Skip to main content

கரோனா மூலம் இந்த அரசு ஆதாயம் தேடுகிறது! ஐ. பெரியசாமி குற்றச்சாட்டு!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

i periyasamy mla - dmk

 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமி மற்றும் மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி, கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியை கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.

 

அதில், தற்போது நமது மாவட்டத்திலும் அதிவேகமாக இந்தக் கரோனா வைரஸ் நோய் பரவி வருகிறது. அதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் பாதுகாப்பற்ற நிலையில் அன்றாடம் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பரிசோதனை செய்யாமல் அதிகப்படியான வைரஸ் தொற்று உள்ளவர்கள் மாவட்டம் முழுவதும் இருக்கும் நிலை உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பழனி, ஒட்டன் சத்திரம், கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர் மற்றும் ஆத்தூர் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களில் கரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் மற்றும் பரிசோதனை கருவிகள் அதிக அளவில் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் காவலர்கள் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்துப் பணியாளர்களுக்கும் முகக் கவசங்கள் வைரஸ் தடுப்பு உடைகள் மற்றும் கிருமி நாசினி ஆகியவற்றை மீண்டும் அதிகப்படியாக வழங்கி வைரஸ் பரவாமல் தடுப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டும். 

 

i periyasamy mla - dmk

 

நோயைக் கட்டுப்படுத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாவட்டம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் அதிகப்படியான பரிசோதனைக் கருவிகளை வழங்கி தினமும் பரிசோதனைகளை அதிகப்படுத்தி பாதிப்பு உடையவர்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு திண்டுக்கல் மாவட்ட மக்களை இந்த கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டத்தில் அதிதீவிரமாக கரோனா வைரஸ் பரவி வருகிறது அதன் மூலம் சமூக தொற்று பரவ போகிறது. கடந்த ஜூன் மாதம் 23 ஆயிரம் பேருக்கு இருந்த தொற்று தற்போது ஒரு லட்சத்தை எட்ட போகிறது. இதற்கு முழு காரணம் அரசுதான். இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். இந்தத் தொற்று முதன் முதலில் கேரளாவில் தான் வந்தது அதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது கேரள அரசு. அந்த அளவுக்கு இரண்டு மாதத்திற்கு அந்த மக்களுக்கு வீடுதேடி உணவுப் பொருட்களை வழங்கி வீட்டை விட்டு வெளியே வரவிடவில்லை. அதன் மூலம் 20ஆயிரம் கோடியை கேரளா அரசு செலவு செய்து மக்களைப் பாதுகாத்து இருக்கிறது.

 

ஆனால் இந்த அரசு மக்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை கடந்த 3 மாதமாக வெளியே தலை காட்டவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் எங்கள் தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் கரோனா தடுப்புக்கான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அப்படி இருந்தும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை. அதனாலேயே கரோனா பிடியில் தமிழகம் தீப்பிடித்து எரிகிறது. இதற்கு முழு காரணம் இந்த அ.தி.மு.க. அரசு தான். முதல்வரும் அறிவுரை சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார். எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்றுவது போல் நிலைதான் உள்ளது. 

 

http://onelink.to/nknapp

 

இந்த நிலை நீடித்தால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் பல லட்சம் பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்படுவார்கள். அந்தளவுக்கு மாநில உரிமைகள் பறிபோகிறது. இந்த அரசும் கரோனா மூலம் ஆதாயம் தேடுகிறது என்றுதான் சொல்லமுடியும். ஆனால் எங்கள் தலைவர் ஸ்டாலினோ கரோனா வைரஸில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று போராடி வருகிறார். அது போல் தி.மு.க. தொண்டர்களும்கூட  உயிரைத் துச்சமென நினைத்துப் போராடி வருகிறார்கள் என்று கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்