நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் அக்கட்சியிலிருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி திமுக, அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் தினகரனின் நம்பிக்கையாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் தேனி மாவட்ட பொறுப்பாளரை நியமிக்க தினகரன் கட்சியினரிடம் ஆலோசனை நடத்தினார். பின்பு தேனி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய மாவட்ட பொறுப்பாளராக முத்துசாமி என்பவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமனம் செய்துள்ளார்.இவர் சின்னமனூர் அருகே உள்ள கீழபூழானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு சின்னமனூர் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்த இவர், தற்போது தேனி மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.