Skip to main content

மும்பை, டெல்லிக்கு அடுத்தபடியாகச் சென்னையில்தான் கடுமையான கரோனா பாதிப்பு: கட்டுப்படுத்தத் தவறியது ஏன்? -டாக்டர் ராமதாஸ் கேள்வி 

Published on 18/05/2020 | Edited on 18/05/2020



 

ramadoss pmk



கரோனாவைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் நம்பிக்கை வார்த்தைகள் மட்டுமே பயனளித்து விடாது. கரோனாவால் மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாகச் சென்னை தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கட்டுப்படுத்தத் தவறியது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் புதிய கரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த நிலையில், நேற்று கணிசமாக அதிகரித்து 482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சென்னையில் ஒரே நாளில் பதிவான நான்காவது அதிகபட்ச அளவு ஆகும். கரோனா பரவல் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் ஒரு கட்டத்தில் வெகு சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அன்றைய நாளில் மொத்தம் 1,937 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 1,101 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். அப்போது குணமடைந்தோர் விகிதம் இந்தியாவிலேயே, கேரளத்துக்கு அடுத்தபடியாக, 56.84% என்ற இரண்டாவது அதிகபட்ச அளவாக இருந்தது. அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை  வேகமாக அதிகரித்து, இந்தியாவில் கரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்குத் தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது. தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 38% என்ற அளவுக்குச் சரிந்திருக்கிறது. இது தேசிய சராசரியை விட சற்று குறைவு ஆகும்.
 

தமிழகத்தில் கரோனா தொற்று உச்சத்தை அடைந்ததற்குச் சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து  பரவிய நோய்த் தொற்று தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், கோயம்பேடு சந்தையால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கரோனா பரவல் வேகமாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், சென்னையில் மட்டும் நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்படாதது ஏன்? என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. சென்னையில் நோய்த்தடுப்பு பணிகள் திறம்பட மேற்கொள்ளப் படவில்லையோ? என்ற ஐயத்தை தான் இது ஏற்படுத்துகிறது. அவ்வாறு நம்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
 

கோயம்பேடு சந்தையிலிருந்து ஏப்ரல் மாத இறுதியில் தான் அதிக எண்ணிக்கையில் தொற்றுகள் பரவத் தொடங்கின. உடனடியாக நோய்த்தொற்றுகளைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டதுடன், மே 1 ஆம் தேதியே சென்னை மாநகராட்சிக்கான கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ஜே.இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். கோயம்பேடு சந்தையும் மே 4-ஆம் தேதியுடன் மூடப்பட்டு விட்டது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்கப்பட்டதாக வைத்துக் கொண்டால், அடுத்த 14 நாட்களில், அதாவது மே 13-ஆம் தேதிக்குள் சென்னையில் கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நோய்ப்பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
 

சென்னையில் கடந்த மே 1 ஆம் தேதி கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,082 மட்டும் தான். அது தற்போது 6,750 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது 17 நாட்களில் 5,668 பேருக்கு புதியத் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. சோதனைகள் அதிகரிக்கப்படுவது தான் நோய்ப்பரவல் அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்படுவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அது ஓரளவுக்கு உண்மை தான் என்றாலும் கூட, 14 நாட்களுக்குப் பிறகும் கூட தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குக் காரணம் அதிக சோதனைகள் அல்ல.... நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் நிர்வாகம் கோட்டை விட்டு விட்டது தான். இப்புகாரை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்களைப் பட்டியலிட முடியும்.
 


கோயம்பேடு சந்தை மூலம் நோய்த்தொற்று பரவத் தொடங்குவதற்கு முன் கோடம்பாக்கம் மண்டலத்தில் இரட்டை இலக்கத்திலும், வளசரவாக்கம் மண்டலத்தில் ஒற்றை இலக்கத்திலும் தான் நோய்த்தொற்றுகள்  இருந்தன. இராயபுரம், திருவிக நகர், தண்டையார் பேட்டை ஆகிய மண்டலங்கள் தான் முன்னணியில்  இருந்தன. ஆனால், கோயம்பேடு நோய்ய்ப்பரவல் தொடங்கிய சில நாட்களில், சந்தையை ஒட்டியுள்ள  பகுதிகளில் நோய்ப்பரவல் வேகமாக அதிகரித்து, கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தைப் பிடித்தது.  
 

