Skip to main content

அடித்தட்டு மக்களுடைய சிரமங்களை புரிந்து கொள்ளாமலே உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கிறார்கள்... ஈ.ஆர். ஈஸ்வரன் 

Published on 01/09/2020 | Edited on 01/09/2020
bus

 

 

அடித்தட்டு மக்களுடைய சிரமங்களை புரிந்து கொள்ளாமலே உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய மாநில அரசுகளை குற்றம் சாட்டியுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றிலிருந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கின்ற மாநில அரசு மாவட்டங்களுக்குள்ளே பொது போக்குவரத்தை அனுமதித்திருக்கிறது. ஆனால் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் ஒரு மாவட்டத்திற்குள் ஒரு பேருந்தில் பயணித்து விட்டு மாவட்ட எல்லையில் இறங்கி அடுத்த மாவட்ட பேருந்தில் ஏறி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த சிரமம் பயணிக்கின்ற அடித்தட்டு மக்களுக்குதான் தெரியும். மாவட்டங்களுக்குள்ளே பயணித்தால் கரோனா பரவாது என்ற நிலைபாடும், அதே பேருந்து பக்கத்து மாவட்டத்திற்குள் நுழைந்தால் கரோனா பரவும் என்ற நிலைப்பாடும் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

உதாரணத்திற்கு கரூரிலிருந்து ஈரோடு வர வேண்டுமென்றால் மூன்று பேருந்துகள் மாறி வர வேண்டியிருக்கிறது. அதே சமயத்தில் பக்கத்து மாவட்டத்திற்குள் பயணிக்காமல் விவசாய வேலைக்கு செல்ல முடியாது. தொழிற்சாலைகளுக்கு செல்ல முடியாது. ஆயிரக்கணக்கான கட்டிட வேலை தொழிலாளர்கள் செல்ல முடியாது. வாழ்வாதாரத்திற்காக எல்லோரும் மாவட்ட எல்லைகளில் சிரமப்பட்டு பேருந்து மாறி பயணிக்கிறார்கள். அரசு இந்த சிரமத்தை புரிந்து கொண்டு மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும்.

 

வருமானத்திற்கு வழி இல்லாமல் குடும்பத்தில் சாப்பிடுவதற்கே சிரமப்பட்டு கொண்டிருக்கின்ற மக்களை மின்சார வாரியத்திற்கு கூடுதல் வைப்புத்தொகை கட்ட வேண்டுமென்று நிர்பந்திப்பது எந்த விதத்தில் நியாயம். தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு இப்போதுதான் ஆட்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். தயாரிக்கின்ற பொருட்கள் எப்போது விற்கும் என்று தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மின்சார வாரியத்திற்கு வைப்புத்தொகையை அதிகமாக கட்ட வேண்டுமென்று வற்புறுத்துவதும் நியாயமில்லை. கரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து எல்லோரும் மீள்கின்ற வரை மின்சார வாரியம் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்க கூடாது.

 

போக்குவரத்து துறை மிகவும் மந்தமான சூழலில் இருக்கிறது. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. எந்த வியாபாரமும் சரிவர நடக்கவில்லை. மக்கள் போக்குவரத்துக்கே அரசு இப்போதுதான் அனுமதித்திருக்கிறது. இப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணத்தை அதிகரித்து வாங்குவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது.

 

வாங்கிய கடனுக்கு மாதாந்திர தவணைகளை கட்ட கால அவகாசம் கொடுத்த அரசு இன்றைக்கு வட்டிக்கு வட்டி போட்டு தவணையை கட்ட கட்டாயப்படுத்துகிறது. மாத தவணை கட்டுவதற்கு இன்னும் ஆறு மாத காலம் கால அவகாசம் வேண்டும். கரோனா பாதித்த காலத்திற்கு வட்டி தள்ளுபடியும் அறிவிக்க வேண்டும்.

 

மொத்தத்தில் மத்திய, மாநில அரசுகள் அடித்தட்டு மக்களுடைய சிரமங்களை புரிந்து கொள்ளாமலே உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கின்ற வகையில் பரிசீலித்து நடந்து கொள்ளுங்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
incident for tirupur vellakoil car and govt bus

திருப்பூரில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம் என்ற பகுதியில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே போன்று திருப்பூரில் உள்ள நல்லிக்கவுண்டன் வலசு என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 6 பேருடன் பயணம் செய்துள்ளார். இவர்கள் திருக்கடையூரில் உள்ள கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தான் ஓலப்பாளையத்தில் இன்று (09.04.2024) அதிகாலை நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே  காரில் பயணித்த இளவரசன் (வயது 26), சந்திரசேகரன் (வயது 60), சித்ரா (வயது 57), அறிவித்ரா (வயது 30) மற்றும் 3 மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.