Skip to main content

எனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை... அரசியலில் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு உதவிய ஓபிஎஸ்!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

தியாகமும் எளிமையுமே பொதுவாழ்வு என அரசியல் இலக்கணமாகத் திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் தோழர் நல்லகண்ணு, சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தார். 1953-ல் கட்டப்பட்ட இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்களை, சீரமைப்புக் காரணங்களுக்காக உடனடியாக வெளியேற உத்தரவிட்டது அரசு.

இது பொதுத்தளத்தில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், "பொது ஒதுக்கீட்டில் இங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துதரப்படும்' என பின்னர் அரசு விளக்கமளித்தது. அரசின் உத்தரவை ஏற்ற நல்லகண்ணு தாமாகவே வீட்டை காலி செய்து வெளியேறினார். அதேசமயம், தனக்கு வீடு இல்லையென்றாலும் பரவாயில்லை. கக்கன் குடும்பத்தினருக்கு வேறு வீடு ஒதுக்கித் தரும்படி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 

nallaknnu



இந்நிலையில், நல்லகண்ணுவைத் தொடர்புகொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மாற்று ஏற்பாடு தொடர்பாக உத்தரவாதம் கொடுத்திருந்தார். அதன்படி, சென்னை நந்தனம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் லோட்டஸ் காலனி 3-ஆவது தெருவில், இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட தனி வீடு நல்லகண்ணுவிற்கு ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. இந்த வீட்டில் ஆயுள் முழுவதும் நல்லகண்ணு வசிக்கலாம். வாடகை இல்லை.

தனது இரண்டாவது மகளான ஆண்டாளின், கே.கே.நகர் வீட்டில் குடும்பத்தினருடன் வசித்துவந்த நல்லகண்ணு, தற்போது தனக்கு ஒதுக்கப்பட்ட புதிய வீட்டில் குடியேறியிருக்கிறார். “நேர்மை மற்றும் எளிமையான அரசியல் வாழ்க்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறேன். என்னிடம் இரண்டாயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றை வைப்பதற்காக, இந்த வீட்டில் தனிஅறை ஒதுக்கியிருக்கிறேன். புத்தகங்கள்தான் என் வாழ்வை நகர்த்த உதவுகின்றன. எப்போதெல்லாம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் புத்தக வாசிப்பில் ஈடுபடப் போகிறேன்'' என்கிறார் மூத்த தோழர் நல்லகண்ணு.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.