பிரியங்கா ஆவேசம் - காரிய கமிட்டி கூட்டத்தில் பாதியில் வெளியேறிய ராகுல்

Congress Working Committee meets at AICC Delhi

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி பற்றி ஆராய அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல்காந்தி, ''கடந்த தேர்தலில் துணைத் தலைவராக இருந்தேன். அப்போது தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். அதேபோன்று இன்று ஏற்பட்ட தோல்விக்கு நானே முழுக்க பொறுப்பேற்றுக்கொள்கிறேன். இந்த தோல்விக்கான காரணத்தை நாம் முழுமையாக ஆய்வுப்படுத்த வேண்டும்'' என்று கூறியதுடன், தான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை கூட்டத்தில் அளித்துள்ளார்.

Congress Working Committee meets at AICC Delhi

அப்போது மன்மோகன் சிங், ''தேர்தல் என்றால் வெற்றியும் தோல்வியும் சகஜமானது. தோல்வி ஏற்பட்டது என்பதற்காகவே பதவி விலகுவது என்பது ஆரோக்கியமானதாக இருக்காது. உங்கள் தலைமை மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அதனால் உங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்க இயலாது. அதை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார் உருக்கமாக. அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும், ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேசினர்.

அப்போது பிரியங்கா குறுக்கிட்டு ஆவேசமாக பேசினார். பிரதமர் மோடிக்கு எதிராக என் சகோதரரை தனியாக போராட விட்டுவிட்டு, ஒதுங்கிக்கொண்டீர்கள். நீங்கள் எல்லாம் அப்போது எங்கே இருந்தீர்கள்? மோடிக்கு எதிராக ரபேல் விவகாரத்தையும், மோடியின் காவலாளி என்ற முழக்கத்துக்கு எதிராக என் சகோதரர் பேசியபோதும், அவரை யாரும் ஆதரிக்க முன்வரவில்லை. காங்கிரசின் தோல்விக்கு காரணமான அனைவரும் இந்த அறையில் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களை பார்த்து குற்றம் சாட்டிய பிரியங்கா. ராஜினாமா செய்வது, பா.ஜனதாவின் வலையில் விழுந்ததுபோல் ஆகிவிடும் என்று கூறி, ராஜினாமா செய்ய வேண்டாம் என்று ராகுலிடம் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் பிரியங்கா கடைசிவரை பங்கேற்றார். ராகுல் காந்தி, பாதியில் வெளியேறினார்.

congress loksabha election2019 priyanka gandhi Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe