Skip to main content

கரோனாவை அதிகரிக்க துணை போகும் ஆத்மநிர்பார் அபியான்! அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தும் பூவுலகின் நண்பர்கள்! 

Published on 17/05/2020 | Edited on 18/05/2020

 

Poovulagin Nanbargal


இந்தியாவின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதை பிரதமர் மோடி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தினமும் குறிப்பிட்ட துறைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
 

 
"நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளன. கரோனாவினால் ஏற்பட்டுள்ள முடக்கத்தைச் சரிசெய்வதற்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் புறந்தள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய - மாநில அரசுகள் மேற்கொள்ளும் என்கிற சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர்களின் அச்சத்தையும் கவலையையும் நிதியமைச்சரின் அறிவிப்புகள் உண்மையாக்கியிருக்கின்றன "  என்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. 
 

இது குறித்து நம்மிடம் பேசிய அந்த அமைப்பின் செயற்பாட்டாளர் சுந்தரராஜன், "விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றும் (zoonotic diseases) கரோனா போன்ற கொள்ளை நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணியாக இருப்பது வனவிலங்குகளின் வாழ்விட அழிப்பு (habitat loss) என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த மாதம் scientific american ஆய்விதழில் வெளிவந்துள்ள முக்கியமான ஆய்வறிக்கை, காடழிப்பை நிறுத்துவதன் மூலம் கொள்ளை நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டுகிறது. 
 

மேலும், உலகம் முழுவதும் இப்போது நடைபெறுவதை விட 10% கூடுதலாகக் காடுகள் அழிக்கப்பட்டால் 77 லட்சம் பேருக்கு கூடுதலாக மலேரியா நோய் வர வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வறிக்கை சொல்கிறது.
 
மனிதர்கள் காடுகளை ஆக்கிரமிப்பது அதிகரிக்க வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு அதிகரிக்கிறது அதனால் zoonotic spillover நடைபெற்று நோய்த் தொற்றும் அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறார் நோய்ப் பரவுதலியல் நிபுணரும் (epidemiologist), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் "one health institute"ஐ சேர்ந்த பிரணவ் பண்டித். மேலும், இதைப்போன்ற கொள்ள நோய்கள் பரவுவதற்கு முக்கியக் காரணங்களாகக் காடழிப்பு, நகரமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவைதான் என்கிறார். 
 

கடந்த ஐந்தாண்டுகளில் பரவிய எபோலா, ஜிகா இப்போது saars Cov 2 என அனைத்து தொற்றுகளும் சூழல் சீர்கேடால் நடைபெற்றவைதான் என்கிறார் பிரணவ்.
 
மேலும், 2015 ஆம் ஆண்டு unfccக்கு இந்தியா கொடுத்துள்ள உறுதிமொழி, இந்தியா வெளியேற்றும் சுமார் 300 கோடி டன் (3 பில்லியன் டன்) கார்பனை உள்வாங்கிக் கொள்வதற்காக இப்போது இருப்பதை விட இன்னும் மிக அதிகமாக காடுகளின் பரப்பளவை அதிகரிக்கும் என்றுதான்.
 


மேற்சொன்ன பின்னணயில்தான் நிதி அமைச்சரின் நேற்றைய அறிவிப்பை நாம் பார்க்கவேண்டும். பிரான்ஸ், ஜெர்மனி உள்ளீட்ட பல்வேறு நாடுகள் அனல் மற்றும் அணு மின் உற்பத்தியைக் கைவிட முடிவுசெய்து அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.  
 

ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலக்கரி சுரங்கங்களை மூடுவதற்கு பதிலாக மேலும் 50 புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான அனுமதி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
  
நிலக்கரி மற்றும் கனிம சுரங்கங்களில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும் என்றும் அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு பாக்சைட் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக கூட்டு ஏலம் விடப்படும் என்ற அறிவிப்பும் காடுகளை அழிப்பதற்கு வழிவகை செய்யும். மத்திய இந்தியாவில் வனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில்தான் இந்த கனிமங்களும், நிலக்கரி படிமமும் கொட்டிக்கிடக்கிறது. மொத்தமாக 550 சுரங்கங்கள் அமைக்கவும் அதற்கான கட்டுமானங்களை உருவாக்கவும் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் தேவைப்படும், அவை அனைத்தும் வனங்களை அழித்துதான் உருவாக்கப்படும். இத்தனை லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் காடுகள் அழிக்கப்பட்டால் வனவிலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளது. மேலும் கனிமச் சுரங்கங்களின் குத்தகையைப் பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதியளித்துள்ளதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.              
 
