Contempt of court case against EPS!

முரண், மோதல் என அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் கடந்த 23 ஆம் தேதி வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபமான ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்தது. இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்பே பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தக்கூடாது, அப்படி நடத்தினால் ஒப்புதல் கொடுக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். அதனைத் தவிர்ந்து வேறெந்த தீர்மானமும் நிறைவேற்றப்படக் கூடாது என நீதிமன்றத்தில் சண்முகம் என்ற பொதுக்குழு உறுப்பினர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

காலை பொதுக்குழு என்ற நிலையில், இந்த வழக்கில் விடிய விடிய இது தொடர்பாக ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் பல்வேறு கேள்விகளை முன்வைத்த நீதிமன்றம், விசாரணையின் இறுதியில் 23 தீர்மானங்களைத் தவிர வேறெந்த தீர்மானமும் நிறைவேற்றப்படக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. அதனைத் தொடர்ந்து 23 ஆம் தேதி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, ஜூலை 11 மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், வழக்கைத் தொடர்ந்த சண்முகம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிப்பு, புதிய அவைத்தலைவர் நியமனம், அடுத்த பொதுக்குழு தேதி அறிவிப்பு போன்றவை நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.