கடலூர் மாவட்டத்தில் 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் திமுக கூட்டணி 14 இடங்களிலும், அதிமுக கூட்டணி 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் 4வது வார்டில் முத்துகிருஷ்ணன் என்பவரும், 13வது வார்டில் விருத்தாசலம் டாக்டர் தமிழரசி 24வது வார்டிலும், பரங்கிப்பேட்டை ரிஸ்வானா பர்வீன் 24 ஆவது வார்டிலும் நின்று வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisment

PMK

மாவட்ட குழு தலைவர் பதவியை பாமவிற்கு வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் ஆலோசனையின் பேரில் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகிய இருவரையும் சந்தித்து பேசியுள்ளனர்.

Advertisment

அந்த பேச்சின்போது வடமாவட்டங்களில் மாவட்ட குழு தலைவர் பதவிகளில் 3 கேட்டுள்ளனர். அதிமுக தரப்பில் இரண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அதில் கடலூர் மாவட்டம் ஒன்று. இந்த நிலையில் கடலூர் மாவட்ட குழு தலைவர் பதவியை பாமக கவுன்சிலர் டாக்டர் தமிழரசிக்கு வழங்க வேண்டும் என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது.

காரணம். டாக்டர் தமிழரசி விருத்தாசலத்தில் அரசு மருத்துவ பணியில் சிறப்பாகப் பணியாற்றியதோடு, மதுவுக்கு எதிராக மிக தீவிரமான பல போராட்டங்களை நடத்தியவர். மேலும் ராமதாஸ் குடும்பத்திற்கு ஒரு விதத்தில் நெருங்கிய உறவினரும்கூட. எனவே தமிழரசிக்கு தலைவர் பதவியும் கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த ரிஸ்வானா பர்வீனுக்கு துணைத் தலைவர் பதவியும் வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகள் இரு கட்சியினரும் முன்வைத்துள்ளனர்.

Advertisment

இந்தநிலையில் திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அதிமுக கூட்டணியை உடைத்து திமுக தலைமையில் மாவட்ட குழு தலைவர் பதவியை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. அதிமுக கவுன்சிலர்கள் சிலருடைய ஆதரவும், தேமுதிக கவுன்சிலர் ரிஸ்வானா பர்வீன் ஆகியோரின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்க இருப்பதாக திமுக தரப்பில் பேசப்படுகிறது. இப்படி அதிரடியாக நடக்கவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பண பலம், படை பலம், அதிகார பலம் கொண்ட ஆளுங்கட்சி அமைச்சர் சம்பத் மாவட்ட செயலாளராக உள்ள கடலூரில், தி.மு.க. மா.செ. எம்.ஆ.ர்.கே. பன்னீர்செல்வம் இதுபோன்ற திருப்பத்தை ஏற்படுத்தி விடுவாரா என்ற பயம் அதிமுகவிடம் உள்ளது. ஆனால், அதுபோன்று நடக்காது. புரளி கிளப்புகிறார்கள் என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள் என்கின்றனர் திமுகவினர்.