Skip to main content

“இந்த நாடாளுமன்ற தேர்தலில் முக்கியமான கேள்வி, இனி இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்குமா, பாசிச சர்வாதிகாரம் நிலைக்குமா” - வைகோ

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஈரோடு தொகுதி வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து வைகோ ஈரோட்டில், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை பரப்புரை  மேற்கொண்டார். 

 

The crucial question of this parliamentary election is whether India will adopt democracy or fascism


 
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் தொடங்கி அவர் பேசியது "வரும் நாடாளுமன்ற தேர்தலானது ஜனநாயகத்துக்கும், பாசிசத்துக்கும் இடையே நடக்கிற யுத்தம் போன்றது. இங்கு அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். சைவமும், வைணவமும் இணைந்து தமிழை வளர்த்தது.  



திமுக கூட்டணி எல்லா சமயங்களையும் மதிக்கின்ற கூட்டணி. ஆனால் ஒரே மதம், ஒரே மொழி என்ற அடிப்படையிலே கடந்த 5 ஆண்டு காலத்தில் நரேந்திர மோடி தலைமையில் பாசிச ஆட்சி நடந்து வந்திருக்கிறது.


 
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்படும் என மோடி தெரிவித்தார். அவர் 2,000 பேருக்குக்கூட வேலை கொடுக்கவில்லை. வீட்டுக்கு வீடு ரூ.15 லட்சம் கொடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால், 15 ரூபாய் கூட வந்து சேரவில்லை. கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை.   
  

ஈரோடு எம்பியாக 2009 முதல் 2014 வரை இருந்த கணேசமூர்த்தி, 2014-ல் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த கமல்நாத்தை சந்தித்து வலியுறுத்தியதன் காரணமாக ஈரோடு மாநகருக்கு ரூ. 560 கோடி மதிப்பிலான ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.
 


 
ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சென்று வர தொழிலாளர்கள் பல ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.25 கட்டணத்தில் ரயில் பயண அனுமதி அட்டைகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
 

 
ஜி.எஸ்.டி.யால் தமிழகத்தில் 50,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் பேர் வேலையிழந்து தவிக்கின்றனர். சிறுவணிர்களுக்கு இந்த அளவுக்கு சோதனைகளை கொடுத்துவரும் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராள சலுகைகளை வழங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 23 பெரிய தொழிலதிபர்கள் 90,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுவிட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடிக்கு வரிச்சலுகையை அளித்துள்ளது. ரூ.2.42 லட்சம் கோடி கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 
  
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் புதிதாக அணை கட்டுவோம், பென்னிகுக் கட்டிய அணையை உடைப்போம் என்று கூறும் கேரள அரசுக்கு மத்திய அரசு பச்சைக் கொடி காட்டுகிறது. தமிழகத்தை வஞ்சிக்கிறது.

 

தஞ்சை மண்ணில் பல வகையான எரிவாயுவை எடுத்தால் இந்திய அரசுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் கிடைக்கும். தனியார் நிறுவனங்களுக்கு பல்லாயிர கணக்கிலான கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால், விவசாயிகள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறுவார்கள். இப்படிப்பட்ட கொடிய திட்டத்தின் மூலமாக வேதனைகளை கொடுத்த மத்திய அரசு தேவையா என்பதை தீர்மானிக்கும் நேரம் இது.



பொறியியல் படித்த பல லட்சம் மாணவர்கள் உரிய வேலை கிடைக்கப் பெறாமல் திண்டாடி வருகின்றனர். அவர்கள் குறைந்த ஊதியத்தில் ஏதேனும் வேலை செய்து பிழைக்கும் நிலை உள்ளது.

 
 
கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டினால், தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. இதனால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கப் பெறாமல் பாலைவனமாக மாறிவிடும். பின்னர் அந்த நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கி, நிலத்தடியில் உள்ள மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற எரிவாயுக்களை எடுப்பார்கள். இதன் மூலம் 5 ஆண்டுகளிலே தமிழகம் பஞ்சத்தால் பாலைவனமாகிவிடும். தமிழகத்துக்கு இதுபோன்ற பேராபத்து இதுவரையிலும் வந்தது கிடையாது.



தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல். முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை காக்க முயலாமல், மத்திய அரசுக்கு கைக்கூலியாக அதிமுக அரசு உள்ளது. நிகழாண்டு ஆட்சி மாற்றங்களின் ஆண்டாக அமையும். பாசிச பாஜக ஆட்சியும், ஊழல் மிகுந்த அதிமுக அரசும் அகற்றப்படும். தேர்தலில் வீடு வீடாக பல ஆயிரம் ரூபாய் வழங்கி வெற்றி பெற்று விடலாம் என்று அதிமுகவினர் கருதுகின்றனர். அவர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். மக்கள் தங்களை விற்க தயாராக இல்லை.

  
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது போல் திராவிட கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து மத்தியிலே அமைக்கின்ற அரசில், ராகுல் காந்தியே பிரதமர் பொறுப்பு ஏற்பார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் முக்கியமான கேள்வி, இனி இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்குமா, பாசிச சர்வாதிகாரம் நிலைக்குமா? என்பது தான். அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்" என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.