Skip to main content

அமைச்சர்கள் முதல் அடிமட்ட அரசு ஊழியர்கள் வரை லஞ்சம்! வேல்முருகன் கண்டனம்!

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

 velmurugan

 

அமைச்சர்கள் முதல் அடிமட்ட அரசு ஊழியர்கள் வரை, அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனவே, ஊழலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை உடனடியாகப் பணி நீக்கம் செய்வதோடு, அவர்களின் சொத்துகளை முடக்கி, அவற்றை அரசுடைமையாக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் அமைச்சர்கள் முதல் அடிமட்ட அரசு ஊழியர்கள் வரை, அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சமீப காலங்களில் அரசு அலுவலகங்களிலும், அதிகாரிகளின் வீடுகளிலும் கணக்கு வழக்கின்றி பணம் விளையாடுகிறது. அப்படிப்பட்ட அதிகாரிகளில், சிலர் மட்டுமே அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் வெளிச்சத்துக்கு வருகின்றனர்.

 

குறிப்பாக, சென்னையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத 1.37 கோடி ரூபாய் பணம் மற்றும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், 7 கோடி ரூபாய் மதிப்புடைய 18 சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது அனைத்தும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்க தந்த லஞ்சப் பணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

இதே போன்று,  வேலூரில்  சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளராகப் பணியாற்றி வந்த பன்னீர்செல்வம் அலுவலகம் மற்றும் வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் மூன்றரை கோடி ரூபாய் ரொக்கம், கிலோ கணக்கில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள அசையாச் சொத்துகளுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

நாகையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளராகப் பணியாற்றிய தனராஜ் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், அவரது வீட்டிலிருந்து கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியுள்ளது. இந்தப் பரபரப்பு ஓய்வதற்குள் மாநிலம் முழுவதும் உள்ள போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடிகளில் நடந்த அதிரடி சோதனையில் பல லட்ச ரூபாய் லஞ்சப் பணம் சிக்கியுள்ளது.

 

சுற்றுச்சூழல் துறை மட்டுமின்றி, தமிழக அரசின் இன்னும் பல துறைகளில் லஞ்சம் புரையோடிக் காணப்படுகிறது. உதாரணமாக, தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் உள்ள 17 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.24 லட்சம் ரூபாய் மற்றும் நூற்றுக்கணக்கான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது வெட்கக் கேடானது.

 

இப்படி லஞ்சம் வாங்கும் துணிவு, அரசு ஊழியர்களுக்கு எப்படி வந்தது, அதன் பின்னணி என்ன என்பதை நாம் ஆராய்ந்தால், இன்று உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் வரை லஞ்சப் பணம் பாய்வதே முக்கியக் காரணம்.

 

cnc

 

எனவே, ஊழலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை உடனடியாகப் பணி நீக்கம் செய்வதோடு, அவர்களின் சொத்துகளை முடக்கி, அவற்றை அரசுடைமையாக்க வேண்டும். அரசு வேலை என்பது நாட்டு மக்களின் வாழ்வை உயர்த்துவதற்காக வழங்கப்பட்ட பணி. அதுவும் ஒருவகையில் பொதுச்சேவைதான் என்பதை அமைச்சர்களும், அரசு ஊழியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

 

அதுமட்டுமின்றி, லஞ்சம் கேட்பவரை அடையாளம் காட்டுவேன், லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று ஒவ்வொரு குடிமகனும் உறுதியேற்பது ஒன்றுதான் இதற்குத் தீர்வாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நடிகர் விஜய் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்' - சீண்டிய எல்.முருகன்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
MM

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்ஸாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

NN

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் அனைவரும் வாழ்ந்து வரும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)  2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நடிகர் விஜயின் அறிக்கை குறித்த கேள்விக்கு பாஜகவின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு எதுவும் இல்லை. இச்சட்டம் குறித்து நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'15 மணி நேரத்தில்...'- திணறிய த.வெ.க ஐடி விங் 

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
NN

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்து 2026 ஆம் ஆண்டுதான் நமது இலக்கு என்று தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய அணியை தொடங்கியும் நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார் விஜய். முதல் உறுப்பினராக விஜய் இணைந்தார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை ஃபாலோ பண்ணி, வரப் போகிற சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்க ஏற்கனவே வெளியிட்ட எங்க கட்சியின் உறுதி மொழியை படிங்க. அது எல்லாருக்கும் பிடித்திருந்தால் விருப்பப்பட்டால் இணைஞ்சிடுங்க” என்றார்.

கட்சியில் இணைவதற்கான உறுதிமொழி வெளியிடப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்ட 15 மணிநேரத்தில் 20 லட்சம் பேர் தவெகவில் இணைத்துள்ளதாக கட்சி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் இணைய முற்பட்டதால் அதற்கான குறுஞ்செய்தி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சர்வர் முடங்கியதை எங்களால் முடிந்த அளவுக்கு சரிபார்த்துவிட்டோம் என தவெகவின் ஐடி பிரிவு தெரிவித்துள்ளது. அதிகபட்சம் முதல் நாளில்  5 லட்சம் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் 15 மணிநேரத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறும் நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுல்லாது பல மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் குவிந்து வருவதாகவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.