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமாகவும், வளசரவாக்கம் மண்டலத்தில் 500க்கும் அதிகமாகவும் உயர்ந்தது. அந்த மண்டலங்களில் இப்போது நோய்ப்பரவல் கட்டுக்குள் வந்து விட்டது. அதன்படி கோயம்பேடு மூலமான தொற்று கட்டுக்குள் வந்து விட்டது என்று வைத்துக் கொண்டாலும் இராயபுரம் மண்டலம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நோய்ப்பரவல் மீண்டும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நோய்ப்பரவலில் இராயபுரம் மண்டலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னையில் நோய்ப்பரவல் நடவடிக்கைகளில் பெரும் ஓட்டை விழுந்துள்ளது; அதுதான் நோய்ப்பரவல் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்ற உண்மையை எவரும் மறுக்க முடியாது.
 

சென்னை மாநகராட்சிக்கான நோய்த்தடுப்பு சிறப்பு அதிகாரியாக இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட போது, கரோனா விரைவில் கட்டுக்குள் வரும் என்று நம்பினேன்; அதை வெளிப்படுத்தவும் செய்தேன். ஆனால், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள், பிற அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் சிறப்பு அதிகாரி, மாநகராட்சி ஆணையர், மண்டல பொறுப்பு அதிகாரிகள் என ஏராளமான மூத்த இ.ஆ.ப. அதிகாரிகள் இருந்தும் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த முடியாதது பொதுமக்கள் மத்தியில் இதுவரை நிலவி வந்த நம்பிக்கையைக் குலைத்துள்ளது.
 

சென்னையில் கடந்த 10-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பொறுப்பு அதிகாரி இராதாகிருஷ்ணன், அடுத்த 5 நாட்களில், அதாவது 15-ஆம் தேதிக்குள் நோய்ப்பரவல் குறையத் தொடங்கும் என்று கூறினார். மே 13-ஆம் தேதி தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கரோனா சோதனை செய்து முடிக்கப்பட்டுவிட்டதாகவும், அவர்களில் 2,600 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார். ஆனால், அதன்பிறகும் நோய்ப்பரவல் கட்டுக்குள் வரவில்லை என்றால் நோய்த்தடுப்பு அணுகுமுறையில் என்ன தவறு? எந்த இடத்தில் தவறு நடந்தது? கோயம்பேடு நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டால், இப்போது வேறு எந்த ஆதாரத்திலிருந்து நோய்ப் பரவுகிறது என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து சரி செய்ய  வேண்டும்.
 

சென்னையில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசின் சார்பில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகரும், இ.ஆ.ப அதிகாரியுமான திருப்புகழ் தலைமையிலான உயர்நிலைக்குழு சென்னைக்கு வந்து 5 நாட்கள் தங்கியிருந்து கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தி அறிவுரைகளை வழங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஒவ்வொரு நாளும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து காலையில் தலைமைச் செயலகத்திலும், மாலையில் அவரது இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்திலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். கரோனா வைரஸ் நோய்த் தடுப்பில் முதலமைச்சர் பழனிச்சாமி காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. ஆனால், களத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் கவலையளிக்கிறது.
 

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளைக் கொண்டிருந்தாலும் சென்னை மாவட்டத்தில் உள்ள 107 வார்டுகளில் மட்டும் தான் நோய்ப்பரவல் மிகவும் அதிகமாக உள்ளது. புறநகர் பகுதிகளில் அதிக பாதிப்பு இல்லை. இத்தகைய சூழலில் கூடுதல் அதிகாரிகளை நியமித்து, மண்டல அளவில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக வார்டு அளவில் கவனம் செலுத்துவது பயனளிக்கக் கூடும். இதுபோன்ற அணுகுமுறைகளைப் பயன்படுத்தி கரோனாவைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

http://onelink.to/nknapp

 

கரோனாவைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் நம்பிக்கை வார்த்தைகள் மட்டுமே பயனளித்து விடாது. கரோனாவால் மும்பை, தில்லி ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாகச் சென்னை தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையான  6,750 என்பது, இந்தியாவில் மொத்தமுள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அளவை விட அதிகமாகும். இதனால் மக்களிடம் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் நம்பிக்கை வார்த்தைகளை மட்டும் பேசிக்கொண்டிருப்பது நம்பிக்கையைத் தராது; மாறாகச் சலிப்பை மட்டுமே ஏற்படுத்தும். எனவே, இனியும் கரோனா தடுப்புப் பணிகளை வார்த்தைகளில் காட்டாமல் செயலில் காட்ட வேண்டும். சென்னையில் வெகு விரைவில் கரோனா பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி மக்களிடம் நிலவும் அச்சத்தை மன நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்ற  வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.