Skip to main content

8ஆம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்... தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

Published on 06/08/2020 | Edited on 06/08/2020

 

erode

 

ஈரோட்டில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அதன் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி., மாநிலச் செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். எச்.எம்.எஸ்., சண்முகம், சி.ஐ.டி.யு., ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

பிறகு இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 

 

"போக்குவரத்து, மின்சாரம், வங்கிகள், இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு, ரயில்வே என மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிபந்தனையின்றி கெரோனா நிவாரணம் வழங்க வேண்டும்.

 

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இலவச உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். இயற்கை வளங்களை அழிக்கக் கூடாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

 

வரி வருவாய் செலுத்தும் அளவுக்கு வருவாய் ஈட்டாத குடும்பங்களுக்கு இந்த கரோனா பொதுமுடக்க காலமான ஆறு மாதத்துக்கும் தலா, ரூபாய் 7,500 வீதம் வழங்க வேண்டும். ஊழியர்களின் அகவிலைப்படி, லீவு சரண்டர் போன்றவைகளை ரத்து செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

 

அதே போல் இக்கோரிக்கையை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி., – சி.ஐ.டி.யு., – எச்.எம்.எஸ்., – ஐ.என்.டி.யு.சி., – எல்.பி.எப்., உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளார்கள். ஈரோடு மாவட்டத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.