Skip to main content

துரத்திய கரோனா... கோவணத்துணியையும் உருவிய ஆம்னி பேருந்துகள்!

Published on 09/05/2021 | Edited on 09/05/2021


 

dddd

 

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மே-10 ஆம் தேதி முதல் இருவாரங்களுக்கு முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், பிழைப்புக்காக சென்னையில் வசித்துவந்த பலரும் சொந்த ஊருக்கு கிளம்பிச் செல்கின்றனர்.

 

இவர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு வசதியாக மே-8, 9 ஆகிய இரு தினங்களிலும் 24 மணிநேர போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கேற்ப, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில், நேற்று (மே-8) மாலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், போதுமான அரசுப்பேருந்துகள் இயக்கப்படுவதால் தனியார் பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அதேசமயம் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் பயணக்கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடத்தில் தெரிவித்திருந்தார்.

 

பொதுவாக, பண்டிகைக் காலங்களிலும் தொடர்விடுமுறை அறிவிக்கப்படும் தருணங்களிலும், கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி பயணிகளின் ’பர்சை’ பதம்பார்க்கும் தனியார் ஆம்னி பேருந்துகள், கொரோனா பேரிடர் காலத்தில் கருணை காட்டுகின்றனவா என்பதையறிய கோயம்பேடு பேருந்து நிலையத்தை வலம் வந்தோம்.

 

அலைமோதும் அளவுக்கு கூட்டம் அவ்வளவாக இல்லை என்ற போதிலும், அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளின் இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. நேற்று காலையில் முழு ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு அறிவித்த உடனே பலரும், பேருந்து சேவை கிடைக்குமா? கிடைக்காதோ? என்ற ஐயத்தில் ஆன்லைனில் தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.

 

தனியார் ஆம்னி பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் சிலரிடம் பேச்சுக்கொடுத்தோம். “போன லாக்டவுனே பரவாயில்லை. மதுரைக்கு வழக்கமா ஸ்லீப்பர் கோச்ல 800-க்கு போவேன். போன லாக்டவுனுக்குகூட ஆயிரம் ரூபாதான் வாங்குனாங்க. இப்போ 1500 ரூபாய்” என்றார் ஒரு பயணி.

 

தெளிவான முகவரியோடு வழங்கப்பட்டிருந்த அந்த தனியார் ஆம்னி பேருந்தின் முன்பதிவு சீட்டில் மதுரை வரையில் பயணிக்க (ஸ்லீப்பர் கோச்) இருபயணிகளுக்கான கட்டணமாக ரூ.3147.90 என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இன்னொரு ஆம்னி பேருந்தில் மதுரைக்கு சீட் இருக்கா என்றோம். ”எல்லாம் ஆன்லைன் புக்கிங்க். ஒரே ஒரு சீட்  (சாதாரண இருக்கை) இருக்கு 1200 ரூபாய்” என்றார் அப்பேருந்தின் ஊழியர்.

 

இன்னொரு ஆம்னி பேருந்தில் ஆம்னி பேருந்தில் திருச்சி வரை செல்ல சாதாரண இருக்கைக்கு ரூ 700.00. மற்றொரு ஆம்னி பேருந்தில், ஸ்லீப்பர் கோச்சில் திருச்சிக்கு பயணிக்க 1400.00. “இன்னைக்கும் நாளைக்கும் மட்டும்தான். வரும்போது எம்ட்டி அடிச்சிதான் வந்திருக்கோம். வரும்போது 500 ரூபாய்க்கு வந்தோம். போகும்போது வேற வழியில்லை.” அநியாயக்கட்டணம் 1400.00-க்கு அப்பேருந்து ஊழியர் சொன்ன விளக்கம் இதுவொன்றுதான்.

 

வேதாரண்யத்திற்கு 750.00; சிதம்பரத்திற்கு 700.00. இதையெல்லாம் விட பெருங்கொடுமை, நாகர்கோயில் வரை பயணிக்க (கவனிக்க ஸ்லீப்பர் கோச் அல்ல குளிர்சாதன வசதி அல்லாத சாதாரண இருக்கைக்கு) அந்த இளைஞர் ஆன்லைனில் முன்பதிவு செய்த தொகை ரூ.2499.00.

 

இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. பத்து நிமிட இடைவெளியில் கிடைத்த விவரங்கள் இவை. நாம் குறிப்பிட்டிருக்கும் ஆம்னி பேருந்துகளைத் தவிர மற்ற ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறைவாக இருக்கும் என்பதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை.

 

இதுபோன்று, தனியார் ஆம்னி பேருந்துகளில் அநியாயக்கட்டணம் வசூலிக்கப்படுவதென்பது தமிழகம் அறிந்திராத அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றுமில்லை. அதற்காக இவ்வளவு மெனக்கெட வேண்டிய அவசியமுமில்லை. மொபைலில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துக்கான ஆன்லைன் முன்பதிவு பொத்தானை அழுத்திய அடுத்தநொடியே எவரும் தெரிந்துக் கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

 

பயணிகளின் புகாருக்காக காத்திருக்காமல், கொரோனா பேரிடர் காலத்திலும் தொடரும் வழிப்பறிக்கு நிகரான இக்கட்டணக் கொள்ளையை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பும்.

 

இளங்கதிர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடங்களில் சார்ஜ் போடுபவர்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Cybercrime alert For those charging in public places

பொதுமக்கள் தேவைக்காக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிலும் பெரும்பாலான மக்கள், அவசர தேவைக்காக பொது இடங்களில் வைக்கப்படும் யூஎஸ்பி போர்டுகள் மூலம் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போடுவதை வழக்கமாக கொண்டு உபயோகித்து வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, ‘பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம், மக்கள் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம். அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் உங்கள் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. 

இந்த யு.எஸ்.பி போர்டுகளில், மோசடி கும்பல் யு.எஸ்.பி போர்ட் போன்ற கேட்ஜெட்டை மறைமுகமாக பயன்படுத்தி செல்போனில் உள்ள அனைத்து தரவுகளையும் திருட வாய்ப்பு உள்ளது. அதனால், மக்கள் கொண்டு செல்லும் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், பொது இடங்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் போது கவனமாக போட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Omni Bus Owners Case Dismissed in Supreme Court

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர்.  இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் இருப்பதால், தற்போதைக்கு சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி வழங்கப்படும்” என விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பான மனு கடந்த 9 ஆம் தேதி (09-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், ‘போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது’ என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து கோயம்பேட்டில் இருந்து கடந்த 10 ஆம் தேதி (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Omni Bus Owners Case Dismissed in Supreme Court

அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த உத்தரவில், “சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது. பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்களை குறித்து அறிய இயலும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கும் இடங்களாகக் குறிப்பிட வேண்டும். ஆம்னி பேருந்துகள் தங்களது பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் தவறான புரிதலால் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதை அனுமதிக்க இயலாது. தவறான கண்ணோட்டத்துடன் செயல்படும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிகோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில்   மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, ஏன் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரும் போது உங்கள் வாதங்களை முன்வைக்கலாம்” எனத் தெரிவித்து வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது. இந்த உத்தரவை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.