Advertisment

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் (31.01.2025) தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான விவகாரம், வக்பு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி நாளை (30.01.2025) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரைச் சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு கோரிக்கை வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் எம்.பி.க்கள் கூட்டம் இன்று (29.01.2025) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். அப்போது திமுக சார்பில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர்களுக்கு நடத்தை விதிகள் (Code of Conduct) உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் (Time Frame) செய்திடவும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக வலியுறுத்தும்.

Advertisment

மக்களின் துணையுடன் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மத்திய பா.ஜ.க. அரசை பணிய வைத்து டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் துணை நின்ற மக்களுக்கும் நன்றி. உருக்கு இரும்பு 5370 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ் நிலத்தில் அறிமுகமாகியுள்ளது என உலகுக்கு அறிவித்த திராவிட மாடல் அரசின் சாதனையை மத்திய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Code of conduct should be made for governors  DMK Resolution

கூட்டாட்சி தத்துவம் மாநில கல்வி உரிமை உயர் கல்வி அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல்கலைக்கழக நிதி நல்கை குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக் கோரி திமுக மாணவரணி, திமுக எம்.பி.க்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம். தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாமல் கடந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய பா.ஜ.க. அரசு, இந்த முறை தமிழ்நாட்டின் திட்டங்கள், பேரிடருக்கு நிதி ஒதுக்கீடும், மாநிலத்திற்கு முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களையும் அறிவித்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.