Skip to main content

டெல்டாவில் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் -மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

create- entrepreneurs- in Delta-says -thamimum ansari - mjk

 

டெல்டா தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் காணொளி வழி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 18.09.2020 அன்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார்.

 

அவர் பேசியதாவது, "இங்கு ONGC, CPCL போன்ற மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் நமது மண்ணை சேர்ந்தவர்கள் குறைவானவர்களே பணிபுரிகிறார்கள். அந்த நிறுவங்கள் நமது இயற்கை வளங்களை வேட்டையாட முயலும் போது எதிர்ப்புகளைச் சந்திக்கின்றன. மீத்தேன் - ஹைட்ரோகார்பன் போன்றவற்றை எடுக்க பெருநிறுவனங்கள் முயலும்போதும் மக்கள் எதிர்க்கிறார்கள். நமது நிலம், நீர், காற்று பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். அந்த வகையில் நமது இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு இல்லாத தொழில்களை நாம் உருவாக்க வேண்டும். மதிப்புக் கூட்டு வணிகங்களை ஊக்குவிக்க வேண்டும். நீண்ட கடல் வளம் உள்ளது. அதையும் பயன்படுத்த வேண்டும்.

 

நான் நாகைக்கு மருத்துவக் கல்லூரிக்கு குரல் கொடுத்தேன். அது கிடைத்திருக்கிறது. நாகைக்கு சட்டக்கல்லூரி, நாகூருக்கு மகளிர் கலைக் கல்லூரி ஆகியவற்றை அரசிடம் கேட்டு வருகிறேன். இதுவும் வளர்சிக்குத் துணை நிற்கும். ஆயக்காரன்புலத்தில் ஜவுளி பூங்காவை முதல்வர் அறிவித்துள்ளார். இது நேரடியாகவும், மறைமுகமாகவும் 21-ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை தரும். ஒரு குட்டி திருப்பூர் உருவாக உள்ளது. வேதாரணியத்தில் துளசியாப்பட்டினம் அருகே வண்டு வாஞ்சேரியில் உணவு பூங்கா அமைய உள்ளது. இது உணவு சார்ந்த தொழில் உற்பத்தியைப் பெருக்கி, வேலை வாய்ப்புகளையும் தரும்.

 

இவை டெல்டா மாவட்டங்களுக்கு பயன் தருபவை. டெல்டா என்பது தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்குப் பகுதிகள், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் ஆகியன அடங்கியவை. முழு டெல்டா மாவட்டங்களுக்கும் பயன்தரும் வகையில், நாகை துறைமுகத்தை தனியார் பங்கேற்போடு மேம்படுத்த முதல்வரிடம் பேசியுள்ளேன். அந்த முயற்சி வெற்றி பெறுமேயானால் டெல்டா மாவட்டங்கள் தொழில் மயமாகும். ஏற்றுமதி - இறக்குமதி பெருகும். நேரடி வேலைவாய்ப்புகளும், மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாகும். நில விற்பனை, புதிய கட்டிடங்கள் என ரியல்  எஸ்டேட் தொழிலும் பெருகும்.

 

Ad

 

அது போல் நாகைக்கும், இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய அரசிடம் பேச வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதன் மூலம் சுற்றுலாத் துறை வளர்ச்சி பெற்று, போக்குவரத்து பெருகும். இந்தக் கனவுகள் நிறைவேற தொடர்ந்து உழைக்க வேண்டியுள்ளது. நீங்கள் உறங்கும் போது வருவதல்ல கனவு. உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு என்றார் அப்துல் கலாம். கனவுகள் மெய்ப்பட வேண்டி உழைப்போம். நமது டெல்டாவில் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும். ஊக்குவிக்க வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திணறும் தலைநகர்; டெல்டாவில் வெடித்த விவசாயிகளின் போராட்டம்! 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
rally in Delta district in support of Delhi struggle

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்து என்பன உள்ளிட்ட வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்த பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் இந்தியத் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற போது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து  தடுக்கப்பட்டனர்.

தடுப்புக்கட்டைகளை தகர்த்தெரிந்த விவசாயிகள் தடையை மீறி டெல்லி நோக்கி புறப்பட்ட போது சொந்த நாட்டு விவசாயிகள் மீதே கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். அந்த தடைகளையும் தாண்டிச் செல்லும் போது ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு அடிபட்டு தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயியும் போராட்டக்களத்திலேயே உயிர்நீத்தனர். இதற்கிடையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

rally in Delta district in support of Delhi struggle

அதன் பிறகும் விவசாயிகளை முன்னேற விடாமல் மத்திய அரசின் போலீசார் தடுத்து வருகின்றனர். விவசாயிகள் உயிர்ப்பலியானதால் தற்காலிகமாக முன்னேறிச் செல்வதை நிறுத்தி அதே இடத்தில் தங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிடாமல் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் அரணாக உள்ளது.

இந்திய விவசாயிகளுக்காக டெல்லி எல்லையில் போராடும் பஞ்சாப், அரியானா விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், விவசாய நாடு என்று வெளியில் சொன்னாலும் சொந்த நாட்டு விவசாயிகளையே சுட்டு விரட்டும் மத்திய அரசை கண்டித்தும் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கொண்டுள்ளது.

rally in Delta district in support of Delhi struggle

இந்த வகையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட எல்லை கிராமமான ஆவணம் கைகாட்டியில் டிராக்டர் பேரணியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் நள்ளிரவில் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்திற்கு வந்த டிராக்டர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். ஆனால் திட்டமிட்டபடியே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த டிராக்டர்களையும் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதே நேரத்தில் பாஜகவினரும் அதே பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.