Skip to main content

“நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும்” - சி.வி. சண்முகம் ஆரூடம்

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

cv sanmugam talk about parliamentary elections and assembly elections come to same

 

அ.தி.மு.க -வின் 51-வது பொன்விழா ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பாக விருத்தாச்சலம் வானொலி திடலில் பொன்விழா  பொதுக்கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் தலைமையில் நடைபெற்றது.

 

சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசுகையில், " எம்.ஜி.ஆரால் தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. 50 ஆண்டுகால கட்சி வரலாற்றில் 32 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த மாபெரும் இயக்கமாகத் திகழ்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அதிமுகவை பிளவுபடுத்தி விடலாம் என கனவு காண்கிறார். முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த, அ.தி.மு.க தொண்டர்களின் கோவிலாக இருக்கக்கூடிய தலைமைக் கழகத்தை தி.மு.கவுடன் இணைந்து காவல்துறை துணையுடன் உள்ளே புகுந்து சூறையாடிச் சென்ற ஓ.பி.எஸ் ஒரு கருங்காலி, துரோகி. இங்கு இருந்து எல்லாப் பதவிகளையும் சுகங்களையும் அனுபவித்த  கருங்காலி ஓ.பி.எஸ்ஸை வைத்துக் கொண்டு அ.தி.மு.கவை அழித்து விடலாம் என நினைக்க வேண்டாம். அது முடியவே முடியாது.

 

தி.மு.க ஆட்சி முடிவதற்கு 5 வருடம் காத்திருக்கத் தேவையில்லை. தி.மு.க ஆட்சி எப்போது போகும் என திமுகவினரே புலம்புகின்றனர். மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்க்கவில்லை. தேர்தலின் போது கொடுத்த 525 வாக்குறுதிகள் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 46 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அதில் 15 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விண்ணை முட்டும் அளவில் உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. சொத்துவரி உயர்ந்துவிட்டது.  கிராமப்புறங்களிலும் வீடுகளுக்கான சொத்துவரி வசூலிக்கப்படவுள்ளது. மேலும் மக்களுக்கு அடுத்த பரிசாக பேருந்து கட்டணம் உயர உள்ளது. தமிழகத்தில்  அனைத்து மாவட்ட மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. உயிர் காக்கும் மருந்துகள் கூட அரசு மருத்துவமனையில் இல்லை. 

 

மக்கள் பிரச்சனைகளை மறக்கடிப்பதற்காக தி.மு.க இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் நடத்தும் சன் சைன் பள்ளியில் தமிழில் பேசினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அப்பள்ளியில் ஹிந்தி கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும்" எனத் தெரிவித்தார்.

 

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், சிவசுப்பிரமணியன், நகர செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், தம்பிதுரை, ரகுராமன், பச்சமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.