Skip to main content

காங்கிரசை வெளியேற்றுகிறது திமுக?

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

 

திமுக-காங்கிரஸ் கட்சிகளிடையே ஏற்பட்ட உரசல் விரிவடைந்திருப்பதால் கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது திமுக!  
 

உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட அதிர்ப்தியால் திமுகவை விமர்சித்திருந்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. ப.சிதம்பரத்தின் கண்டிப்புக்குப் பிறகு திமுக தலைமையை சமாதானப்படுத்தும் வகையில் மீண்டும் அழகிரி ஒரு அறிக்கையை வாசித்தப்போதும் தனது கோபத்தை அறிவாலயம் குறைத்துக்கொள்ளவில்லை. 

 

mks

 


 

’’ இதன் எதிரொலிதான், பாஜகவின் தேசிய குடியுரிமை சட்டத்துக்கும், குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கும் எதிராக  சோனியா தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தை அவசரம் அவசரமாக புறக்கணித்தார் மு.க.ஸ்டாலின். திமுக சார்பில் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்  ‘’ என்கிறது அறிவாலாயம்.
 

இது தொடர்பாக திமுக தரப்பில் நாம் விசாரித்தபோது, ‘’ உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை எந்த சூழலிலும் திமுக மீறவில்லை. காங்கிரசுக்கு அதன் வலிமைக்கேற்பவும் தன்மைக்கேற்பவும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. காங்கிரஸ் பார்வையில் அந்த எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கலாம். அதற்கு திமுக ஒன்றும் செய்ய இயலாது. அவர்கள் பார்வையில் குறைவான இடங்கள் கொடுக்கப்பட்டதாக இருக்கும் சூழலிலேயே, ஆளும் கட்சி வீசும் வலையில் விழுந்திருக்கிறார்கள். இன்னும் அதிக இடங்களைத் தந்திருந்தால் ஒட்டு மொத்தமாக அதிமுக ஆதரவாளர்களாக மாறியிருப்பார்கள். அது, திமுகவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். 

 


 

ஆளும் கட்சியிடம் விலை போய்விடுவார்கள் என கருதிதான் குறைந்த எண்ணிக்கையில் சீட் கொடுத்தனர் மாவட்ட செயலாளர்கள். சீட் பங்கீட்டில் திமுக மீது அதிர்ப்தியிருந்தால், காங்கிரஸ் சுயேட்சையாக போட்டியிட்டு ஜெயித்து அதன் பிறகு திமுக மீது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும். ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது? கட்சியின் கை சின்னத்திலேயே போட்டியிட்டனர். சின்னத்தில் போட்டியிடுவதற்கு கே.எஸ்.அழகிரியின் கடிதம் அவசியம். அப்படியானால், மாநில தலைமையின் விருப்பம் மற்றும் அனுமதியின் பேரில்தானே திமுகவை எதிர்த்து போட்டி வேட்பாளர்களை நிறுத்தியது காங்கிரஸ் ? இதன் பின்னணியில்  ப.சிதம்பரத்தின் ஆதரவும் யோசனையும் இருந்துள்ளது. கூட்டணியின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் தலைவர்கள் கேள்விக்குறியாக்கியிருப்பதால் எதிர்வரும் மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி தொடர்வது கஷ்டம். இதனை காங்கிரசின் டெல்லி தலைமைக்கு உணர்த்துவதற்காகத்தான் சோனியா கூட்டிய கூட்டத்தை திமுக புறக்கணித்தது ‘’ என விவரிக்கிறார்கள் திமுக மா.செ.க்கள்.
 

இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி டி.ஆர்.பாலு, கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் திமுகவினர் கவலையில் இருந்தனர். கூட்டணி தர்மத்தை காக்கவில்லை என்று சொல்கிறார்கள். அது தவறான அறிக்கை. அந்த அறிக்கையை அவர் தவிர்த்திருக்கலாம் என்றார்.

 


 

காங்கிரஸ் உடனான கூட்டணி பழைய நிலைமைக்கு திரும்பியிருக்கிறதா? என்ற கேள்விக்கு, பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறதா இல்லையா என்பதை காலம் பதில் சொல்லப்போகிறது என்றார். 
 

அதேநேரத்தில் டெல்லியில் சோனியாகாந்தியை கே.எஸ்.அழகிரி இன்று காலை சந்தித்தார். இந்த சந்திப்பிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரசும் திமுகவும் இணைந்த கரங்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்