ADVERTISEMENT

“அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்கும்” - ஜெயக்குமார்

01:10 PM Jan 25, 2024 | mathi23

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அந்த வகையில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் அமைச்சர்களான நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் என 10 பேர் இடம் பெற்றிருந்தனர். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று (25.01.2024) காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களின் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் பெற அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் முடிந்து பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மாநிலத்தின் நலனை மையமாக கொண்டு அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை மக்களின் நலன் சார்ந்ததாக அமையும். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், இன்றைக்கு மக்கள் முழுமையாக தெளிவாக இருக்கிறார்கள். அதனால், இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டு மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது.

அதனால், அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு பெரிய சூப்பர் ஹீரோவாக தமிழ்நாட்டில் இருக்கும். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. டி.டி.வி. தினகரனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. தினகரன் தனி மரம். அதிமுக ஒரு தோப்பு. அதனால், அவர் கூறும் கருத்துக்களை பெரிதாக பார்ப்பதில்லை. உரிய நேரத்தில் அதிமுக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT