Skip to main content

ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரசார்; ஈரோட்டில் பதற்றம் 

 

Congressman involved in rail strike; Tension in the erot
கோப்புப் படம்

 

ராகுல்காந்தி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்தும், அந்தத் தண்டனையை திரும்ப பெற வலியுறுத்தியும், எம்.பி. பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் இன்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈங்கூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை ஈங்கூர் ரயில் நிலையத்தில் சென்னிமலை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

 

இன்று காலை ஈங்கூர் நாலுரோட்டில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னிமலை வடக்கு வட்டார தலைவர் சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிச்சாமி மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், வட்டாரத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முருகேஷ், ரவி, கதிர்வேல், ஈஸ்வரமூர்த்தி, ராவுத்குமார், ஆண்ட முத்துச்சாமி, சர்வேஸ்வரன் சென்னிமலை முன்னாள் வட்டாரத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர்கள் தில்லை சிவக்குமார் கிருபாகரன் மாவட்ட பொதுச் செயலாளர் ஈங்கூர் சண்முகம் பனியம்பள்ளி நடராஜ் வாசுதேவன் சக்திவேல் அசோகபுரம் பழனிசாமி சீதாபதி பழனிவேல் மணி சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் மக்கள் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் ஈங்கூர் ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஈங்கூர் ரயில் நிலையம் நுழைவாயிலில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. உடனடியாக நிர்வாகிகள் ரயில்வே நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 


 

இதை படிக்காம போயிடாதீங்க !