Skip to main content

“மோடியின் உதட்டில் தமிழ், உள்ளத்தில் சமஸ்கிருதம்” - முத்தரசன் காட்டம்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

cpi mutharasan talk about pm modi

 

பிரதமரின் மோடியின் உதடு தமிழைப் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் உள்ளம் சமஸ்கிருதத்திற்கு தான் முக்கியத்துவம் தருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, “அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக, அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய அமைப்புகளை பா.ஜ.க. அரசு தங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது. தற்போது தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்சநீதிமன்றமே பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து விளக்கம் கேட்டுள்ளது. ஏற்கனவே எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டினோம். அது தற்போது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு தான் ஆட்சி செய்ய வேண்டும். ஆனால், மோடி அரசு அரசியலமைப்பை சிதைத்து ஆட்சி செய்கிறது.

 

இந்தி, சமஸ்கிருதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்நிலையில், காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் தொடக்க விழாவில் தமிழைக் குறித்து புகழ்ந்து பேசிய மோடி தமிழ் மொழிக்கு எதுவும் செய்யவில்லை. மோடி அரசு பொறுப்பேற்று ஒவ்வொரு ஆண்டும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழுக்கு மிக மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது.

 

மோடியின் உதடு தமிழைப் புகழ்ந்து பேசுகிறது. ஆனால், உள்ளம் சமஸ்கிருதத்திற்கு தான் முக்கியத்துவம் தருகிறது. மொழிகளை மட்டுமல்ல, அவர் மாநிலங்களையும் சமமாக நடத்தவில்லை. நடைமுறையில் அவர் குஜராத்துக்கு மட்டுமே பிரதமராக உள்ளார். மொழி விவகாரத்தில் இந்தி, சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக இருக்கிறார். 122 ஆண்டுகளில் பெய்யாத மழை மயிலாடுதுறை மாவட்டத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மோடி அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால், குஜராத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அங்கு சென்று மக்களுக்கு உதவுகிறார். மோடி தொடர்ந்து பொய்யை மட்டுமே பேசி வருகிறார். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் எனக் கூறினார். ஆனால், தற்போது 71 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். 2024 தேர்தலைக் கருத்தில் கொண்டு தான் அவ்வாறு செயல்படுகிறார்.

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல பிரச்சனைகள் உருவாகக் காரணமாகி வருகிறார். இந்தியா மதச்சார்பின்மை நாடு. ஆனால், ஆளுநர் இந்தியாவை இந்துக்களின் நாடு என்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதற்கு அவரை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். இந்து, சனாதனம் போன்றவற்றை பேசி வந்த அவர் தற்போது மார்க்ஸ் குறித்து பேசுகிறார். மார்க்ஸ் தத்துவத்தால் எந்த நாடும் சீரழியவில்லை. அந்தத் தத்துவத்தால் மாற்றங்கள் தான் நடந்துள்ளது. ஆனால், ஆளுநர் ரவி மார்க்ஸால் தான் நாடு சீரழிந்தது எனப் பேசத் தொடங்கியுள்ளார்.

 

மனுநீதியை உயர்த்திப் பிடிப்பது ஆர்.என்.ரவியின் கொள்கையாக இருக்கட்டும். அவர் ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் பரப்பட்டும். மனுதர்மம் குறித்து வெளிப்படையாகப் பேச மறுக்கிறார். தங்கள் கொள்கையைப் பகிரங்கமாக பேச முடியாமல் அதை மூடி மறைத்து அமைப்பை நடத்துவது ஆர்.எஸ்.எஸ்.தான். அந்த அமைப்பின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம். மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மின்சார வாரியம் கைவிட வேண்டும். கூடுதல் கால அவகாசம் கொடுக்க வேண்டும். மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

 

சட்டப் பேரவையில் நிறைவேற்றும் தீர்மானம் மக்கள் நலன் சார்ந்தது. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் ரத்து உட்பட சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களை கிடப்பில் வைத்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக விளக்கம் கேட்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. அதை அவர் உடனடியாக செய்யாமல் காலம் தாழ்த்தி செய்வது உள்நோக்கம் கொண்டது. மோடி ஆதரவோடு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் என்பதற்கான அடையாளம் இது. காவல்துறையால் தேடப்படுபவர்கள் அடைக்கலம் அடையும் இடமாக பா.ஜ.க. இருக்கிறது. அவர்களுக்கு பொறுப்புகளும் வழங்கப்படுகிறது. அந்தக் கட்சி வித்தியாசமான கட்சி.

 

அ.தி.மு.க.வையும் தி.மு.க.வையும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க.வின் செயல்பாடுகளுக்கு தேர்தலில் மக்கள் பதில் தந்து விட்டனர். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றி விட்டது. பலவற்றை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறார்கள். தற்போது வகுப்புவாதத்தை எதிர்ப்பதில் தி.மு.க. பலமாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.