Skip to main content

மோடி பிரதமரானால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும்...! எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

நரேந்திர மோடி பிரதமரானால்தான் இந்தியா பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும், நிலையான ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

The country  safe only if Modi is prime minister says edappadi palanisamy


சேலம் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் கே.ஆர்.எஸ்.சரவணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் சேலத்தில் புதன்கிழமை (மார்ச்  20, 2019) நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளரை அறிமுகப்படுத்திவிட்டு, பின்னர் அவர் பேசியது:

 
இந்தியாவில் பலமான, நிலையான ஆட்சி அமைய எந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு தெரியும். இந்தியா வல்லரசாக மாறி வரும் நிலையில், 130 கோடி மக்களின் பாதுகாப்பும் முக்கியம். நிலையான ஆட்சி, வலிமையான தலைவர் என எல்லா அம்சங்களும் பொருந்திய கட்சி பாஜக மட்டும்தான். அண்டை நாடுகளால் அச்சுறுத்தல் உள்ள நிலையில், பலமான தலைமை அமைய வேண்டும். நாட்டுக்கு உரிய பாதுகாப்பை பாஜவால்தான் தர முடியும். மோடி, பிரதமரானால்தான் நாடு பாதுகாப்பாக இருக்க முடியும். 


சென்னையில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தியை பிரதமர் என்று முன்மொழிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் மாற்றி மாற்றிப் பேசினார். மோடிதான் அடுத்த பிரதமர் என்று ஒருமித்த கருத்துடன் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன. யார் பிரதமர் என்றுகூட சொல்ல முடியாத நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி தலையில்லாத உடல் போல காட்சி அளிக்கிறது.
 

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே எண்ணம் கொண்ட ஆட்சி அமைந்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லும். அதிகாரத்தைக் கைப்பற்ற திமுக எதை வேண்டுமானாலும் செய்யும். 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக, எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக அரசு, 50 ஆண்டு காலமாக நிலவி வந்த காவிரி நதிநீர் பிரச்சனைக்கு உரிய தீர்வினை கண்டிருக்கிறது. அதிமுக கூட்டணி, வெற்றி பெற்றவுடன் காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தும். இதனால் கிடைக்கும் 200 டிஎம்சி தண்ணீர் மூலம் தமிழக விவசாயிகளுக்கு எல்லா காலங்களிலும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.

 
அதிமுக அரசு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளை தூர்வாரி உள்ளது. எல்லா வகையிலும் தமிழகம் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தேவையான நிதியைப்பெற ஒருமித்த கருத்துடன் அதிமுக தலைமையிலான கூட்டணி பாடுபடும். அதிமுக கூட்டணி வெற்றி பெற்றவுடன் சேலத்தில் ராணுவ தளவாட உதிரிபாக தொழிற்சாலை உருவாக்க பாடுபடுவோம். இதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 


சில சுயநலவாதிகள் அதிமுகவை உடைக்க, ஆட்சியைக் கவிழ்க்க செய்த சதியின் காரணமாக இடைத்தேர்தல் வந்துள்ளது. துரோகம் இழைத்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இக்கூட்டணி இமாலய வெற்றி பெறும். அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.


இக்கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதிமாறன் அவதூறு வழக்கு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 14 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

Dayanithimaran defamation case against Edappadi Palaniswami

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்தார். 

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.