Skip to main content

கரோனாவிலிருந்து பாதுகாக்க மூன்றெழுத்து தடுப்பு மந்திரம்! - அமைச்சர் வேலுமணி யோசனை!

Published on 10/11/2020 | Edited on 10/11/2020

 

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கவும் அதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக உள்ளாட்சித் துறை. 
                     
மக்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையிலும், கரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. 
                       

இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி, பொது இடங்களில் மக்கள் கூடும்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். 
                        

இதுதொடர்பாக, தமது சமூக வலைதளப்பக்கங்களில் 'மூன்றெழுத்து மந்திரம்' என கரோனாவிலிருந்து பாதுக்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை மந்திரத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி பரப்புரை மேற்கொண்டுள்ளார். அந்த மூன்றெழுத்து மந்திரமாக 'அறம்', 'கைகள்', 'தனிமை', 'தூரம்', 'காலம்', 'தூய்மை', 'செயல்' என மூன்றெழுத்து மூலம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை, எளிய முறையில் விளக்கி மக்களிடையே பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் வேலுமணி! 
                     

'அறம்' பற்றி அவர் குறிப்பிடுகையில், நமக்கு நோய்த் தொற்று வராமல் இருக்க விழைவது மட்டுமின்றி, நம்மைச் சுற்றி இருப்போரும் நலமாக வாழ, முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிறரின் நலனிலும் அக்கறை காட்டுவதே சிறந்த அறமாகும்.
                         

'கைகள்' பற்றி குறிப்பிடுகையில், கைகளை அடிக்கடி கழுவுதல், சுகாதாரமாக வைத்துக் கொள்ளுதல், கை குலுக்குவதை தவிர்த்தல், இவையாவும் நம்மைத் தொற்றிலிருந்து காத்து, நமக்கு கை கொடுக்கும் நல்ல பழக்கங்களாகும் என்றும் 'தனிமை' பற்றி விளக்கும்போது, முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒருவேளை தொற்று ஏற்பட்டால், மருத்துவருடன் கலந்தாலோசித்து முறையாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், இந்த நோய்த்தொற்றை பெருமளவு நம்மால் பரவாமல் தடுக்க முடியும் என விளக்குகிறார். 
                   

cnc

 

இதனையடுத்து, 'தூரம்' பற்றி அவர் பேசும் போது, அவசியமாக வெளியே செல்லும்போது மட்டும் வெளியே செல்வது, அப்போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது நமக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தொற்று பரவாமல் இருக்க பெரிதும் உதவி செய்யும் எனத் தெரிவிக்கிறார். 
                      

'காலம்' பற்றி தெரிவிக்கையில், அடிக்கடி கைகளை கழுவுவது, வெளியிலிருந்து வந்தவுடன் நீராவி பிடிப்பது முகக் கவசத்தை சுத்தம் செய்வது உடைகளை மாற்றுவது போன்ற சுகாதாரமான பழக்கங்களை நேரம் கடத்தாமல், உடனுக்குடனே செய்ய வேண்டும். ஆக, இந்த மூன்று எழுத்து மந்திரங்களான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே நம்மை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று சுட்டிக்காட்டி பரப்புரை செய்து வருகிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.