Skip to main content

அதிமுக அரசு இந்திய விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்... கே.பாலகிருஷ்ணன்

Published on 04/12/2020 | Edited on 04/12/2020
K. Balakrishnan

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தமிழ்நாடு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. செயற்குழுக் கூட்ட முடிவுகள் குறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில்,  

 

"நவம்பர்-26 ஆம் தேதி முதல் "டெல்லிக்கு செல்வோம்"(டெல்லி சலோ) என்ற முழக்கத்தினை முன்வைத்து பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பிகார், மகாராஷ்ட்ரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் வந்து குவிந்து வருகின்றனர்.

 

மத்திய பாஜக அரசு அனைத்து திசைகளிலிருந்தும் வந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தியுள்ளது. இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி நுழைவு வாயிலில் அதே இடத்தில் தங்கியிருந்து வெட்ட வெளியில் உண்டு, கழித்து, உறங்கி எட்டு நாட்களாக மூன்று வேளாண் விரோத சட்டங்களையும், மின்திருத்த மசோதா 2020ஐயும் திரும்பப் பெறும் வரை ஊர் திரும்ப மாட்டோம் எனப் போராடி வருகின்றனர்.

 

பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை இழுத்தடித்து வருகிறது மோடி அரசு. மோடி தலைமையிலான அரசைக் கண்டிக்கும் வகையிலும் போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்கும் வகையிலும் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்து இந்திய விவசாயிகளை கார்பரேட் அடிமைகளாக மாற்றும் 3 வேளாண் விரோத சட்டங்களையும், வேளாண்மைத் தொழிலுக்கு உயிர் நாடியாக இருக்கும் மின்சாரத்தை வணிகப் பண்டமாக்குகிற மின் மசோதா2020 ஐயும் பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

 

இந்தச் சட்டங்களால் தமது வாழ்வாதரம் முற்றாக அழிந்து விடும் என்பதை உணர்ந்த விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. வாட்டுகிற கடுங்குளிரில் வெட்ட வெளியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.

 

இவ்வாறு பிரதமர் மோடியின் அரசு அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்களின் கொள்ளைலாபத்திற்காக மட்டுமே செயல்படுவதால் இந்தப் போக்கைக் கண்டிக்கும் வகையில் பிரதமர் மோடி, அம்பானி, அதானி ஆகியோரின் உருவபொம்மைகளை டிசம்பர் 5/2020 அன்று இந்தியா முழுவதும் எரித்து, எதிர்ப்பு தெரிவிப்பதென AIKSCC அகில இந்திய செயற்குழு அறிவித்துள்ளது. 

 

AIKSCCயின்  தலைமைக்குழு முடிவிற்கிணங்க தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி, அம்பானி, அதானி ஆகியோர் உருவபொம்மைகள் எரிப்புப் போராட்டம் நடத்துவது. டிசம்பர் 9/2020 முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முன் தொடர் காத்திருப்புப் போராட்டம்.

 

வாட்டும் குளிரில் வதைபட்டு வேளாண் தொழிலைப் பாதுகாக்கப் போராடும் விவசாயிகளை உடனடியாக அழைத்துப் பேசி பாஜக தலைமையிலான இந்திய அரசு தீர்வு காண வேண்டும். இந்திய விவசாயிகளை கார்பரேட் முதலாளிகளுக்கு அடிமைப்படுத்தும் 3 வேளாண் விரோத சட்டங்கள் நிறைவேற மாநிலங்களவையில் துணை செய்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு.

 

இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த அதிமுக அரசு இந்திய விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். வேளாண் விரோத சட்டங்களை எதிர்ப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர்-9 /2020 ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் தொடர்காத்திருப்புப் போராட்டம் தொடங்குவது. 

 

விவசாயிகளின் நியாயமான இந்தப் போராட்டங்களுக்கு அனைத்து சிவில், சமூக, அரசியல் இயக்கங்களும் மற்றும் மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் முழுஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்ட ராம்தேவ்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Ramdev apologized publicly to the Supreme Court!

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story

கெஜ்ரிவால் வழக்கு; அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Kejriwal case Supreme Court ordered the enforcement dept to respond

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (15.04.2024) விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த கெஜ்ரிவால் தரப்பு வாதடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Kejriwal case Supreme Court ordered the enforcement dept to respond

அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (15.04.2024) முடிவடைவதையொட்டி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.