Skip to main content

மாவட்ட ஆட்சியரை அவதூறாக பேசியதாக புகார்... தி.மு.க மா.செ. மீது வழக்கு பதிவு...

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

 

புதுக்கோட்டையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் 17 ந் தேதி மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. இதில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பங்கீடு பற்றி முடிவெடுத்தக் கொள்வதாக ஆலோசிக்கப்பட்டது.
 

தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க தெற்கு மா.செ  (பொ) திருமயம் ரகுபதி எம்.எல்.ஏ பேசும் போது.. 

 

dmk ragupathi



உள்ளாட்சித் தேர்தலை ஏதாவது காரணம் சொல்லி தி.மு.க நீதிமன்றத்திற்கு சென்று நிறுத்தி விடுவார்கள் என்று அ.தி.மு.க நினைக்கிறது. அது நடக்காது. தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது.  அதாவது ஒரே தொகுதி தொடர்ந்து பொது தொகுதியாகவும், அதே போல தொடர்ந்து தனித் தொகுதிகளாகவும் உள்ளது. இதையெல்லாம் காரணம் காட்டி தி.மு.க கோர்ட்டுக்கு போகும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமாக நாங்க போகமாட்டோம். 
 

அடுத்து மாவட்ட ஊராட்சி குழுவுக்கும் பிரிச்சாச்சு. ஆனால் இப்ப மாவட்டம் பிரிச்சாச்சு. அதன் பிறகு மறு சுழற்சி வரவேண்டும். இப்ப 32 மாவட்டம் பிறகு 37 மாவட்டமாகும். அதில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இதெல்லாம் வச்சு நீதிமன்றம் போக வைக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் போகமாட்டோம். தேர்தலைச் சந்திக்கும் தில் எங்களிடம் உள்ளது.


 

உள்ளாட்சித் தேர்தலுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். அதாவது கலைஞர் ஆட்சி காலத்தில் காவிரி – குண்டாறு – வைகை திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ. 600 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாயனூரில் தடுப்பணையும் கட்டப்பட்டு ஆரம்பகட்டப்பணிகள் நடந்துள்ளது. 2011 தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க ஆட்சி வந்தது. ஆனால் தி.முக. ஆட்சி வந்திருந்தால் 2012 – 13 லேயே திட்டத்தை தி.மு.க நிறைவேற்றி இருக்கும். ஆனால் அ.தி.மு.க 2011 ல் கையில் எடுக்காத அ.தி.மு.க அரசாங்கம் இப்ப 2020 ல் திட்டம் செயல்படுத்த திட்டம் உள்ளதாக அறிவிக்லாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

ரோடு போட மட்டும் தான் பணம் வச்சிருக்காங்க. மற்ற திட்டங்களை செயல்படுத்த பணம் இருக்காது. ஏன்னா, ரோட்ல தான் 20 சதவீதம் கமிசன் கிடைக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ரூ. 600 கோடிக்கு இப்ப ரோடு போடும் பணி ஒதுக்கப்பட்டு அதில் கிடைக்கும் ரூ. 120 கோடியை உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
 

கடந்த சில நாட்களாக நடக்கும் மனு நீதி முகாம் என்பது பிளேயிங் விசிட். 100 நாள் வேலை பெண்களை வைத்து படம் எடுத்துக் கொண்டு போறாங்க. மக்களிடம் வாங்கிய மனு என்ன என்று சொல்ல முடியுமா?  இப்ப தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக இந்த பிளேயிங் விசிட் முகாம் நடத்துறாங்க. அரை மணி நேரத்தில் 2 ஆயிரம் மனு வாங்குவது சாத்தியமா?
 

இன்று நடக்கும் கூட்டுறவு வார விழாவுக்காக பத்திரிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விளம்பரங்களில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி எம்.எல்.ஏக்கள் பெயர் இல்லை. கூட்டுறவு துறை அமைச்சர் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். ஆனால் தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத அறந்தாங்கி ரெத்தினசபாபதி, கந்தர்வகோட்டை ஆறுமுகம் ஆகிய எம்.எல்.ஏக்கள் பெயர்கள் உள்ளது. 


 

அதனால எங்கள் ஆட்சி வந்ததும் கூட்டுறவு சங்கங்களில் தணிக்கை செய்யப்படும். கூட்டுறவு சங்கங்கள் சரியாக நடக்கவில்லை என்று கலைக்கப்படும். அத்தனை கூட்டுறவு சங்க தலைவர்களிடம் இருந்தும் இந்த விளம்பரக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்பீர்களா என்ற கேள்விக்கு? ஆட்சியர் அ.தி.மு.க பிரமுகர் ஆகிட்டாங்க. எப்படி விளக்கம் கேட்கிறது என்று கூறினார். 
 

இந்த வீடியோ நக்கீரன் இணையத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மச்சுவாடிப் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க மாவட்ட வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஷேக் திவான் புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் திருமயம் தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி மாவட்ட ஆட்சித் தலைவரை அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலிசார் ரகுபதி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

மேலும் அதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் தி.மு.க வடக்கு மா.செ (பொ) வழக்கறிஞர் செல்லப்பாண்டியனும் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.தி.மு.க நிர்வாகி போல செயல்படுவதாக கூறியுள்ளார் என்று அவர் மீதும் புகார் கொடுக்க அ.தி.மு.க வினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.