனாவை கட்டுப்படுத்த முடியும். தமிழகத்தில் மேலாண்மைப் பணிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. நோய் தொற்று குறித்து தகவல் வெளிவந்தது அம்மாவின் அரசு சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டது.

 

குடும்ப அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் அரிசி, எண்ணெய், பருப்பு போன்றவற்றை மூன்று மாதம் வழங்கியது. தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. நவம்பர் மாதம் வரை கூடுதல் அரிசி அரசால் வழங்கப்பட உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை இல்லாத சூழ்நிலை குறித்து அரசின் கவனத்திற்கு வந்தது. அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளன. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு போன்றவையும் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல விரும்பினால் அரசின் செலவில் ரயில் உள்பட போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

 

இந்த அரசை பொருத்தவரை எந்த விதத்திலும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. கர்ப்பிணி பெண்கள், முதியோர், மாணவர் என அனைவரது நலனிலும் அரசு அக்கறை கொண்டுள்ளது, தமிழகத்தில் எந்த பணிகளும் பாதிக்கப்படவில்லை. மீட்பு நடவடிக்கைக்கு தேவையான நிதியும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனாவின் பாதிப்பு அரசின் நடவடிக்கைகளால் குறைந்துள்ளது.

 

இந்த மாவட்டத்தில் நூற்பாலைகள் அதிகம் இருப்பதால் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளது. இங்கு புதிய தொழில் தொடங்க மூன்று நிறுவனங்கள் இணைந்துள்ளன. மாவட்டத்தில் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல தடுப்பணைகள் கட்டும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை நான் பாராட்டுகிறேன் என்று கூறினார்.

 

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு முன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் சீனிவாசன்  மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 1530 பயனாளிகளுக்கு 2 கோடியே 96 லட்சத்து 87 ஆயிரத்து 775 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் 8 கோடியே 88 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 18 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதுபோல் 8 கோடியே 69 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள 42 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவி க்குழுவினர் ஆகியோருடன் தனித்தனியாக கலந்தாய்வு நடத்தினார். இதில் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ரவளி பிரியா மற்றும் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.