Skip to main content

அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவின் லட்சியத்துக்கு தினகரன் ஒரு சுமை! - நாஞ்சில் சம்பத் அதிரடி அட்டாக்! 

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Dinakaran is a burden to Sasikala's ambition to capture ADMK! - Nanjil Sampath

 

சசிகலாவுக்கும் தினகரனுக்கும் மோதல் என்றும், சசிகலா கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சிகளிலும் அமமுகவினர் கலந்துகொள்ளக் கூடாது என தினகரன் தடை விதித்திருக்கிறார் என்றும் கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாடு அரசியலில் எதிரொலித்தபடி இருக்கிறது. இந்தச் சூழலில், இதுகுறித்து பேட்டியளித்த தினகரன், “அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்காக சசிகலா ‘க்ளைம்’ (உரிமை) பண்ணிவருகிறார். அது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் இருக்கிறது. இந்த நிலையில், அமமுகவினர் கலந்துகொள்வது சட்டச் சிக்கலை உருவாக்கலாம் என்பதால் எங்கள் கட்சி நிர்வாகிகள் தவிர்த்திருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

இப்படி தினகரன் சொல்லியிருக்கும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் விருப்ப மனு வாங்குவதற்கான நிகழ்ச்சிகளில் சசிகலாவின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் பயன்படுத்திவருகின்றனர் அமமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள். தினகரன் சொல்வது உண்மையெனில், அவரது நிர்வாகிகள் சசிகலாவின் படத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்? இதனால் சட்டச் சிக்கல்கள் உருவாகாதா? என்றெல்லாம் சர்ச்சைகள் எதிரொலிக்கச் செய்கின்றன.

 

இந்தச் சூழலில், அமமுகவின் முன்னாள் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் இதுகுறித்து நாம் பேசியபோது, “டி.டி.வி. தினகரன் திசை தெரியாமல் தடுமாறுகிறார்; தத்தளிக்கிறார். தமிழக அரசியலில் அவரை ஆதரித்து நான் பேசிய காலக்கட்டங்களில், அன்றைக்கு வெள்ளம்போல் வந்த இளைஞர்கள் கூட்டத்தில் இன்று ஒருவர் கூட தினகரனிடம் இல்லை. எல்லோரும் விலகிச் சென்றுவிட்டார்கள்.

 

Dinakaran is a burden to Sasikala's ambition to capture ADMK! - Nanjil Sampath
கோப்புப் படம்  

 

ஒரு நம்பகத்தன்மை இல்லாத மனிதன் டி.டி.வி. தினகரன். அவர் என்ன நினைக்கிறார்? என்ன கருதுகிறார்? எப்படி பயணிக்கப் போகிறார்? என்பதை அவர் வெளிப்படையாக எப்போதும் சொன்னதில்லை. ஆகவே, இப்படி உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக நாடகமாடும் டி.டி.வி. தினகரன், இன்றைக்கு சசிகலா அம்மையாரின் படத்தைப் போட்ட விருப்ப மனு படிவத்தை விநியோகித்திருக்கிறார் என்றால், சசிகலா இல்லாமல் அவருடைய தயவும் தாட்சண்யமும் இல்லாமல் ஒரு நிமிடம் கூட அவரால் இயங்க முடியாது என்பது தற்போது உண்மையாகியிருக்கிறது.

 

அதே நேரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக சசிகலா அம்மையார் முன்வருகிறபோது, அந்த நிகழ்ச்சிக்கு அமமுக நிர்வாகிகள் போகக் கூடாது என தடுக்கிறார். ஆகவே, வெளிப்படையாக, மிக கேவலமாக ரெட்டை வேடம் போடுகின்ற தினகரனை நம்புவதற்கு யாருமே தயாராக இல்லை. 

 

சசிகலாவின் படத்தை அச்சிடாமல் விருப்ப மனு படிவத்தைக் கொடுத்திருந்தால் விருப்ப மனுவைக் கூட ஒருத்தரும் தாக்கல் செய்திருக்க மாட்டார்கள். அமமுகவின் இன்றைய நிலைமை இதுதான் என்றால், நாளைக்கு அதிமுகவுக்கும் அந்த நிலைமைதான் வரும்.  அதனால், சசிகலா என்பவர் தவிர்க்க முடியாதவராக மிக சாதுர்யத்துடனும் சாணக்கியத்தனத்துடனும் அரசியல் செய்கிறார்.

 

அவர் இதுவரைக்கும் டி.டி.வி. தினகரனின் பெயரையோ, அமமுக பெயரையோ உச்சரிக்கவில்லை. நடந்து முடிந்த பொதுத்தேர்தலானாலும், உள்ளாட்சி மன்றத் தேர்தலானாலும் அமமுகவிற்கு ஆதரவு தாருங்கள் என ஒரு இடத்தில் கூட சசிகலா கேட்கவில்லை. ஆகவே, அதிமுகவுக்குத் தலைமை தாங்கக் கூடிய லட்சியத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிற சசிகலா அம்மையாருக்கு, டி.டி.வி. தினகரன் ஒரு சுமையாக இருக்கிறார்; ஒரு தடையாக இருக்கிறார் என்பதுதான் உண்மை. 

 

Dinakaran is a burden to Sasikala's ambition to capture ADMK! - Nanjil Sampath

 

ஆகவே, நிர்தாட்சியமாக, டி.டி.வி. தினகரனை நிராகரித்துவிட்டுப் பயணத்தை தொடங்கியுள்ள சசிகலா, தினகரனை அலட்சியப்படுத்துவது மட்டுமல்ல; அரசியலில் இருந்து தினகரனை அப்புறப்படுத்தவும் முன்வர வேண்டும். அப்போதுதான் சசிகலாவின் பயணம், அவரது இலக்கை எட்டுவதற்கு துணை நிற்கும்” என்றார் மிக அதிரடியாக.

 

தொடர்ந்து நம்மிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்காக சசிகலாவின் உரிமை கோரும் முயற்சிக்கு சட்டச் சிக்கல் வந்துவிடக் கூடாது என தினகரன் சொல்வது, அரசியலில் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவர் தருகிற மரண வாக்குமூலம் அது. சசிகலா இவரை எப்போதும் சேர்த்துக்கொள்ள மாட்டார். அவரை தனது லட்சியத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளவும் கருத மாட்டார். அவருடைய பயணத்தில் ஒரு இடத்துக்கும் இனி அழைக்க மாட்டார். ஆகவே, டி.டி.வி. தினகரன் ஒரு அரசியல் அனாதை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விரைவில் தெரியும்” என்று அணுகுண்டு போல வெடித்தார் நாஞ்சில் சம்பத்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.