கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மிகுந்த ஏற்படுத்தியிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, நடக்காமலேயே நிறைவடைந்திருக்கிறது. கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக அவர் ஆற்றிய 13 பக்க உரையில், அம்பேத்கரின் 150ஆவது பிறந்த தினத்தில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தன்னை முதல்வர் வேட்பாளராக நியமித்தனர். விவசாயக் கடன்களை ரத்து செய்ததைப் போல ஏழை, எளிய மக்களுக்காக நான் உழைத்துக் கொண்டிருப்பேன் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தனக்கு பெரும்பான்மை இல்லாததை ஒப்புக்கொண்டதற்கு அடையாளமாக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதுகுறித்து பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்க இருக்கிறார். இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உச்சநீதிமன்றத்தின் சரியான நடவடிக்கைகளால் கர்நாடக மாநிலத்தில் ஜனநாயகம் காக்கப்பட்டிருக்கிறது. குமாரசாமி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் நடைபெற இருக்கும் தேர்தல்களிலும், மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பின் மூலம் இதே வெற்றி மீண்டும் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.