Skip to main content

நான் பரம்பரை பணக்காரன்... டெண்டரை எடுத்துதான் சம்பாரிக்கணும்னு அவசியமில்லை... அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அரசியல்!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

சில மாதங்களுக்கு முன்பு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றியும் ஜனவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு கிடைத்த வெற்றியும் விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை கட்சிக்குள் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது.

அதனால் இப்போதைய அரசியலைவிட வருங்கால அரசியலிலும் கட்சித் தலைமையிலும் தன்னை வலுப்படுத்திக்கொள்ளும் வேலைகளில் இறங்கி விட்டார் சண்முகம்.

இதற்கு அச்சாரமாக மாவட்டம் முழுவதும் இருக்கும் கட்சிப் பதவிகளில் இருப்பவர்களை கடாசி விட்டு, தனது விசுவாசிகளுக்கு கட்சிப் பதவிகளை வாரி வழங்கி வருகிறார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த ராஜரத்தினம், எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் மாஜி எம்.பி. ஏழுமலை, அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் துரைசாமி, வக்கீல் அணி செயலாளர் கொடுமுடி சேரலாதன், ஐ.டி. விங் மணவாளன், ஒலக்கூர் ஒ.செ.ராஜேந்திரன், விக்கிரவாண்டி ஒ.செ. சேவல்வேலு, செஞ்சி பேரூர் செயலாளர் பிரித்விராஜ், மரக்காணம் பேரூர் செயலாளர் கணேசன் ஆகியோரின் பதவிகளுக்கு வேட்டு வைத்துவிட்டார் சண்முகம்.
 

admk



மா.அ.த.வாக செஞ்சி கண்ணன், எம்.ஜி.ஆர். ம.செ.வாக எஸ்.பி.ராஜேந்திரன், மா.து.செ.வாக மரக்காணம் கணேசன், மகளிரணி செயலாளராக கிளியனூர் தமிழ்ச்செல்வி, இவர்கள் தவிர மாணவரணி, ஐ.டி. விங், வக்கீல் அணி, விவசாய அணி என அனைத்துப் பதவிகளுக்கும் தனது விசுவாசிகளின் பட்டியலைக் கொடுத்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரின் ஒப்புதலுடன் கடந்த 27-ஆம் தேதி பட்டியலையும் ரிலீஸ் பண்ணிவிட்டார் சண்முகம்.

அதேபோல் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் வரும் ஒன்றியங்களை இரண்டாகப் பிரித்து தனது ஆட்களுக்கு பதவிகளை அள்ளி வழங்கி ஆனந்த மடைந்திருக்கிறார் சண்முகம். ஆனால் பதவி இழந்தவர்கள் மத்தியில் ஆங்காரமும் கோபமும் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. சண்முகத்தால் பதவி பறிக்கப்பட்ட செஞ்சி பேரூர் செயலாளர் பிரித்விராஜனின் தந்தை ரங்கநாதன், நீண்ட நெடுங்காலமாக அ.தி.மு.க.வில் இருப்பவர், வசதி வாய்ப்புகளுக்கும் குறைவில்லாதவர். செஞ்சி பகுதியில் செல்வாக்கு மிக்கவர்.

சமீபத்தில் செஞ்சியிலிருந்து களவாய்—-சேத்துப்பட்டு ஊர்களை இணைக்கும் சாலைக்கான டெண்டருக்கு விண்ணப்பம் போட்டார் ரங்கநாதன். ஆனால் அமைச்சர் சண்முகத்தின் கைங்கர்யத்தால் தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு டெண்டர் வழங்கப்பட்டது. இதனால் கடுப்பான ரங்கநாதன், சமீபத்தில் செஞ்சி அரசு விருந்தினர் விடுதியில் இருந்த அமைச்சர் சண்முகத்திடம் கேட்டபோது, அலட்சியமாகப் பேசினாராம் அமைச்சர்.

 

admk



இதனால் மேலும் உஷ்ணமான ரங்கநாதன், “நான் பரம்பரை பணக்காரன், சாலைப் பணி தரமா இருக்கணும்தான் டெண்டர் போட்டேன். இந்த டெண்டரை எடுத்துதான் சம்பாரிக்கணும்னு அவசியம் இல்லை'' என ஆவேசமாக கூறிவிட்டு வெளியேறி விட்டாராம்.


நாம் விழுப்புரம் நகர சீனியர் ர.ர.ஒருவரிடம் பேசியபோது, "எங்க அம்மா மற்றும் சின்னம்மாவின் ஆசியுடன் டாக்டர் லட்சுமணன் மா.செ.வாகி, ராஜ்யசபா எம்.பி.யுமானார். கட்சிக்குள் அவரின் திடீர் ஸ்பீடால், சண்முகத்தின் ஆதரவாளர்கள் ஏகப்பட்ட பேர் லட்சுமணனை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். அம்மா மரணம், சின்னம்மா ஜெயில்ல என நிலைமை மாறியதும் சண்முகத்தின் கை ஓங்கியது, போனவர்கள் எல்லாம் திரும்பி வந்தார்கள். விழுப்புரம் தெற்கு மா.செ. குமரகுரு எப்போதுமே எடப்பாடியின் நிழவில் இருப்பவர். ஆனால் சண்முகமோ தன்னை தனித்துக் காட்டவேண்டும் என நினைப்பவர். அமைச்சருக்கு எல்லாமுமாக இருந்து வழிநடத்துவது அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் தான்'' என்றார். விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் சண்முகத்தின் சடுகுடு அரசியல் ஜரூராக நடக்கிறது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.