Skip to main content

அப்போதே எச்சரித்திருந்தேன்... கரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்தக் கூடாது... அன்புமணி

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

corona virus


மருத்துவமனைகளில் போதிய இடவசதிகள் இல்லை, மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் போதிய அளவுக்கு இல்லை என்ற காரணத்தைக் காட்டி கரோனா தொற்று உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருங்கள் என்று அனுப்பப்படுவதாகவும், சில மாவட்டங்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்களை பெயரளவுக்குப் பார்த்துவிட்டு வீட்டிலேயே தனி அறையில் இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள், சிறிய வீட்டில் இருப்பவர்கள் எப்படித் தனி அறையில் இருக்க முடியும்? கழிவறை ஒன்று மட்டுமே உள்ள வீடுகளில் எப்படி அவர்களால் தனியாக இருக்க முடியும்? அப்படி இருந்தால் மற்றவர்களுக்கும் தொற்று பரவாதா? கரோனா வராமல் முன்னெச்சரிக்கை வேண்டுமானால் மேற்படி நீங்கள் சொன்னடி இருக்கலாம், கரோனா தொற்று வந்தவர்களை மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும், வசதி வாய்ப்புகள் குறைந்தவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் வேலைவாய்ப்பு வருமானம் இல்லாத இந்த நேரத்தில் மருத்துவமனையிலேயே இருந்தால்தான் மூன்று வேளையும் சத்தான உணவுகளைச் சாப்பிட முடியும், எனவே கரோனா தொற்று வந்தவர்களை மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 


இந்த நிலையில் கரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்தக் கூடாது, விரிவான சிகிச்சையளிக்க ஏற்பாடுகளைச் செய்ய வேணடும் என பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடின்றி அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் தங்கி மருத்துவம் பெற வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்றும்,  வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அனுப்பி வைக்கப்படுவதாகவும் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் மூலம் மேலும் பலருக்கு கரோனா வைரஸ் நோய்ப் பரவுவதற்கு மட்டுமே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி மொத்தம் 6,009 பேர் மட்டுமே கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட  நாளில் இருந்து இரு மாதங்களில் 6,009 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில், அதாவது மே 8-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரையிலான காலத்தில் தமிழகத்தில் 25,658 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் இதே காலத்தில் 19,106 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. நேற்றுடன் முடிவடைந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை 4.20 மடங்கு அதிகரித்துள்ளது. இது மிகவும் அதிகம் ஆகும்.

தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் 3.21 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் கரோனா அதிகரிப்பு விகிதம் 6.27 மடங்காக உள்ளது. முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இதை நாம் தவிர்த்திருக்க முடியும். அதைச் செய்யத் தவறியதால் சென்னையில் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் அளவுக்கு கரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. இது ஒருபுறம் கவலையளிக்கும் நிலையில், மற்றொருபுறம் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சையளிப்பதில் கையாளப்படும் அணுகுமுறை கரோனா நோய்ப்பரவலை அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
 


சென்னையில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளிலும், கரோனா கவனிப்பு மையங்களிலும் உள்ள படுக்கைகள் முழுமையாக நிறைந்து விட்டதாகக் கூறப்படும் நிலையில், புதிதாக பாதிக்கப்படுவோரில் பெரும்பான்மையினருக்கு மருத்துவமனைகளில் பெயரளவுக்கு மருத்துவ ஆய்வுகள் செய்யப்பட்டு, சில மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கூறி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்படுபவர்களில் பெரும்பான்மையினரின் வீடுகளில் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைப்பதற்கான வசதிகள் இல்லை. அவர்கள் வீடுகளில் ஒரே கழிப்பறையைப் பயன்படுத்துதல், கழிப்பறை இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றால் கரோனா வேகமாகப் பரவுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு இது தான் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவ்வாறு இருப்பவர்களால் நோய் பரவாது என்று கூறமுடியாது. கரோனா நோயைக் குணப்படுத்துவதற்கு வேண்டுமானால் சாதாரண மருந்துகளும், மருத்துவ ஆலோசனைகளும் போதுமானவையாக இருக்கலாம். ஆனால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கண்காணிப்புடன் கூடிய தனிமைப்படுத்துதல் கட்டாயமாகும். கரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அனுப்பி வைப்பதைக் கைவிட்டு, அவர்களை மருத்துவமனைகள் அல்லது கரோனா கவனிப்பு மையங்களில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வரை, சென்னையில் என்ன தான் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நோய்த் தொற்றுகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது.
 

anbumani ramadoss


தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் இத்தகைய நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான் ‘‘மின்னல் வேகத்தில் கரோனா: சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க வேண்டும்!’’ என்ற தலைப்பில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவலைத் தடுக்கும் வகையில் கரோனா நோயாளிகளுக்குத் தனி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சென்னையில் கரோனா சிகிச்சைக்கான வசதிகளுடன் தனி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.  அதேபோல், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கரோனா சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தேன். இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நாளில் தமிழகத்தில் வெறும் 12 பேர் தான் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று மதிப்பிட முடிந்ததால் தான் அப்போதே எச்சரித்திருந்தேன். மார்ச் 19, ஏப்ரல் 25 ஆகிய தேதிகளில் வெளியிட்ட அறிக்கைகளிலும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியிருந்தேன். அவற்றுக்கு செயல்வடிவம் தரப்பட்டிருந்தால் சென்னை மாநகரத்தில் இப்படி ஒரு மோசமான நிலைமை ஏற்பட்டிருந்திருக்காது.
 

http://onelink.to/nknapp


சீனாவில் கரோனா பாதிப்பு  ஏற்பட்டவுடன் உடனடியாக பல சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி ஹோட்டல்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு, கவனிப்பு மையங்களாக மாற்றப்பட்டன. அதனால் தான் அங்கு மிகவும் எளிதாக கரோனாவைக் கட்டுப்படுத்த முடிந்தது. சென்னையில் ஒரு சில கல்லூரிகளும், அரங்கங்களும் கவனிப்பு மையங்களாக மாற்றப்பட்டாலும் கூட அது போதுமானதாக இல்லை. சென்னையில் கல்லூரிகள், கல்லூரி விடுதிகள், திருமண அரங்கங்கள், கூட்ட அரங்குகள், உள்விளையாட்டு அரங்குகள் ஆகியவை ஏராளமாக உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு போதிய வசதிகளுடன் கூடிய கரோனா கவனிப்பு மையங்களாக மாற்ற வேண்டும்; போதிய அளவில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்புவதைக் கைவிட்டு, பாதிக்கப்பட்ட அனைவரையும் மருத்துவமனைகள்/ கரோனா கவனிப்பு மையங்களில் சேர்க்க வேண்டும்.

அவ்வாறு உருவாக்கப்படும் கவனிப்பு மையங்களில் தரமான மருத்துவத்துடன், 3 வேளையும் சத்தான உணவுகளும், புரதத் துணைப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும். அடுத்த இரு மாதங்களுக்கு இத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலமே சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்ய முயன்ற போது போலீசாரை கற்களால் தாக்கிய சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்முடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடம் இருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. மது போதையை கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.