அடிப்படை கட்டமைப்புகளான மின் உற்பத்தியைத் தனியாருக்குத் தாரைவார்த்துக்கொடுத்தது மாநில மின்வாரியங்களை எப்படிக் கடனாளியாக மாற்றியுள்ளன என்பது உறுதிப்பட்டிருக்கும் நேரத்தில் மின் பகிர்மானத்தையும் தனியாருக்குக் கொடுப்பது மக்களுக்கு விரோதமான செயல். கொள்ளைநோய் காலகட்டத்தில் அரசு துறைகளின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தாலே போதும் - பொதுத்துறை கட்டமைப்புகளின் தேவையைப் புரிந்து கொள்ள முடியும்.

இதெல்லாம் தாண்டி நிலக்கரி படிம மீத்தேன் எடுப்பதற்கான அனுமதி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருப்பதுதான் அதிர்ச்சியின் உச்சம். நிலக்கரி படிம மீத்தேன் எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் "நீரியல் விரிசல்" (hydraulic fracturing) சூழலையும், நிலம் மற்றும் நீர் வளத்தையும் முழுவதும் பாழ்படுத்திவிடும் என்றும், உந்தப்பட்ட நிலநடுக்கங்கள் (Induced earth quakes) வருவதற்கு காரணியாக இருப்பதாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட்டன.

அணுசக்தி துறையில் தனியார் முதலீட்டை அனுமதிப்பது என்று அமைச்சர் அறிவித்திருப்பது எதைப் பற்றியும் கிஞ்சித்தும் அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்குத் தேவைப்படும் ஐசோடோப்புகளை உற்பத்தி செய்ய இந்தியாவில் போதுமான அளவு உலைகள் செயல்படுகின்றன, அப்படி இருந்தும் அணு சக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது அணு மின் திட்டங்களை துவக்கத்தான் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.

இந்த நேரத்தில் சூழலைக் காக்கவும், காடுகளைக் காக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் "ராணுவ தளவாட உற்பத்தி", விண்வெளி போன்ற துறைகளில் தனியாரை அனுமதிப்பது கரோனா போன்ற தொற்றுகளைக் கையாள எப்படி உதவும்?
 

http://onelink.to/nknapp


பிரதமரின் "ஆத்மநிர்பார் அபியான்" அறிவிப்பு கரோனாவை கையாள என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இத்தகைய செயல்பாடுகள் கரோனா போன்ற தொற்றுநோய்கள் அதிகரிக்கவே வழிவகை செய்யும்.

உலகெங்கும் மக்கள் கொத்துக் கொத்தாக கரொனாவுக்கு மடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து நின்று கொண்டிருக்கிறார்கள். 
 

தேசப்பிரிவினையை விட பெரிய புலம் பெயர்வு நம் கண் முன்னால் நிகழ்ந்து கொன்ண்டிருக்கிறது. சொகுசு வீடுகளில் வாழ முடியாத இந்தியா வீதிக்கு வந்து நிற்கிறது. இந்தத் தருணத்தில்தான் இப்படிப்பட்ட அச்சமூட்டும் அவநம்பிக்கையூட்டும் திட்டங்களை அறிவிக்கிறார் நிதியமைச்சர்.
 
