Skip to main content

ஜார்க்கண்ட்டில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்... தமிழகத்திலும் கடும் நடவடிக்கை தேவை... ராமதாஸ் வலியுறுத்தல்!

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

ramadoss

 

கரோனாவுக்கு எதிரான போரை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,472 என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சென்னையிலும் புதிய கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 17 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக 1,300 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது. கரோனா ஒழிப்பில், தமிழகம் முழுவதும் தீவிரம் காட்டப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

 

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 7-ஆம் தேதி தான் முதல் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.  அதன்பின் இரு மாதங்கள் கழித்து மே 7ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் ஒட்டுமொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 5,409 என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், இரு மாதங்களில் ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கையை விட ஆயிரத்திற்கும் அதிகமாக தொற்றுகள் நேற்று ஒரே நாளில் ஏற்பட்டுள்ளன. நோய்த் தொற்றுகள் எந்த அளவுக்கு அதிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது பற்றி கவலைப்படத் தேவையில்லை; அது நோய் பாதித்தவர்களைக் கண்டுபிடித்து, சிகிச்சையளித்து அதன் மூலம் நோய்ப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஓர் அங்கம்தான் என்று உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவும் கூறுகின்றன. அதனால், இதை நினைத்துக் கவலைப்படத் தேவையில்லை.

 

அதேபோல், தமிழகம் முழுவதும் நோய்த் தாக்க விகிதமும் கட்டுக்குள் தான் உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 62,112 ஆகும். இதில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,472 ஆகும். இதனடிப்படையில் நோய்த் தாக்க விகிதம் 9.59 விழுக்காடு என்ற அளவில் பத்துக்கும் குறைவாகவே இருப்பதால் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. இந்தப் புள்ளி விவரங்கள் மனநிறைவு அளித்தாலும் கூட, நாம் நினைத்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்.

 

கரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக மக்களாகிய நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தால், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் இந்நேரம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு  இருக்கும். அந்தச் சாதனை நிகழ்த்தப்படாததற்கான காரணம் பொதுமக்களாகிய நமது ஒத்துழைப்பின்மை தான். இந்த உண்மை கசப்பாக இருந்தாலும் அதை நாம் அனைவரும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

 

தமிழ்நாட்டில் ஜூன் 1-ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,161 மட்டும் தான். அவர்களில் 967 பேர் சென்னையையும், 90 பேர் புறநகர் மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள். மற்ற மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 மட்டும் தான். 16 மாவட்டங்களில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று ஏற்படவில்லை. மேலும் 16 மாவட்டங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் தான் இருந்தது. கரோனாவைக் கட்டுப்படுத்த சென்னையில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்றைய நாளில் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 2,015 பேரில் 474 பேர் மட்டும் தான் சென்னை, புறநகர் தவிர்த்த மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால், நேற்றைக்கு இந்த எண்ணிக்கை 4,015 ஆக உயர்ந்திருக்கிறது.

 

இதற்கான காரணங்களில் முக்கியமானது சென்னையிலிருந்து குறுக்கு வழிகளில் சொந்த ஊர்களுக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கானோர் கரோனா ஆய்வு செய்து கொள்ளவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் தவறிவிட்டது தான். சென்னையைப் போலவே பெங்களூரிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களும் கரோனாவைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த சில ஊர்களில் வெளியூரில் இருந்து எவரேனும் வந்தால், அவர்கள் குறித்த விவரங்களை அந்த ஊர் மக்கள் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கின்றனர். அந்தப் பகுதிகளில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறிய பகுதிகளில் தான் கொத்துக்கொத்தாக கரோனா தொற்றுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 

http://onelink.to/nknapp

 

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மொத்தம் 113 கரோனா ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சளி மாதிரி எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் சளி மாதிரி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கரோனா ஆய்வு செய்து கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் ஆய்வு செய்து கொள்ளாத பலர், கரோனாவை பரப்பி சமுதாயத்திற்கு பெரும் கேடு இழைக்கின்றனர்.

 

தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது; கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்; கைகளைச் சோப்புப் போட்டு கழுவ வேண்டும்; சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, தமிழக அரசு ஆகியவை ஆலோசனைகளை வழங்கியும் சென்னை போன்ற நகரங்களில் பெரும்பான்மையினர் அதைக் கடைப்பிடிப்பதில்லை. தமிழக அரசு கரோனா தடுப்புக்காக அதனால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. ஒரு கை தட்டினால் ஓசை வராது; இரு கைகளையும் தட்டினால் தான் ஓசை எழும் என்பதை மக்கள் உணர வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதன்மூலம் கரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் பணிகளுக்குத் துணை நிற்க வேண்டும். தமிழக அரசும் பாதுகாப்பு விதிகளை மக்கள் முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய, ஜார்க்கண்ட் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதைப் போன்று, தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.