நிதி அமைச்சர் அறிவித்துள்ள மேற்சொன்ன திட்டங்களைக் கைவிடவேண்டும் என்றும், இது குறித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள், விவசாய சங்கங்கள், வணிக அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டுமென்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோருகிறது. வனத்தைக் காப்பது நம் வாழ்வை, வாழ்வாதாரத்தை, எதிர்காலத்தைக் காப்பதற்குச் சமம்" என விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார் சுந்தரராஜன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டம்” - வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் விளக்கம்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

Advocate Vetriselvan  Interview

 

மத்திய அரசின் வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தம் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் விவரிக்கிறார்

 

வனப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருகிறது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் அனுமதியோடுதான் காடுகளில் எந்தத் திட்டத்தையும் கொண்டுவர முடியும் என்பதுதான் வனப் பாதுகாப்பு சட்டம். தனியார் நிலங்களிலும் காடுகளைப் பாதுகாப்பது எப்படி என்கிற அடிப்படையில்தான் இந்த சட்டத்திருத்தத்தை இவர்கள் கொண்டுவருகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த சட்டம் அது குறித்துப் பேசவில்லை. பழங்குடியினருக்குக் காடுகளின் மீது இருக்கும் உரிமையை இந்த சட்டம் பறிக்கிறது. 

 

முன்பு இருந்த சட்டத்தின்படி காடுகளில் என்ன திட்டம் கொண்டுவருவதாக இருந்தாலும் அங்கு வாழும் மக்களிடமும் அனுமதி பெற வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் சில திட்டங்களுக்கு அவர்களின் அனுமதி தேவையில்லை என்று கொண்டுவருகிறார்கள். காடுகளில் யாருடைய அனுமதியும் இல்லாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் இதன் சாராம்சம். வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் எல்லையில் இருக்கும் மாநிலங்கள். அங்கு மக்களைக் கேட்காமல் திட்டங்களை இவர்கள் உருவாக்கும் சூழ்நிலை இதன்மூலம் ஏற்படும்.

 

இந்த சட்டத்திருத்தம் நேரடியாகப் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும். இந்த திருத்தம் கொண்டுவருவதற்கான சரியான பாராளுமன்ற நடைமுறையையும் இவர்கள் பின்பற்றவில்லை. இந்தியாவில் இருக்கும் கனிம வளங்களை எடுப்பதற்காக பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. காடுகளை அழித்து கனிமங்களை எடுப்பதற்கான சட்டம்தான் இப்போது இவர்கள் கொண்டுவந்துள்ள சட்டம். காடுகளில் இருக்கும் கனிம வளங்களைத் தனியாரிடம் கொடுப்பதுதான் இவர்களுடைய திட்டம். 

 

இந்திரா காந்தி காலத்தில்தான் வனப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. காடுகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் இது. இந்த சட்டம் வந்த பிறகுதான் காடுகள் அழிப்பு என்பது இந்தியாவில் பெருமளவு குறைந்தது. குறைந்தபட்ச அனுமதி பெற்றுத்தான் காடுகளில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அங்கிருக்கும் பிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேச வேண்டும், ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் அந்த சட்டம் இருந்தது. இது எதுவுமே தேவையில்லை என இந்த சட்டத்தை இவர்கள் மாற்றியமைப்பது வருத்தமாக உள்ளது. இது ஒரு ஆபத்தான போக்கு.

 


 

Next Story

''வேதாந்தா நிறுவனதிற்கு அனுமதி அளிக்ககூடாது''-பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தல்!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

 '' Vedanta should not be allowed ''

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

 

இந்தியாவில் கச்சா எண்ணெய் தொழிலில் முன்னணியில் உள்ள 'கெய்ர்ன் ஆயில்' என்ற வேதாந்தா குழுமத்தின் அங்கமாக இருக்கக்கூடிய நிறுவனம் தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம், புதுச்சேரியில் காரைக்கால் ஒட்டிய கடலோர பகுதிகளில் எண்ணெய், எரிவாயு திட்டங்களுக்கு அனுமதிகேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம் கடலோர பகுதிகளில் 102 எண்ணெய் கிணறுகளையும், புதுச்சேரியில் காரைக்காலை ஒட்டிய  கடலோர பகுதிகளில் 137 கிணறுகளையும் உருவாக்கி ஆய்வுசெய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் கடலோர பகுதிகளில் எண்ணெய், எரிவாயு திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதையும் வேதாந்தா குழுமத்தின் கெய்ர்ன் ஆயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் எண்ணெய்,எ ரிவாயு கிணறுகள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.  இதற்கு அனுமதி அளித்தால் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும். கடல் வளம், மீன் வளம் பாதிக்கப்படும் என்று கோரிக்கை கடிதம் மூலம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.